search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்துங்கநல்லூரில் இன்று துணிக்கடையில் தீ விபத்து: ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
    X

    செய்துங்கநல்லூரில் இன்று துணிக்கடையில் தீ விபத்து: ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

    செய்துங்கநல்லூரில் இன்று அதிகாலையில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது45). இவர் அப்பகுதியில் உள்ள வசவப்பபுரம் ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல நேற்று இரவு ஆல்பர்ட் மற்றும் கடை ஊழியர்கள் துணிக்கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென ஆல்பர்ட்டின் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமன்ராஜா தலைமையிலான போலீசார் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். அவர்கள் துணிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் கடையில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து நாசமானது.

    சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாலையில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் செய்துங்கநல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×