search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே மூதாட்டி கொடூரக்கொலை
    X

    நாமக்கல் அருகே மூதாட்டி கொடூரக்கொலை

    நாமக்கல் அருகே வீட்டிற்கு முன்பு தூங்கிய மூதாட்டியின் கைகளை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் அருகே வீட்டிற்கு முன்பு தூங்கிய மூதாட்டியின் கைகளை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாவுரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி அத்தாயி என்கிற கண்ணம்மாள் (வயது 60). இவர்களுக்கு துரைராஜ் என்ற மகன் இருந்தார். அவர் இறந்து விட்டதால் மருமகள் லதாமணி வேறு திருமணம் செய்து கொண்டு மாணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.

    ஏற்கனவே கணவர் செல்லமுத்துவும் இறந்து விட்டதால் கண்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு வீடு திரும்பிய கண்ணம்மாள், சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு முன்பு உள்ள வாசலில் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.

    இதற்கிடையே நேற்று காலையில் மூதாட்டி கண்ணம்மாள் மர்மமான முறையில் அவருக்கு சொந்தமான கிணற்றில் பிணமாக மிதந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் கண்ணம்மாளின் பிணத்தை மீட்டனர். அப்போது அவரது முகம் மற்றும் கைகள் துணியால் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோமதி வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டு இருந்த மூதாட்டி கண்ணம்மாளை முகம் மற்றும் கைகளை துணியால் கட்டி கிணற்றில் தூக்கிபோட்டு இருப்பதும், இதில் தண்ணீரில் மூழ்கி அவர் இறந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    இருப்பினும் அவரை யார், எதற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. மூதாட்டியின் சொத்தை அபகரிக்க யாராவது அவரை கொலை செய்தார்களா? வேறு ஏதேனும் காரணம் உண்டா? எனவும் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×