search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோகத்தில் மூழ்கிய தமிழ்நாடு: மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம்
    X

    சோகத்தில் மூழ்கிய தமிழ்நாடு: மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம்

    ஜெயலலிதா உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
    சென்னை:

    தமிழக மக்களின் ஏகோபித்த அன்பை பெற்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

    உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தியை அறிந்ததும் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. அ.தி.மு.க.வினர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்ஸ் வேனில் இரவு 2.15 மணிக்கு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று அதிகாலை ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் அவரது இல்லத்தில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்துக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு காலை 6 மணி முதல் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

    ஜெயலலிதா உடலுக்கு பச்சை நிற பட்டுச் சேலை கட்டப்பட்டு இருந்தது. கைக்கெடிகாரம், கழுத்தில் தங்க சங்கிலி, காதில் வைர கம்மல், கைகளில் வளையல்கள், கை விரல்களில் மோதிரம் ஆகியவை அணிவிக்கப்பட்டு இருந்தன.

    ஜெயலலிதாவின் உடல் மீது முதலில் அ.தி.மு.க. கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பின்னர் அரசு மரியாதை செலுத்தும் வகையில், கட்சி கொடி அகற்றப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டது.

    ஜெயலலிதாவின் உடல் அருகே தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் இறுகிய முகத்தோடும், கண்ணீரோடும் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதார். அமைச்சர்கள் உடல் அருகே நின்றிருந்தனர்.

    காலை 6 மணி முதல் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அஞ்சலி செலுத்துவதற்காக காலையில் இருந்தே பொதுமக்கள் சாரை, சாரையாக ராஜாஜி மண்டபத்தை நோக்கி வரத்தொடங்கினார்கள். கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகத்தை பார்க்காத அ.தி.மு.க.வினர் அவரை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் கண்ணீரும், கம்பலையுமாக வந்தனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். லட்சக்கணக்கானோர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தவும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    ஜெயலலிதாவின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். ராகுல் காந்தியுடன் டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் வந்து இருந்தனர்.




    கேரள கவர்னர் சதாசிவம், மாநில முதல்-மந்திரிகள் சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), சித்தராமையா (கர்நாடகம்), பினராயி விஜயன் (கேரளா), தேவேந்திர பட்னாவிஸ் (மராட்டியம்), சிவராஜ் சிங் சவுகான் (மத்தியபிரதேசம்), நவீன் பட்நாயக் (ஒடிசா), நாராயணசாமி (புதுச்சேரி), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்-மந்திரி ராமசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.



    சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின்,
    மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருடைய மனைவி கயல்விழி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட ஏராளமான கட்சி தலைவர்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.



    மேலும் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கார்த்தி, சத்யராஜ், உதயநிதி மற்றும் சரோஜாதேவி, நயன்தாரா, குஷ்பு, சிம்ரன், கவுதமி உள்ளிட்ட ஏராளமான நடிகர்-நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.




    நேரம் செல்லச் செல்ல அஞ்சலி செலுத்துவதற்காக வந்த கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். பொதுமக்களும், தொண்டர்களும் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பலர் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். ராஜாஜி மண்டபத்தை சுற்றியுள்ள அண்ணாசாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை வழியாக மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து கொண்டிருந்தனர்.

    சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அவரது சமாதியின் அருகே, ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அஞ்சலி செலுத்தி முடிந்ததும் மாலை 4.17 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டி மூடப்பட்டு முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை முப்படை வீரர்கள் சுமந்து சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றினர். அந்த வாகனம் ராணுவ வாகனத்துடன் இணைக்கப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் முப்படை வீரர்கள் ஏறினார்கள். அஞ்சலி செலுத்த தாமதமாக வந்த உத்திரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் அந்த வாகனத்தில் ஏறினார்.

    அந்த வாகனத்தின் நான்கு புறங்களிலும் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது.

    மாலை 4.28 மணிக்கு அங்கிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

    ஊர்வலத்தின் முன்னால் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என முக்கிய நிர்வாகிகள் நடந்து சென்றனர். சுவாமி சிவானந்தா சாலையில் இடதுபக்கமாக திரும்பிய இறுதி ஊர்வல வாகனம், அண்ணா சாலை பெரியார் சிலை அருகே மீண்டும் இடதுபுறம் திரும்பியது. அண்ணா சாலையில் அந்த வாகனம் மெதுவாக பயணித்தது. ஜெயலலிதா உடல் மீது சாலையில் ஆங்காங்கே உயரமான பகுதியில் நின்ற அ.தி.மு.க. தொண்டர்கள் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும், உயரமான கட்டிடங்களின் மீது நின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அங்கிருந்த படியே ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே சென்ற இறுதி ஊர்வல வாகனம், வாலாஜா சாலையில் திரும்பி மெரினா கடற்கரை நோக்கி மெதுவாக சென்றது. சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு இருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பின்னால், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதனால் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாகவே காட்சி அளித்தது.

    ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் மாலை 5.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிடம் முன்பு வந்து நின்றது. பின்னர், வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவின் உடல் இறக்கப்பட்டு, உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. முப்படை வீரர்கள் அவரது உடல் இருந்த பெட்டியை சுமந்து சென்றனர்.

    அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் சுமார் 40 அடி தூரத்தில், ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. குழிக்கு வெளியே ஜெயலலிதாவின் உடலை வைப்பதற்காக சந்தன பேழை தயாராக வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது.


    பின்னர், இந்து முறைப்படி ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதில் சசிகலா, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் ஆகியோர் கலந்துகொண்டு பால் ஊற்றி, உப்பு, பூக்கள் தூவி இறுதிச் சடங்குகளை செய்தனர். அதன் பின்னர், மாலை 6 மணிக்கு சந்தன பேழைக்குள் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. அவரது உடலில் அணியப்பட்டு இருந்த எந்த ஆபரணமும் அகற்றப்படவில்லை. பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கின. அதனைத் தொடர்ந்து, மாலை 6.05 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட பெட்டி, குழிக்குள் கயிறு மூலம் மெதுவாக இறக்கப்பட்டது.

    சசிகலா உள்ளிட்டோர் குழியை சுற்றி வந்து ரூபாய் நோட்டு, சந்தன மரத்துண்டு ஆகியவற்றை குழிக்குள் போட்டு சில சடங்குகளை செய்தனர். அதன்பின்னர், குழி மூடப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்கள் தூவப்பட்டன. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெற்றது.

    பின்னர், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் விரைவில் நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. 
    Next Story
    ×