search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இன்று நண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன?
    X

    இன்று நண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன?

    ஒரு உண்மையான நண்பனாக இருப்பவர், உங்கள் தவறுகளை உங்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சலுடன், மேலும் அன்புடனும் நட்புடனும் இருக்கிறார். அதுதான் நட்புறவு.
    கடந்த வருடத்தின் பனிக்காலத்தில் இது நிகழ்ந்தது. சின்னஞ்சிறு பறவை ஒன்று, வேனிற்காலத்தை சற்று அதிக நாட்கள் அனுபவித்து விட்டதால், சரியான காலத்தில் விரைவாக, தெற்கு நோக்கிய வலசைப்பயணம் தொடங்கத்தவறி விட்டது. பனிப்பொழிவு தொடங்கிய பிறகு தாமதமாக வலசைப்பயணம் ஆரம்பித்து, பறந்துசெல்ல முயற்சித்தது.

    ஆனால் அதிகப்பனியினால் உடல் விறைத்துக் கீழே விழுந்தது. அந்த வழியே வந்த ஒரு பசுமாடு, சாணமிட்டவாறு சென்றது. சாணம் மிகச்சரியாக அந்தப்பறவை மீது குவியலாக விழுந்து, அதை மூடிவிட்டது. சாணத்தின் இதமான சூட்டினால் விறைப்பு நீங்கி, நலமடைந்து விட்ட பறவை மகிழ்ச்சியில் கீச்சிடத் தொடங்கியது. அந்தவழியே ஒரு பூனை சென்று கொண்டிருந்தது. பறவையின் குரலைக்கேட்ட பூனை சுற்றுமுற்றும் பார்த்ததில், சாணக்குவியலுக் குள்ளிருந்து கீச்சொலி வருவதைக் கண்டது. உடனே சாணத்தைத்தள்ளி, பறவையைச் சாணத்திலிருந்து கவ்வி இழுத்து, சாப்பிட்டு விட்டது.

    இந்த கதையின் நீதி என்ன வென்றால், அசிங்கத்தால் உங்களை நிறைப்பவர் உங்கள் எதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அசிங்கத்திலிருந்து உங்களை வெளியில் எடுப்பவரும் உங்கள் நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அனைத்திலும் நீங்கள் ஒன்றை குறிப்பாகக் கற்றுக் கொள்ளவேண்டும். அதாவது நீங்கள் அசிங்கத்திற்குள் இருக்கும்பொழுது, வாய்மூடி இருப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் நண்பர்களிடம் உள்ள குறைகளை எப்போதும் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அது முக்கியம் அல்ல. ஆனால் அதேநேரத்தில் அவர் களிடையே இருக்கும் உங்கள் செல்வாக்கை இழப் பதற்கும் உங்களுக்குத் துணிவு இருக்க வேண்டும்.

    நண்பர்களிடையே புகழ்பெறும் முயற்சியில், உங்களைச்சுற்றிலும் ஏதோ ஒருவித இனிமையை நிலை நாட்டும் முயற்சியில், உங்களுக்குள் எவ்வளவு இனிமையற்ற தன்மையை நீங்கள் புதைத்து வைத்துள்ளர்கள் என்று பாருங்கள். இனிமையற்றதை புதைத்தால், இனிமையற்றதைத்தான் நீங்கள் அறுவடை செய்வீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அந்தத் தோழியுடன் அல்லது தோழனுடன் செல்வாக்கில்லாமல் இருக்கவும் உங்களுக்கு துணிவு வேண்டும். அதேநேரத்தில் அவருடன் அன்புடனும், நட்புடனும் இருக்க வேண்டும்.

    தற்போது உங்களது நட்புறவுகள் எப்போதும் உடன்படிக்கைகள் மற்றும் விருப்பு வெறுப்புகளினால் மட்டுமே உருவாகியுள்ளது. ஆனால் நீங்கள் நெல்லிக் கனியும், நாவல் கனியுமாக இரு வேறுபட்டவர்களாக இருந்தாலும், அப்போதும் நீங்கள் நல்ல நண்பர்களாக இருக்கமுடியும். ஒரு உண்மையான நண்பனாக இருப்பவர், உங்கள் தவறுகளை உங்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சலுடன், மேலும் அன்புடனும் நட்புடனும் இருக்கிறார். அதுதான் நட்புறவு.



    உங்களது நட்புறவுகளில் சிறிது கூடுதலான துணிவுடன் இருங்கள். அவர்களை இழப்பதற்குத் தயாராக இருங்கள், அது பரவாயில்லை. குறைந்த பட்சமாக, நீங்கள் அவர்கள் மீது அக்கறையுடன் இருந்தால், அவர்களுக்குத் தேவையான நல்லதை செய்வீர்கள், உங்களுக்குத் தேவையான நல்லதை அல்ல. எனக்கு அறிமுகமான ஒரு மருத்துவர் பீர் அருந்துவதை பழக்கமாகக் கொண்டிருந்தார்.

    நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஏறக்குறைய தனது எழுபது வயதில், பெரும் வயிறுடைய பெருத்த மனிதனாக இருந்தார். சமீபகாலம் முன்பு வரை, அவர் தினமும் ஒரு நண்பரைக் காணச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருந்தார். இவர் அங்கு போகும் போதெல்லாம், நண்பர் பீர் பரிமாற, இருவரும் அருந்திக் கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசதிப்படி அவரது நண்பரும் இங்கு வருவதுண்டு, மருத்துவரும் அங்கு போவதுண்டு.

    திடீரென்று ஒருநாள், மருத்துவரின் நண்பர் ஒரு குருவைச் சந்தித்ததோடு, ஆன்மிகப்பயிற்சிகள் செய்யத் தொடங்கியதுடன், பீர் அருந்துவதையும் நிறுத்தி விட்டார். இந்தக் கதையை மருத்துவர் என்னிடம் மிகவும் விலாவாரியாகக்கூறி அப்படி யாக ஒரு மகத்தான நட்பு முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறினார். அதற்குப்பிறகு ஒருபோதும் அவரது வீட்டிற்கு மருத்துவர் செல்லவில்லை. காரணம், நண்பர் இவருக்கு பீர் பரிமாறுவதை நிறுத்தியிருந்தார். அநேக நட்புறவுகள் இந்தவிதமாகத்தான் இருக்கின்றன.

    ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டிருக்கும் வரையில், நட்பு இருக்கிறது. அதுநின்றுபோகும் கணமே, எல்லாம் போய் விடுகிறது. முதலில், ஒரு நண்பர் என்பதன் பொருள் என்ன? ஒருநண்பராக இருப்பவரும் உங்களைப்போலவே மற்றொரு குழப்பமான மனிதர். நண்பர் என்றால், அவர் ஒருகனகச்சிதமான மனிதர் என்று பொருளல்ல. இருவர், போதுமான தளர்வுநிலையில், ஒருவரை ஒருவர் நேர்மையாக அணுகினாலே, அந்த இருவரும் நண்பர்களாகிறார்கள். உங்களது நண்பரும் கூட நீங்கள் இருப்பதைப்போன்றே குளறுபடியுடன் தான் இருக்கிறார். ஆனால் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் இருக்க முடிந்தால், பிறகு அவர் உங்களுக்கு நண்பராகி விடுகிறார்.
    Next Story
    ×