search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விசித்திரத்தையும் வேதனையையும் உருவாக்கும் மனச்சிதைவு நோய்
    X

    விசித்திரத்தையும் வேதனையையும் உருவாக்கும் மனச்சிதைவு நோய்

    பெற்றோர் தங்கள் பிள்ளைகள் திடீரென வழக்கத்திற்கு மாறாக தனிமையை நாடினாலோ, தொடர்ந்து தூக்கமின்றி விழித்திருந்தாலோ, உணவு சாப்பிடாமல் இருந்தாலோ உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
    மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவைகளை நாம் எப்போதாவது அனுபவிக்கும் நிலை உருவாகிவிடுகிறது. அது நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்காதவரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அது மனநோயாகி, தீவிரமடைந்து, இயல்பான பணிகளை செய்ய முடியாத அளவுக்கு மாறும்போது, அது பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல, அவரை சார்ந்தவர்களுக்கும் அவஸ்தையை ஏற்படுத்தும்.

    துரதிஷ்டவசமாக காய்ச்சல், தலைவலி முதல் தீவிர நோய்களான புற்று நோய், மாரடைப்பு போன்ற உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் அனுதாபம், அரவணைப்பு மற்றும் கவனம் போன்றவை மன நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை.

    பெரும்பாலும் மனநோய்களின் அறிகுறிகள், செயல்கள் மற்றும் நடத்தைகள் சார்ந்ததாக இருக்கிறது. அதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் செயல்களை, அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு செய்வதாகவும்- நடிப்பதாகவும் நினைத்து, கவனத்தில்கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். அதனால் சரியான நேரத்தில் அவர்களை மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

    அனைத்து மன நோய்களிலும் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவது, மனச்சிதைவு (Schizophrenia) நோய். நோயாளி மட்டுமின்றி அவரது குடும்பத்தாரும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயின் தாக்கம் பாதிக்கப்பட்டவரின் எண்ணம், உணர்வு, செயல் ஆகிய மூன்றையும் தாக்கும். அவர்களுக்கு சிந்திக்கும் திறனும், தங்களை சுற்றி நடப்பவைகளை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் நடக்கும் திறனும் இருப்பதில்லை.

    சாலைகளில் ஒருசிலர் தானாக சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், திட்டிக்கொண்டும், அழுக்காக சாலைகளில் கண்டதை பொறுக்கிக் கொண்டும் அலைவதை பார்த்திருப்பீர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நோயின் பாதிப்புகொண்டவர்கள்தான். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப் படாததாலும், அவர்களை பராமரிக்கும் வழி தெரியாததாலும், அதற்குரிய வசதி வாய்ப்புகள் இல்லாததாலும் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    மனச்சிதைவு நோய் தோன்றுவதற்கான சரியான காரணங்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், நம் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே இந்த நோய்க்கு காரணம் என்று கூறப்படுகிறது. நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை கிரகித்து, அந்த தகவல்களை மூளைக்கு எடுத்துச் சென்று, அதற்கு தகுந்தாற் போல நம்மை செயல்பட வைக்கும் வேலையை செய்வது நம் உடலில் உள்ள பல்வேறு ரசாயனங்கள்.

    தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் ரசாயனங்களில் டோபமைன், செரோடோனின் என்ற இரண்டு ரசாயனங்கள் உடலில் அதிகமாக சுரக்கும்போது அது இயல்புக்கு மாறான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. அவர்களது காதுகளில் யாரோ பேசுவது போலவும், அவர் களது கண்முன்னே யாரோ நிற்பது போலவும், அவர்களை சுற்றி இருப்பவர்கள் அவர்களுக்கு எதிராக ஏதோ சதி செய்வது போலவும் அவர்கள் உணர்கிறார்கள். நம்புகிறார்கள்.

    அவர்களை பொறுத்தவரையில் அது உண்மை. அதனால், அவர்கள் கேட்கும் குரலுக்கு பதில் சொல்வதும், அவர்கள் முன்னே நிற்கும் நபர்களுடன் அவர்கள் பேசுவதும், அவர்களை சுற்றி இருப்பவர்களை பார்த்து எரிச்சல், சந்தேகம் மற்றும் கோபமடைவதும் உண்டு. அது மற்றவர்களுக்கு விசித்திரத்தையும், குடும்பத்தினருக்கு வேதனையையும் உருவாக்கும். சிலருக்கு கேலிக்குரிய, சிரிப்புக்குரிய விஷயமாகவும் ஆகி விடுகிறது. இந்த நோய் பற்றிய சரியான புரிதல் இல்லாமையால் பலரும் இது ஆவிகளின், பேய்களின் வேலை என்றும் கூறுவதுண்டு. அதனால் முறையான சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் வழிபாட்டுத்தலங்களுக்கு கொண்டு சென்று, நோயை அதிகப்படுத்திவிடுகிறார்கள்.

    இப்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு மனநல மருத்துவர்களிடம் அழைத்துச்சென்றாலும், இந்த நோயை பற்றிய புரிதல் பெரும்பாலான மக்களிடம் இல்லை.

    இது பரம்பரை நோய் என்று பெரும்பாலும் கருதப்பட்டாலும் அது மட்டுமே காரணம் இல்லை. குடும்பத்தில் முன்பு ஒருவருக்கும் இல்லையென்றாலும் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.



    மனச்சிதைவு நோயின் அறிகுறிகள்:

    * நடத்தையில் மாறுதல்.

    * தானாக பேசுதல் அல்லது சிரித்தல்.

    * தனிமையை நாடுதல்.

    * குழப்பமான பேச்சு, தெளிவில்லாத சிந்தனை.

    * குளிப்பது, உடை மாற்றுவது, சாப்பிடுவது போன்ற அன்றாட வேலைகள்கூட பாதிப்படைதல்.

    * படிப்பது, வேலைக்கு செல்வது போன்றவைகளை தொடர முடியாத நிலை.

    * தனியாக இருக்கும்போது காதில் குரல் கேட்பது.

    * ஆதாரமற்ற, தேவையற்ற சந்தேக உணர்வு.

    (தன்னை சுற்றியிருப்பவர்கள் தன்னை பற்றி பேசுகிறார்கள், தன்னை கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள், தன்னை யாரோ எப்பொழுதும் பின் தொடர்கிறார்கள் என்பது போன்ற சந்தேகங்கள்)

    * இந்த சந்தேக உணர்வினால் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் சண்டை போடுதல்.

    * இந்த காரணங்களினால் வீட்டில் பாதுகாப்பில்லை என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி எங்காவது சென்று விடுதல்.

    ஆரம்பத்திலேயே அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமடையலாம். ஆனால் இதன் பக்க விளைவுகள் ஒரு சிலருக்கு சிரமத்தை கொடுக்கலாம். பொதுவான பக்க விளைவுகள், அதிக தூக்கம், பகல் பொழுதிலும் மந்தமாக இருத்தல், அதிக பசி, உடல் தசை மற்றும் தாடைகள் விரைப்பாக இருத்தல், அதனால் பேசுவதற்கு மற்றும் நடப்பதற்கு சிரமப்படுதல் போன்றவை. இந்த பக்கவிளைவுகள் எல்லோருக்கும் வருவதில்லை. வந்தாலும், அதை கட்டுப்படுத்தவும் மருந்துகள் உள்ளன.

    இந்த நோய்க்கான சிகிச்சையை நீண்ட காலம் தொடர்வதும், மருந்துகளின் பக்க விளைவுகளும், நோயாளியையும், குடும்பத் தினரையும் சிரமப்படுத்துகிறது. இதனால் அறிகுறிகள் குறைந்த வுடன் அல்லது நீங்கியவுடன் சிகிச்சையை பாதியில் நிறுத்திவிடுகின்றனர். நிறுத்தினால் நோய் மீண்டும் வரக்கூடும்.

    Beautiful Mind (அழகான மனது) என்ற ஒரு ஆங்கில திரைப்படத்தில் இந்த நோயைப் பற்றி மிக அற்புதமாக காட்டியிருப்பார்கள். இந்த படம் நோபல் பரிசு பெற்ற ஜான் நாஷ் என்ற பொருளாதார மேதையின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டது. அவர் இந்த நோய் மற்றும் அதற்கான சிகிச்சைகளின் பக்க விளைவுகளால் சிரமப்பட்டு, பிறகு எந்த ஒரு மருந்தும் இல்லாமலேயே அந்த நோயை எதிர்கொண்டு வாழ கற்றுக்கொள்வார். அவர் வெற்றிகரமாக வாழ்ந்து, 83-வது வயதில் கார் விபத்தில் 2015-ல் மரணமடைந்தார்.

    இளம் வயதினருக்கு கூட இந்த நோய் வரலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் திடீரென வழக்கத்திற்கு மாறாக தனிமையை நாடினாலோ, தொடர்ந்து தூக்கமின்றி விழித்திருந்தாலோ, உணவு சாப்பிடாமல் இருந்தாலோ உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் சிகிச்சையும், குடும்பத்தினரின் ஆதரவும், சரியான உணவு, உடற்பயிற்சி, தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை போன்றவை மீண்டும் அவர்கள் இயல்புநிலைக்கு திரும்ப வழிவகுக்கும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் சமூகத்தில் அனைவருக்கும் தேவை.

    கட்டுரை: முனைவர் இ.விதுபாலா,

    (மனோதத்துவ நிபுணர்)

    சென்னை.
    Next Story
    ×