search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
    X

    அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

    அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளது.
    சென்னை:

    அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளது.

    தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் ஏமாற்றிவிட்டது.

    வடகிழக்கு பருவமழை பொய்த்து விடுமோ? என விவசாயிகள் கவலை அடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி, புயலாக மாறியது. ‘நாடா’ என்று பெயரிடப்பட்ட அந்த புயல் பின்னர் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன்தினம் அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. இதனால் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு நோக்கி நகர்ந்து சென்ற அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஸ்டெல்லா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்தமிழகத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே நிலை கொண்டு இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. இந்த மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து புயலாக மாறினால் அதற்கு ‘வார்தா’ என்று பெயர் சூட்டப்படும். மேலும் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் பட்சத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    இதுபற்றி எஸ்.ஸ்டெல்லா கூறுகையில், அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

    இந்த மேலடுக்கு சுழற்றி தற்போது தமிழகத்தில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு விவரம் வருமாறு:-

    விருதுநகர், கல்பாக்கம் தலா 8 செ.மீ., சென்னை விமானநிலையம், மதுரை விமானநிலையம், சிவகாசி, திருத்தணி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருமங்கலம் தலா 7 செ.மீ., செம்பரம்பாக்கம், பூந்தமல்லி தலா 6 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், வேலூர், பரமக்குடி தலா 5 செ.மீ., அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் தலா 4 செ.மீ., பூண்டி, அருப்புக்கோட்டை தலா 3 செ.மீ., மேலூர், ஊட்டி, திண்டிவனம் தலா 2 செ.மீ. மழை பெய்து உள்ளது. தமிழகத்தில் மேலும் சில பகுதிகளிலும் லேசான மழை பெய்து உள்ளது. 
    Next Story
    ×