search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடும்பத்தில் அன்பும், காதலும் ஆயுள்வரை தொடரவேண்டும்
    X

    குடும்பத்தில் அன்பும், காதலும் ஆயுள்வரை தொடரவேண்டும்

    காதலிக்கும்போது இருக்கும் இந்த மன உறுதியை திருமணத்திற்கு பிறகும் பின்தொடர்வதில்தான் காதல் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது.
    காதலிக்கும்போது காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் நகரும் பொழுதுகள் மனதை ரணமாக்கும். எப்போது பார்க்கப்போகிறோம் என்ற ஏக்கம் மனதை வாட்டி வதைக்கும். பேசிக்கொள்ள கூட முடியாதபோது எதையோ இழந்துவிட்டதை போல இருவரும் தவிப்புக்குள்ளாவார்கள்.

    திடீரென்று சந்தித்துக்கொள்ளும்போது எதையோ சாதித்துவிட்டதை போல மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ‘நீ இல்லாமல் நானில்லை. நானில்லாமல் நீ இல்லை’ என்று ஒருவருக்காக மற்றொருவர் வாழ்வதாக அன்பை பொழிவார்கள். தங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக ஒருவரை ஒருவர் பாவித்துக்கொள்வார்கள். ஒருவரையொருவர் பிரிக்கவோ தவிர்க் கவோ முடியாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

    தங்கள் காதலுக்கு எந்த ரூபத்தில் தடை வந்தாலும் அதனை தகர்த்தெறிய தயங்க மாட்டார்கள். பெற்றோர் கடுமையாக எதிர்த்தாலும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க ரொம்பவும் யோசிப்பார்கள். தங்கள் காதல் கைகூட வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டுவார்கள். காதலுக்காக தங்கள் குடும்பம், கவுரவம், அந்தஸ்து அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.



    காதலிக்கும்போது இருக்கும் இந்த மன உறுதியை திருமணத்திற்கு பிறகும் பின்தொடர்வதில்தான் காதல் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. காதலிக்கும்போது இருந்த நேசமும், நெருக்கமும் திருமணத்திற்கு பிறகு பெரும்பாலானோரிடத்தில் இருப்பதில்லை. திருமணத்திற்கு பிறகு ‘நான் நினைத்தது போல் நீ இல்லை. உன்னுடைய சுயரூபம் இப்போதுதான் எனக்கு தெரியவருகிறது’ என்று ஒருவருக்கொருவர் வசைபாட தொடங்கிவிடுகிறார்கள்.

    காதலிக்கும்போது இருந்த நம்பிக்கையை இழப்பதற்கும், காதலிக்கும்போது ஏற்படாத பிரச்சினை திருமணத்திற்கு பிறகு உண்டாவதற்கும் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் இருவருக்குமிடையே சரியான புரிதல் இல்லாததே முதன்மையான குறைபாடாக வெளிப்படும். அதிலும் காதலிக்கும்போது ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக வைத்திருந்த நம்பிக்கையை தொடருவதில் எழும் நடைமுறை சிக்கல்கள் பிரச்சினையின் தொடக்கமாக அமையும்.

    காதல் மோகத்தில் புரிந்து கொள்ள முயற்சி எடுத்திருக்காவிட்டாலும் திருமணத்திற்கு பிறகாவது ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதில்லை என்பதை விட, புரிந்து கொள்ள விரும்புவதில்லை என்பதுதான் இருவரிடையே விரிசல் அதிகமாக காரணமாகிவிடுகிறது. தொலைவில் இருந்தபோது ஏங்கி தவித்தவர்கள் இல்வாழ்க்கையில் இணைந்த பிறகு அருகாமையிலேயே இருப்பதால் ஏக்கம் தீர்ந்து சாதாரணமானவர்களாகி விடுகிறார்கள்.



    அதுவே நாளடைவில் பாராமுகமாகி, பிரச்சினையை அதிகப்படுத்திவிடுகிறது. காதலிக்கும்போது ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திய அன்பையும், காதலையும் திருமண பந்தத்தில் இணைந்த பிறகும் தொடர்வதுதான் வாழ்க்கை பயணத்திற்கு இனிமை சேர்க்கும். அன்பும், காதலும் ஆயுள் வரை தொடர வேண்டும். இடையில் துண்டிக்கப்பட்டாலோ, தொய்வை ஏற்படுத்தினாலோ காதல் வாழ்க்கை கசக்க தொடங்கிவிடும்.

    இருவருமே ஒருவர் மற்றொருவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். காதலித்த காலகட்டத்தைவிட அதிகமான அன்பை பொழிந்து துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். அதில் காட்டும் அக்கறைதான் காதலை வாழவைக்கும். கருத்து வேறுபாடுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். எந்தவொரு விஷயத்தையும் முன்யோசனையின்றி செய்யக்கூடாது.

    ஒருவரின் நலனில் மற்றொருவர் அக்கறை காட்டுவதில் தொய்வின்றி செயல்பட்டால் ஒற்றுமை பலப்படும். எத்தகையை சிக்கல்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துடன் இருவரும் செயல்பட வேண்டும். ‘ஈகோ’வுக்கு இடம் கொடுக்காமல் பிரச்சினைகளை மென்மையாக அணுகினால் சுமுக தீர்வு கண்டுவிடலாம்.
    Next Story
    ×