search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் உணர்வில் தோன்றுவதே உண்மையான பாதுகாப்பு
    X

    பெண்களின் உணர்வில் தோன்றுவதே உண்மையான பாதுகாப்பு

    பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய பாதுகாப்பு வட்டத்தைவிட்டு வெளியே வராமல், இந்த சமூகத்தை சந்திக்கவேண்டும்.
    “பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு துணையாக ஆண்கள் இருக்கவேண்டும். நமது திறமைக்கு ஆண்கள் மதிப்பளிக்கும்போதுதான் நாம் சிறப்படைகிறோம். பெண்களின் திறமைகளும், முன்னேற்றமும் முடக்கப்படும் நாட்டின் வளர்ச்சியும் முடக்கமாகிவிடும். பெண்களின் முன்னேற்றத்தை தடைசெய்வது அந்த நாட்டிற்கே செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும்” என்கிறார், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா.

    “பெண்களுக்கென்று சில பாதுகாப்பு அம்சங்கள் தேவைதான். மந்திரியாக இருந்தாலும் பெண்கள் பாதுகாப்பு என்பது வெளியுலகைப் பொறுத்தவரை கேள்விக்குறிதான்” என்கிறார், மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி. அவர் ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைவைத்து அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

    ஆண்களைப் போல பெண்களால் சுதந்திரமாக சுற்றித் திரிய முடியாதுதான். அதற்காக அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்கிவைப்பது சரியல்ல. பெண்களின் சேவை இந்த சமூகத்திற்கு தேவை. பெண்கள் தங்களுடைய பாதுகாப்பு வட்டத்தைவிட்டு வெளியே வராமல், இந்த சமூகத்தை சந்திக்கவேண்டும். வெளியுலக பிரச்சினைகளைக் கண்டு அவர்கள் தயங்கக்கூடாது. பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். இது அவர்களுடைய திறமைக்கு ஒரு சவால்.

    பெண்கள் மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள எதையேனும் புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை உற்சாகமாகவும், சவுகரியமாகவும் அமைத்துக் கொள்ளவேண்டும்.

    இந்தியாவில் பல கிராமங்களில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் திறமை சமையல் அறைக்குள்ளும், படுக்கைஅறைக்குள்ளும் முடக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் உழைப்பு கற்றுத் தரப்படுகிறது. இது அவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்கிறது. சீனாவின் வளர்ச்சிக்கு ஒன்றுபட்ட அவர்களது உழைப்புதான் காரணம். ஆண்- பெண் இருவரின் உழைப்பும் சேர்ந்து அந்த நாட்டை உயர்த்துகிறது. இது உலகிற்கே சிறந்த எடுத்துக் காட்டு.



    அங்கு அவரவரின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கல்வியும், தொழிலும் அமைகிறது. அதுவே அவர்களை முன்னேறத் தூண்டுகிறது. புதிய முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை எந்தக் கல்வியும் கற்றுத்தராது. அவர்களது தனிப்பட்ட ஆர்வம் மட்டுமே அதை கற்றுத்தரும்.

    புகைப்பட கலையை எடுத்துக்கொண்டால் அதில் பல வகையான கலைஞர்கள் இருக்கிறார்கள். ஒருவர் காட்டு மிருகங்களை படம்பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இன்னொருவர் குழந்தைகளை விதவிதமாக படம்பிடிக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு வகை. இந்த புகைப்படக் கலையில் ஆண்களோடு பெண்கள் போட்டிப்போடுகிறார்கள். காடுகளுக்கு தனியாகவே சென்று பெண்கள் படம்பிடிக்கிறார்கள்.

    வித்தியாசமான பெண் புகைப்பட கலைஞர் ஷீக்கா கன்னா. அவர், “எனக்கு குழந்தைகளின் அறிவைத் தூண்டும் வகையில் புகைப்படங்கள் எடுக்கப்பிடிக்கும். அதில் பணம் எதுவும் சம்பாதிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் என் ஆர்வத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை. இன்று குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதன் விளக்கத்திற்காக என் படத்தைதான் பெற்றோர் தேடுகிறார்கள். புத்தகமானாலும், வலைத்தளமானாலும் குழந்தைகளுக்கான புகைப்படம் என்றால் என் பெயர் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். நமக்குத் தேவையான ஒருசில விஷயங்களை மட்டுமே பெண்கள் அன்றாட வேலையாக செய்து முடித்துவிட்டு அமைதியாகிவிட முடியாது. மக்களுக்கான தேவை எது என்பதையும் கண்டறிந்து செயல்படவேண்டும்.

    பெண்களுக்குள் ஆன்மாவின் தேடல் என்ற ஒன்று இருக்கிறது. அந்த தேடுதல் நிறைவடைந்தால்தான் அவர்களுக்கு ஆத்மதிருப்தி கிடைக்கும். பெண்களின் அறிவு வளர்ச்சியை தடுப்பது என்பது அவர்களை கொல்வதற்கு சமமானது. இன்றும் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு ஒரு சிறிய பாதுகாப்பு வட்டத்தை போட்டுக்கொண்டு அதைவிட்டு வெளியே வராமல் இருக்கிறார்கள். அந்த வட்டம் அவர்களை பரிதாபத்திற்குரியவர்களாக்கி வைத்திருக்கிறது. அது அவர்களுடைய வாழ்க்கையல்ல. வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை. உண்மையில் அது இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் வன்முறை.

    பறவைக்கு தேவை சிறகுகள். கூண்டு அல்ல. பாதுகாப்பு என்பது யாரோ கொடுப்பதல்ல. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் கோட்டை. யாரோ நம்மை பாதுகாக்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கும் வரை பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாது. அந்த எண்ணமும் மிகுந்த ஆபத்தானது. உண்மையான பாதுகாப்பு என்பது பெண்களின் உணர்வில் தோன்றுவது. பெண்களுக்கு பறக்க கற்றுக்கொடுங்கள். அவர்களது மனோபலம் பெருகும்” என்கிறார்.



    அன்கா தாண்டேகர் என்ற பெண்மணி பிரபலமான கிரியேட்டிவ் டைரக்டர். அவர் சொல்கிறார்:

    “பெண்களுக்கென்று தனியாக எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை. நான் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் எனக்கு இந்த கிரியேட்டிவ் வேலை அமைந்தது. இதில் என் முழுகவனத்தையும் செலுத்தினேன். புதிய நுணுக்கங்களால் முன்னேற்றம் கிடைத்தது. வெற்றி கிடைத்ததால் ஆர்வம் கூடியது.

    பெண்களின் அறிவும், திறமையும் வீட்டிற்குள் அடங்கிப் போகாமல் சமூகத்திற்கு பயன்படவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு பெண் வீட்டையும், வேலையையும் பேலன்ஸ் செய்வதுகூட ஒரு அறிவுதான். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டிற்காக மட்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தார்கள். இன்று அந்த நிலை தகர்க்கப்பட்டு பெண்களின் சக்தி, வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுகிறது. இது நாடெங்கிலும் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். பெண் சக்தி இந்த சமூகத்தை உயர்த்தும்.

    நான் பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் இந்த நிலையை அடைந்தேன். வளர்ந்து வரும் பெண்களை பார்க்கும்போது மற்றவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். நாமும் இப்படி உயரவேண்டும் என்ற சிந்தனை ஏற்படும். அப்படி ஒரு சிந்தனை ஏற்பட்டால் அதுதான் அவர்கள் முன்னேற்றத்திற்கான முதல்படி.

    ஆரம்பகாலத்தில் நானும் பலரால் பல்வேறு காரணங்களுக்காக அலைகழிக்கப்பட்டேன். ஏராளமான சிரமங்களுக்கு உள்ளானேன். ஆனாலும் பின்வாங்கவில்லை. இந்த நிலையை அடைய நான் என் பொறுமையை விலையாக கொடுக்க வேண்டியிருந்தது. பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் செயற்கையானவை. பெண்கள் தயக்கத்தைவிட்டு வெளியே வந்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதேநேரம் தங்களுடைய பாதுகாப்பு உணர்வையும் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்” என்கிறார்.
    Next Story
    ×