search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சத்தீவு: ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடிப்பு
    X

    கச்சத்தீவு: ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை தாக்கி துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் மற்றும் வலைகளை அறுத்து எறிந்தும் சேதப்படுத்தினர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக இந்த தாக்குதல் இல்லாது இருந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தங்களது தாக்குதலை நடத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன்பிடிக்க கூடாது. உடனே புறப்பட்டு செல்லுங்கள் என ராமேசுவரம் மீனவர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அச்சம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட தொடங்கினர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களையும் தாக்கினர்.

    துப்பாக்கி முனையில் நடந்த இந்த தாக்குதல் மீனவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும், கடலில் விரித்திருந்த வலைகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். இதனால் மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவிலேயே கரை திரும்பினர்.

    அவர்கள் கூறும்போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள், மீன்பிடி சாதனங்கள் போன்றவற்றை இழந்துள்ளோம். படகுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றனர்.
    Next Story
    ×