search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாஸ்பேட்டையில் கட்டிட மேஸ்திரி தற்கொலை
    X

    லாஸ்பேட்டையில் கட்டிட மேஸ்திரி தற்கொலை

    லாஸ்பேட்டையில் கோபித்து சென்ற மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வேதனை அடைந்த கட்டிட மேஸ்திரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை நெருப்பு குழி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதற்கிடையே மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட முருகன் தினமும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இது போல் முருகன் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை சுதா கண்டித்து தட்டிக் கேட்ட போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து முருகன் தலையில் சுதா தாக்கினார். இதில் முருகனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்ததும் பயந்து போன சுதா, தனது குழந்தைகளுடன் குறிஞ்சி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு தங்கி இருந்து வந்தார். மனம் மாறிய முருகன் நேற்று முன்தினம் குறிஞ்சி நகருக்கு சென்று மனைவியை மன்னித்து விட்டதாகவும், குடும்பம் நடத்த வருமாறும் அழைத்தார். ஆனால், முன்பிருந்த கோபத்தால் தன்னை கணவன் தாக்கி விடுவாரோ? என பயந்து சுதா குடும்பம் நடத்த வர மறுத்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த முருகன் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் வீடு திரும்பிய அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டு உத்திரத்தில் தூக்குபோட்டு தொங்கினார். வெகுநேரமாக வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை திறந்து பார்த்தனர். அப்போது முருகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×