search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாமியார் மருமகள் சண்டை வருவதற்கான காரணங்கள்
    X

    மாமியார் மருமகள் சண்டை வருவதற்கான காரணங்கள்

    திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். இந்த உறவில் சிக்கல்களும், சண்டைகளும் வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
    காலங்காலமாக பெண்கள் இன்னொருவரை சார்ந்து இருப்பவராகவே பழக்கப்படுத்திவிட்டோம். இளம் வயதில் அப்பா அல்லது சகோதரன் பாதுகாப்பான், பின்னர் கணவர். இப்படி ஒரு ஆணைச் சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை முழுவதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உளவியல் ரீதியாகவே பெண் தனக்கு ஓர் தான் காப்பாளன் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறாள். இன்றைய யுகத்தில் பெண்கள் என்ன தான் நவ நாகரிகமாக இருப்பவர்களானாலும் லட்சங்களில் சம்பாதிப்பவராக இருந்தாலுமே தங்களுக்கு ஒர் ஆண் துணை என்பதை கம்ஃபர்ட்டபிள் ஜோனாகவே பார்க்கிறாரக்ள்.

    பையன் பிறந்துவிட்டால் சந்தோசப்படும் பெண்கள் மகனுக்கு திருமண வயது வந்துவிட்டால் பெரும் சோகமாகிவிடுகிறார்கள். காரணம், இதுவரை தன்னுடைய பலம் தன் வருங்காலத்தை பாதுகாக்கும் அரணாக நினைத்திருந்த மகனை உரிமை கொண்டாட வந்துவிடும் மருமகள்.

    இது உரிமை போராட்டமாக அணுக வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையான விஷயம் தான் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமண வயதில் மகன் கொடுக்கும் முன்னுரிமைகளை எல்லாம் பெரிது படுத்தி கவலைப்படாதீர்கள். உங்களுக்கான இடம் எப்போதுமே மகன் மனதில் இருக்கும். அந்த இடம் எப்போதும் மாறாது. மருமகள், கிட்டதட்ட 20 வருடங்கள் வாழ்ந்த சூழலை, வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய இடத்திற்கு வந்திருக்கிறாள். புதிய இடத்தை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை கொடுத்திடுங்கள்.

    திருமணம் செய்து கொண்ட நாளின் முதலே பொறுப்புகளை தூக்கி மருமகள் தலையில் வைக்காதீர்கள். தட்டிக் கொடுங்கள், உரிமையாய் பழகுங்கள். இன்னொரு வீட்டுப் பெண், குறைந்த வரதட்சணை, சொத்து இல்லை என்ற சங்கதிகளை எல்லாம் மறந்துவிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான மகனின் மனைவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



    குடும்ப வழக்கங்கள், நடைமுறைகள், பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்து வரும் விஷயங்கள் என்றால் முன்னரே மருமகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், கேட்கட்டும் என்று காத்திருந்து தவறிய பின்னர் கடிந்து கொள்ள வேண்டாம்.

    புதிய சூழலுக்கு ஏற்ப மாற வேண்டியது அவசியம். உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் அங்கே நடந்தாலும் நாசூக்காக வெளியேறப்பாருங்கள் அதை விடுத்து வீம்பாக நினைப்பதே நடந்தேற வேண்டும் என்று இருக்காதீர்கள்.

    உங்களின் கணவர் வீட்டினர் யாரும் எதிரிகள் கிடையாது. உங்களுக்கு கணவர் மீது எவ்வளவு ப்ரியங்கள் இருக்கிறதோ அதேயளவு அவரை இப்போதைய நிலைக்கு உயர்த்திய அவரது குடும்பத்தினர் மீதும் இருக்கட்டும்.

    கணவரின் எண்ணங்களுக்கு, விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும். தனக்கு பிடித்தமான அம்மாவிடம் காபி வாங்கி குடிப்பதாலோ அம்மாவுக்கு பிடித்த சேலை வாங்கிக் கொடுப்பதாலோ ஒன்றும் உங்களுக்கான அன்பு குறைந்திடாது. திருமணம் ஆகிவிட்டால் கணவர் முழுவதும் தனக்கே சொந்தம் என்று குழந்தைகள் பொம்மைக்கு சண்டையிடுவது போல சிறுபிள்ளைத்தனமாக யோசிக்காதீர்கள்.

    நீங்கள் கணவர் என்ற புதிய உறவு கிடைத்திருக்கும் உற்சாகத்தில் காதலில் திளைத்திருக்கும் அதே வேளையில் தான். இதுவரை தனக்கு மட்டுமே உரிமையாயிருந்த, தன் மீது பாசம் பொழிந்த மகன் இன்னொருவளுக்கு சொந்தமாகிறான் என்கிற வருத்தங்கள் உங்களின் மாமியாருக்கு இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    அன்பு செலுத்துங்கள் கணவரை மட்டுமல்ல.. கணவரையும் கணவரின் குடும்பத்தாரையும்.
    Next Story
    ×