search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்தா புயல் நெல்லூர் அருகே 12-ந் தேதி கரையை கடக்கும்
    X

    வார்தா புயல் நெல்லூர் அருகே 12-ந் தேதி கரையை கடக்கும்

    வங்க கடலில் உருவாகியுள்ள ‘வார்தா’ புயல் 12-ந் தேதி முற்பகல் நெல்லூர்-காக்கி நாடா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை மைய இயக்குனர் கூறியுள்ளார்.
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘வார்தா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென் கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுபெற்று புயலாக மாறியுள்ளது.

    வார்தா என பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 1060 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கு நகர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது . அந்த புயல் 12-ந் தேதி முற்பகல் நெல்லூர்-காக்கி நாடா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    10-ந் தேதி முதல் மீனவர்கள் ஆந்திர கடல்பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பிடும் அளவுக்கு மழை இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×