search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னராஜூக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி
    X

    சின்னராஜூக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்: பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி

    சின்னராஜூக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பாண்டியம்மாளின் தந்தை கண்ணீர் பேட்டி அளித்தார்.


    பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    4 பேரின் உடல்களையும் வாங்குவதற்காக நேற்று மாலை வரை யாரும் வரவில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு பாண்டியம்மாளின் தந்தை பால்சாமி (65)சென்னை வந்தார். 4 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

    மகள் மற்றும் பேத்திகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள பிரேதபரிசோதனை அறை முன்பு காத்திருந்தார்.

    அப்போது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:–

    எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கோட்டையிருப்பு கிராமம். நான் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு பாண்டியம்மாள் தவிர 2 மகன்கள் உள்ளனர்.

    இருவரும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள். எனது மனைவி இறந்து விட்டார். எனது மகள், மகன்களை நான்தான் வளர்த்தேன்.

    பாண்டிம்மாளை நல்ல இடத்தில் தான் திருமணம் செய்து கொடுத்தேன். பாண்டியம்மாளின் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து தனியாக சென்று விட்டார். இதனால் பாண்டியம்மாள் 3 மகள்களுடன் தவித்தார்.

    அப்போது தான் பாண்டியம்மாளுக்கும் சின்ன ராஜூககும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு பாண்டியம்மாள் மகள்களை அழைத்துக் கொண்டு சின்னராஜூடன் சென்னை வந்து விட்டார். இது தெரியாமல் நான் மகளையும், பேத்திகளையும் தேடி அலைந்தேன்.

    1 வருடத்துக்கு பிறகு சென்னையில் வசிப்பதாக பாண்டியம்மாள் எனக்கு போன் செய்தார். நான் சென்னைக்கு வந்து பார்த்தேன். அப்போது அவர்கள் சந்தோ‌ஷமாக குடும்பம் நடத்தினார்கள். இதனால் நான் அவர்கள் இஷ்டப்படி சந்தோ‌ஷமாக வாழ்ந்தால் சரி என்று விட்டு விட்டேன்.

    கடந்த 19-ந் தேதி குடும்பத்துடன் எங்கள் ஊருக்கு வந்தனர். அப்போதும் பிரச்சினை இருப்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை. நன்றாக வாழ்கிறார்கள் என்று தான் நான் நினைத்தேன். மறுநாள் சென்னை திரும்பியதும் சின்னராஜ் எனது மகளையும், பேத்திகளையும் கொன்று விட்டான். எனது மகளுக்கு வாரிசே இல்லாமல் செய்து விட்டான். 4 பேரையும் துடிதுடிக்க கொன்ற அவனுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×