search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    படுக்கை அறையில் குடும்ப பிரச்சினைகளை பேசாதீங்க
    X

    படுக்கை அறையில் குடும்ப பிரச்சினைகளை பேசாதீங்க

    புதிய இடத்தில் தயக்கமோ, பயமோ இன்றி மனைவி இல்லற வாழ்க்கையை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது கணவரின் பொறுப்புதான் என்பதை மறந்துவிடக்கூடாது.
    இல்லற வாழ்க்கையை இனிமையுடன் தொடங்கும் மணமகனுக்கு மனக்குழப்பமும் பின் தொடர்ந்து விடுகிறது. தாய் - மனைவி இருவரில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற தவிப்புக்கு ஆளாகுவார்கள். அதுநாள் வரை வளர்த்து ஆளாக்கிய தாயை விட்டுக்கொடுக்க முடியாது. தன்னை மட்டுமே நம்பி வந்திருக்கும் மனைவியை தவிர்க்க விட முடியாது.

    இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்க முன்வந்தாலோ, இருவரில் யாராவது ஒருவர் அதிக உரிமை கொண்டாட நினைத்தாலோ பிரச்சினை உருவாகி விடும். பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு மகன் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ, அதற்கு மருமகள் காரணமாகி விடுவாளோ என்ற கவலை தாய்க்கு இருக்கும்.

    அந்த கவலையை புறந்தள்ளிவிட்டு ஒருசில தாய்மார்கள் ஆரம்பத்திலேயே மருமகளிடம் இணக்கமான உறவை கடைப்பிடித்து குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவ வழிவகுப்பார்கள். மருமகளுக்கும் புகுந்த வீட்டினரின் அன்பை பெற வேண்டும் என்ற ஆர்வமும், லேசான பயமும் இருக்கும். அந்த வாய்ப்பை ஆண்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தாயார் தன் மீது கொண்டிருக்கும் அன்பையும், எடுத்துக்கொள்ளும் உரிமையையும் தட்டிப்பறிக்கும் எண்ணம் மனைவியிடம் தோன்றாத அளவிற்கு இருவரிடமும் சரிசமமான அணுகுமுறையை கடைப் பிடிக்க வேண்டும். யாரை பற்றியும் குறை கூறக் கூடாது. மனைவி தன் தாய் மீது புகார் கூறினால் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது.



    கண்டும் காணாமல் இருந்துவிடவும் கூடாது. இருவரில் யார் பக்கம் தவறு இருக்கிறது என்பதை கண்டறிந்து பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும். ஒருவரை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக மற்றவரிடம் அவரை பற்றி தவறான கருத்துக்களை கூறிவிடக்கூடாது. புதிதாக வந்திருக்கும் மனைவிக்கு தங்கள் குடும்ப நிலவரத்தை எடுத்துரைத்து குடும்பத்தினர்கள் ஒவ்வொருவருடைய சுபாவத்தையும் கூறி அதற்கு தக்கப்படி நடந்து கொள்ள வழிகாட்ட வேண்டும்.

    குடும்பத்தில் உள்ளவர்களும் புதுப்பெண் அதுவரை வாழ்ந்த சூழல் வேறு என்பதை தெளிவுபடுத்தி இணக்கமான உறவு ஏற்பட இணைப்பு பாலமாக விளங்க வேண்டும். மனைவியின் குடும்ப நிலவரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு அவர்களிடம் சுமுகமான உறவை பேண வேண்டும்.

    புகுந்த வீட்டில் உள்ள உறவுகளிடம் மனைவி எத்தகைய அணுகு முறையை பின்பற்றுகிறாரோ அதுதான் இல்லற பந்தத்தை மகிழ்ச்சியுடன் வழி நடத்தி செல்ல வழி வகுக்கும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். புதிய இடத்தில் தயக்கமோ, பயமோ இன்றி மனைவி இல்லற வாழ்க்கையை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது கணவரின் பொறுப்புதான் என்பதை மறந்துவிடக்கூடாது.

    தாயார்-மனைவி இருவருக்கும் இடையே விரிசல் ஏற்படுவதற்கு ஆண்கள் காரணமாகிவிடக்கூடாது. இருவருடைய சமையலையும் ஒரே மாதிரி பாராட்ட வேண்டும். குறிப்பாக ஒருவருடைய சமையல் ருசியாக இருந்தால் மற்றவர் முன்பு ‘ஆஹா, ஓஹோ’ என்று புகழ்ந்து தள்ளக்கூடாது. அப்படி பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தனியாக பாராட்ட வேண்டும்.



    அதேவேளையில் தனியாக இருக்கும்போது ஒருவரை பற்றி மற்றவரிடம் புகழ்ந்து பேசுவது, புறங்கூறுவது போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும். தாய்-மனைவி இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டால் ஒருவருக்கு சாதகமாக பேசக்கூடாது. சமாதானம் செய்யும் போது வார்த்தைகளையும் கொட்டிவிடக்கூடாது.

    மவுனம் காப்பதே பிரச்சினையின் வீரியத்தை குறைக்கும். கணவன், மனைவியின் தனிப்பட்ட விஷயங்களில் குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதையும் தவிர்க்கச் செய்ய வேண்டும். மனைவி ஏதாவது ஒரு பிரச்சினையை பற்றி பேசினால் அதற்கு கணவன் உரிய தீர்வை வழங்கவேண்டும். மனைவியும் தானே பேசிக்கொண்டிருக்காமல் கணவனையும் பேச விட வேண்டும்.

    சரியான அணுகுமுறைதான் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சுலபமாக தேடி தரும் என்பதை தம்பதிகள் புரிந்து கொள்ள வேண்டும். கணவன்-மனைவி இருவரும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தனிமையில் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கான சூழ்நிலை கணவர் உருவாக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை துணையுடன் மகிழ்ச்சியாக கழிக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள். படுக்கை அறையில் குடும்ப பிரச்சினைகளை பேசுவதை தவிருங்கள்.
    Next Story
    ×