search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் முதலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு புத்தகம்
    X

    முதல் முதலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு புத்தகம்

    அரசு பள்ளிகளில் படிக்கும் 3-வது வகுப்பு, 4-வது வகுப்பு, 5-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது. இந்த புத்தக வினியோகம் தொடங்கியது. இந்த மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட 14 வகையான கல்வி கற்க தேவையானவற்றை விலை இன்றி தமிழக அரசு வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 3-வது, 4-வது, 5-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம் விலை இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அந்த வாய்ப்பாடு புத்தகத்தில் பெருக்கல் வாய்ப்பாடு, கூட்டல் வாய்ப்பாடு, கழித்தல் வாய்ப்பாடு, பெருக்கல் அட்டவணை, வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுகோணம், உருளை, கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அடிப்படை அளவுகள், கொள்ளளவு, நிறுத்தல் அளவு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் வருடத்திற்கு எத்தனை நாட்கள், லீப் வருடத்திற்கு எத்தனை நாட்கள், வருடத்திற்கு எத்தனை மாதங்கள், எத்தனை வாரங்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் உள்ளிட்ட காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த வாய்ப்பாடு புத்தகங்கள் அரசு பள்ளிகளில் 3-வது, 4-வது, 5-வது படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. அதற்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 70 ஆயிரம் வாய்ப்பாடு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    அனுப்பப்பட்ட பள்ளிகளில் இந்த வாய்ப்பாடு கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் நடுநிலைப்பள்ளியில் நேற்று வாய்ப்பாடு வினியோகம் தொடங்கியது. அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அதிகாரி லட்சுமிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமேஸ்வரி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாவித்ரி ஆகியோர் வழங்கினார்கள்.

    அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

    Next Story
    ×