search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார்: விடுமுறையில் இருந்தவர்கள் பணிக்கு திரும்பினர்
    X

    தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார்: விடுமுறையில் இருந்தவர்கள் பணிக்கு திரும்பினர்

    தமிழகம் முழுவதும் இரவோடு இரவாக விடுமுறையில் இருக்கும் அனைத்து போலீசாரும் பணிக்கு திரும்பினர்கள்.

    சென்னை:

    முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் கிரீம்ஸ் ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் இருந்து கிரீம்ஸ் ரோட்டுக்கு திரும்பும் இடம், எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் சிக்னலில் இருந்து கிரீம்ஸ் ரோடு திரும்பும் இடம், கிரீம்ஸ் ரோட்டில் இருந்து அப்பல்லோ திரும்பும் வழி, ஆஸ்பத்திரியின் மெயின் கேட் ஆகிய இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் அரண் போல் நிற்கிறார்கள்.

    தொண்டர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதிகாரிகள், டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள் மட்டுமே கிரீம்ஸ் ரோடு வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கிரீம்ஸ் ரோட்டில் இருந்து அப்பல்லோ செல்லும் வழியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்றவர்களை தவிர யாரையும் அனுமதிக்க வில்லை. ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் செல்ல முக்கிய பிரமுகர்களை தவிர யாரையும் அனுமதிக்க வில்லை.

    மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார்.

    இரவோடு இரவாக விடுமுறையில் இருக்கும் அனைத்து போலீசாரும் உடனடியாக பணிக்கு திரும்பும்படி உத்தரவிடப்பட்டது. காலை 7 மணிக்கு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் சீருடையுடன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து இன்று அதிகாலையிலேயே போலீசார் பணிக்கு திரும்பினார்கள்.

    மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×