search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துமலை அருகே சொத்து தகராறில் விவசாயி படுகொலை
    X

    ஊத்துமலை அருகே சொத்து தகராறில் விவசாயி படுகொலை

    ஊத்துமலை அருகே சொத்து தகராறில் தலையில் கல்லைப்போட்டு விவசாயி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள பலபத்ரராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 65). விவசாயி. இவர் அவ்வப்போது அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தின் முன்பு படுத்து தூங்குவாராம். அதுபோல நேற்று இரவும் அவர் அங்கு படுத்து தூங்கினார்.

    இன்று அதிகாலை அங்கு வந்த ஒரு நபர் அருகில் கிடந்த பாறாங்கல்லை தூக்கி சங்கரபாண்டியன் தலையில் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். அந்த பகுதிக்கு வந்தவர்கள் சங்கரபாண்டியன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் ஊத்துமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கரபாண்டியனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சங்கரபாண்டியனை கொன்றது யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவரை அவருடைய மகனை கொன்ற திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

    சங்கரபாண்டியனுக்கு பலபத்ரராமபுரத்தில் ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தை அதிக விலைக்கு ஒருவர் கேட்டுள்ளார். இதனால் அதை விற்பனை செய்ய முடிவு செய்து சங்கரபாண்டியன் பேச்சுவார்தை நடத்தி உள்ளார். இதற்கு அவரது மகன் சொரிமுத்து (40) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அந்த இடம் தனது உபயோகத்துக்கு வேண்டும் என்றும், இப்போது விற்பனை செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் தந்தை- மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சங்கரபாண்டியன் வீட்டில் படுத்து தூங்காமல் சமுதாய நலக்கூடத்திற்கு சென்று அங்கு தூங்கியுள்ளார்.

    இது சொரிமுத்துவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தை தனக்கு தெரியாமல் நிலத்தை விற்பனை செய்து விடுவாரோ என்று பயந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் தந்தை தூங்கும் இடத்திற்கு சென்ற சொரிமுத்து, அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதையடுத்து ஊத்துமலை போலீசார் சொரிமுத்துவை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×