search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 9-ந்தேதி-சேலம், 10-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 11-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-பொள்ளாச்சியில் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    • 1-ந்தேதி-சேலம், 2-ந்தேதி-நாமக்கல், 3-ந்தேதி-பெரம்பலூர், 4-ந்தேதி-திருச்சி, 5-ந்தேதி-கோவையில் நடிகர் போஸ் வெங்கட் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    நாஞ்சில் சம்பத் சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    3-ந்தேதி திருநெல்வேலி, 4-ந்தேதி-விருதுநகர், 5-ந்தேதி-தென்காசி, 6-ந் தேதி-தூத்துக்குடி, 7-ந் தேதி-ராமநாதபுரம், 8-ந் தேதி-மதுரை, 9-ந்தேதி-சேலம், 10-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 11-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-பொள்ளாச்சி, 13-ந்தேதி-திருப்பூர், 14-ந் தேதி-கோவை, 15-ந்தேதி-நீலகிரி.

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர், நடிகர் கருணாஸ் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    2-ந்தேதி-சிவகங்கை, 3 மற்றும் 4-ந்தேதி-ராமநாதபுரம், 5-ந்தேதி-திருநெல்வேலி, 6-ந்தேதி-தென்காசி, 7-ந்தேதி-விருதுநகர், 11 மற்றும் 12-ந்தேதி-தேனி, 13-ந் தேதி-மதுரை, 14-ந்தேதி-திண்டுக்கல்.

    நடிகர் போஸ் வெங்கட் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    1-ந்தேதி-சேலம், 2-ந்தேதி-நாமக்கல், 3-ந்தேதி-பெரம்பலூர், 4-ந்தேதி-திருச்சி, 5-ந்தேதி-கோவை.

    நடிகர் வாசு விக்ரம் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம்:-

    3-ந்தேதி-திருவள்ளூர், 4-ந்தேதி-அரக்கோணம், 5-ந்தேதி-வேலூர், 6-ந் தேதி-கிருஷ்ணகிரி, 7-ந்தேதி-திருவண்ணாமலை, 8-ந்தேதி-ஆரணி, 9-ந்தேதி-காஞ்சிபுரம், 10-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், 11-ந்தேதி-தென்சென்னை, 12-ந்தேதி-மத்திய சென்னை.

    • திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
    • நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் ஒருவர் வந்து அமர்ந்து மற்றவர்களுடன் சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார். திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

    பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரையும் ஓட்டு போட விடமாட்டேன் என கூறி ரகளை செய்தார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் வேட்பு மனுவும் தாக்கல் செய்யவில்லை.

    தொடர்ந்து அந்த நபரை போலீசார் வெளியேற்றினர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் மோப்ப நாய் ஆதவன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று பள்ளி கட்டிடம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.
    • மூடப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் பகுதியில் மூடப்பட்ட தனியார் பள்ளி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் "மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு குண்டு வைத்து உள்ளேன், சிறிது நேரத்தில் வெடிக்கும்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதுபற்றி உடனடியாக அசோக் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் மோப்ப நாய் ஆதவன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று பள்ளி கட்டிடம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இந்த பள்ளி கடந்த 2021-ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.
    • 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் மங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று இந்த ரெயில் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.

    ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள ஜாஷ்பூரை சேரந்தவர் சுஷாந்த் சாஹூ(வயது41). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் மங்களூருவில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் பயணித்துள்ளார்.

    அந்த ரெயில் காசர்கோடு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரெயிலில் இருந்து சுஷாந்த் சாஹூ இறங்கியுள்ளார். அப்போது ரெயில் புறப்பட்டுவிட்டது. இதனால் ஓடும் ரெயிலில் அவர் ஏற முயன்றார். அப்போது சுஷாந்த் சாஹூ தவறி விழுந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கினார்.

    இதில் படுகாயமடைந்த அவர் உடல் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மங்களூரு-சென்னை ரெயில் நிறுத்தப்பட்டது. சுஷாந்த் சாஹூவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் புறப்பட்டது. காசர்கோடு-கும்ப்ளா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது அந்த ரெயிலில் இருந்து ஒரு வாலிபர் விழுந்தார். இதனை அந்த பெட்டியில் பயணித்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் சோதனை செய்தனர். அப்போது காசர்கோடு ரெயில் நிலையம் அருகே அந்த வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்ணூர் குத்து பரம்பு பகுதியை சேரந்த ரபி என்பவரிரன் மகன் ரனீம்(18) என்பது தெரிய வந்தது.

    அவர் மங்களூருவில் உள்ள என்நிஜூயரிங் கல்லுரியில் படித்து வந்திருக்கிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டார். அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • போலீசார் அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    • மதுபானங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ளது குமரப்ப குடிப்பட்டி கிராமம். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய இங்கு தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான ஆலை இயங்குவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் அந்த வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபான ஆலை செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மதுபானம் தயாரித்து, பாட்டில்களை அடைத்து விற்பனைக்கு கொண்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மதுபானங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக போலியான மதுபான ஆலை நடத்தி வந்த சிங்கம்புணரியை சேர்ந்த ராமசாமி மனைவி மங்களம் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.அரசு நடவடிக்கை எடுத்தது.
    • தி.மு.க.வின் சாதனை 33 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.50ஆயிரம் கோடிக்கு உயர்த்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே அவர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது:-

    எனது தேர்தல் பிரசாரத்தை ஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்குகிறேன். மோடி ஆட்சியில் 40 லட்சம் கோடி தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    பொருளாதாரத்தில் இந்தியா 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் ஒரு நாடு உயர்ந்தால் தன் மக்கள் உயரமுடியும். அது மோடியால் மட்டும் தான் முடியும். இதுதான் பா.ஜனதா அரசின் சாதனை.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் அவர்களது பொருளாதாரம் மட்டுமே உயர்த்து உள்ளது. டிஆர்.பாலு மற்றும் அவரது குடும்ப சொத்து மதிப்பு 350 மடங்கு உயர்த்து உள்ளது.

    சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவையே தி.மு.க. செய்த சாதனை. சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.அரசு நடவடிக்கை எடுத்தது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்து விட்டார்.

    இதே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர்களிடம் தி.மு.க. புகைப்படம் எடுத்து கொண்டது. இது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.சமூக நீதி என்பது தி.மு.க.வில் பேச்சளவில் தான் உள்ளது.

    இந்தியாவில் வங்கி கடனை வாங்கிவிட்டு பலர் ஓடிவிட்டனர். மோடி ஆட்சிக்கு வந்த உடன் எல்லோரையும் சுளுக்கு எடுக்க ஆரம்பித்தோம். யார் எல்லாம் கடன் வாங்கினார்கள்? யார் எல்லாம் திருப்பி செலுத்தவில்லை? என கணக்கெடுத்து வரா கடனில் இருந்து ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த 10ஆண்டில் மத்திய பா.ஜ.க. அரசு மூலம் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியாக வந்து உள்ளது. ஆனால் தி.மு.க.வின் சாதனை 33 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.50ஆயிரம் கோடிக்கு உயர்த்தி உள்ளது.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு 1 சதவீதம் கூட வாக்களிக்க உங்களுக்கு மனம் வராது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு ரூ.11ஆயிரத்து 930கோடி ஒதுக்கீடு செய்து இந்த பகுதி பொருளாதார வளர்ச்சிக்கு வழிசெய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர்.
    • அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகிய மூவரும் வர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர். ராகுல் செல்ல முடியாத இடங்களுக்கு பிரியங்காவும், அதேபோல் கார்கேவும் செல்வார்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் செல்லும் வகையில் பயண திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். தலைவர்கள் வருகைக்கான தேதி உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது.

    இந்த வீட்டில்தான் ராமுத்தாய் தங்கி இருந்தார். நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 பணம் ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.

    இந்த சொத்துக்களுக்கு பாலமுருகன் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் ராமுத்தாய் வசம் இருந்த நகை மற்றும் சொத்துக்களை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராமுத்தாய் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் மதுரையில் உள்ள முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் ரூ.1000 பவுன் தங்கம், வைர நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்ற வைகை பாலன் ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள இவரது மனைவியை தேடி வருகின்றனர்.

    • மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாப்புக்குட்டி (வயது 41), பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஐஸ்வர்யா (19), இந்துமதி (13) என்ற 2 மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். இதில் இந்துமதி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாலமுருகன் வேலைக்கு சென்று விட ஐஸ்வர்யா, அருண் குமாரும் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    பள்ளிக்கு செல்லாமல் இந்துமதி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பாப்புக்குட்டி கண்டித்துள்ளார். இதனால் இந்துமதி விரக்தி அடைந்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பின் பாப்புக்குட்டி வெளியே சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்துமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பாப்பு குட்டி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தான் கண்டித்ததால் மகள் விபரீத முடிவை எடுத்து விட்டதாக நினைத்து பாப்புக்குட்டி கலங்கினார். மகள் சாவுக்கு காரணமாகி விட்டோமே என நினைத்து மனம் வருந்திய பாப்புக்குட்டி தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது நான் இனிமேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.

    பின்னர் மகள் அருகிலேயே பாப்புக்குட்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மனைவி கூறியதை கேட்டு பதட்டம் அடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் யாரும் செல்போனை எடுக்காததால் பாலமுருகன் அவசரம், அவசரமாக வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
    • மேக்ஸ், லவ்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நேற்று மாலை 6.45 மணி அளவில் முதல் மாடியின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் கட்டிட இடிபாட்டில் சிக்கி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் என்ற வாலிபர், திருநங்கை லவ்லி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது டமார் என்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மதுபான விடுதி கட்டிடம் இடிந்தது தொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 304-ஐ.பி.சி. சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுபான விடுதி விபத்து தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் விடுதி மேலாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரிடம் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற 11 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். விடுதியின் உரிமையாளரான அசோக் குமார் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கட்டிடம் இடிந்து விபத்து நடைபெற்ற பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுபான விடுதி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால் இதனை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.

    நாங்கள் இன்னும் மெட்ரோ ரெயில் பணிக்காக சுரங்கத்தில் துளைபோடும் பணியை தொடங்கவே இல்லை என்றும், எனவே கட்டிட விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    மதுபான விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தபோது அதனை அங்கிருந்த ஊழியர்கள் சிலர் நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

    இதுபற்றி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த துவாம் என்ற வாலிபர் கூறியதாவது:-

    மாலை 3 மணியில் இருந்து 6.45 மணி வரை மதுபான விடுதியில் வேலை செய்யும் 15 பேர் ஓய்வுக்காக சென்றிருந்தனர். இருப்பினும் 14 பேர் வரை மதுபான கூடத்தில் இருந்தோம். மதுபான விடுதிக்கு வெளியில் இருந்து வாடிக்கையாளர்கள் வர தொடங்கினார்கள்.

    இதனால் மேக்ஸ், லவ்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சைக்ளோன் ராஜ் அவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த நேரத்தில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி கிடந்த அவர்களை எங்களால் மீட்க முடியவில்லை.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவியாய் தவித்தோம். எங்கள் கண்முன்னே எல்லாம் ஒரு நொடியில் முடிந்து போய் விட்டது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், மற்ற ஊழியர்கள் எல்லாம் வெளியில் அலறியடித்து ஓடிவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரவு 10 மணி அளவில் கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் விடுதியில் மதுபோதையில் இருந்திருப்பார்கள். இதனால் உயிர்சேதம் அதிகரித்திருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுபான விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மெட்ரோ ரெயில் பணிகள் விபத்துக்கு காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ள நிலையில் விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் விபத்து நடந்துள்ளதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட மதுபான விடுதியில் உரிமையாளரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உயிரிழந்த 3 பேரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மதுபான விடுதியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    • ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்து செயல்பட்ட அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த முடியை எடுத்ததாக கூறுகிறார்கள்.

    ம.தி.மு.க. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தபோது அவர்களுக்கு விருதுநகர், ஈரோடு தொகுதியை நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். அவர்கள் கேட்காமலேயே அந்த தொகுதியை வழங்கினோம். தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். இது கவலை தரக்கூடிய செய்தியாகும். இதற்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முழு பொறுப்பேற்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தொழிலதிபராக இருக்கலாம். ஆனால் அவர் வணிக நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவா, வீழ்ச்சிக்காகவா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ரோடு-ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

    டாரஸ் லாரிகளால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இங்கிருந்து வைரங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தை உரக்கிடங்கு மாவட்டமாக மாற்றி உள்ளனர். இதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

    தி.மு.க.வை சேர்ந்தவர்களின் வாகனங்கள் பறக்கும்படைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்.

    ஜாதி, மதத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குமரி மாவட்டத்தை பிளவுபடுத்த தி.மு.க., காங்கிரஸ் முயற்சி மேற்கொள்கிறது. கனிமவள கடத்தலின்போது லாரி மோதி 6 பேர் பலியானார்கள். இதற்கு இந்த அமைச்சரோ, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரோ இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கனிம வளங்களை மாநில அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×