search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லிக்குப்பத்தில் நள்ளிரவில் பஸ் கண்ணாடி உடைப்பு; டிரைவர்-கண்டக்டர் மீது மர்ம கும்பல் தாக்குதல்
    X

    நெல்லிக்குப்பத்தில் நள்ளிரவில் பஸ் கண்ணாடி உடைப்பு; டிரைவர்-கண்டக்டர் மீது மர்ம கும்பல் தாக்குதல்

    நெல்லிக்குப்பத்தில் நள்ளிரவில் பஸ் கண்ணாடி உடைத்து டிரைவர்-கண்டக்டரை தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூரில் இருந்து நெல்லிக்குப்பத்துக்கு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் பிரதாப்(வயது 27) ஓட்டினார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் இரவு 10.30 மணிக்கு நெல்லிக்குப்பம் வந்தது. வயிடப்பாக்கத்தில் பஸ் திரும்பியபோது 10 பேர் கொண்ட கும்பல் திடீரென்று பஸ்சை வழிமறித்தது. பஸ் நின்றதும் கத்தி, அரிவாள், தடி போன்ற ஆயுதங்களால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தது.

    இதைப்பார்த்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பஸ் டிரைவர் பிரதாப், மற்றும் கண்டக்டர் குமரேசன்(30) ஆகியோர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தனர். பஸ் கண்ணாடியை உடைத்தவர்களை தடுக்க முயன்றனர்.

    உடனே அவர்களையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் பிரதாப், குமரேசன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். பின்னர் அந்த கும்பல் பஸ்சின் பின்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த பிரதாப், குமரேசன் ஆகிய இருவரையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பஸ்மீது தாக்கிய மர்ம கும்பல் யார்? எதற்காக தாக்கினார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×