search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்வதேச அளவில் பேஸ்புக் மூலம் இணைந்து எளியவர்களுக்கு உதவும் தமிழக பெண்கள்
    X

    சர்வதேச அளவில் பேஸ்புக் மூலம் இணைந்து எளியவர்களுக்கு உதவும் தமிழக பெண்கள்

    உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழக பெண்கள் பேஸ்புக் மூலம் இணைந்து பல்வேறு நலபணிகளை மேற்கொண்டு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்
    துபாய்: பேஸ்புக்கை வெறும் பொழுபோக்குக்காக மட்டும் உபயோகபடுத்தாமல் அதன் மூலம் ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடலாம் என பலர் திகழ்கின்றனர். அவர்களில் ஒரு குழுவாக‌ உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழக பெண்கள் பேஸ்புக் மூலம் இணைந்து பல்வேறு நலபணிகளை மேற்கொண்டு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

    உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் தமிழ்ப் பெண்களை இணைக்கும் வகையில், பெண்களால், பெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு “மகளிர் மட்டும்” எனும் முகநூல் குழு துபாயில் வசிக்கும் தமிழக பெண்களால் கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.

    பெண்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தவும், பெண்களுக்குள் புதைந்திருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், புதுவித யோசனைகள் மற்றும் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும் துவங்கப்பட்ட இக்குழுமம், கடந்த மாதம் சென்னை, கோவை, துபாய் மற்றும் மஸ்கட்டில்,'மகளிர் தினத்தை' முன்னிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தியது.

    இதைத் தொடர்ந்து பெண்களைக் கொண்டு தேசத்தில் நேசத்தை வளர்க்கும் வகையில், சமூக நலன் கருதி, பசியால் வாடுவோருக்கு இலவசமாக உணவு வழங்கும் வகையில் ’Food for Good’ என்னும் திட்டத்தை நடத்தினர், இக்குழுமத்தில் உள்ள பெண்கள் தங்களால் இயன்ற பண உதவியைச் செய்து, சென்னையில் வசிக்கும் இக்குழுமத்தை சார்ந்த 10 பெண்கள், பத்மினி மாலா மற்றும் காயத்ரி கணேஷன் ஆகியோரது தலைமையில், கடந்த மாதம் தமிழ் புத்தாண்டு நன்நாளில், சென்னையில் சாலையோரத்தில் வாழும், வசிப்பிடமில்லா 350 ஏழைகளுக்கு அவர்களை மகிழ்விக்கும் வகையில் இலவசமாக உணவு வழங்கினர்

    இதனை தொடர்ந்து மே 6-ஆம் தேதி, ’Give to Live' என்னும் பெயரில், Blood Connect India என்ற அமைப்புடன் இணைந்து, இக்குழு நிர்வாகி வகிதா-வின் தலைமையில், மீரா நட்ராஜன் மற்றும் பிரியதர்ஷினி அரவிந்த் உட்பட 8 தன்னார்வலர்களின் மேற்பார்வையில் அடையார் கேன்சர் மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடத்தினர். இதில் வேல்ஸ் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பெண்கள் 10 பேர் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதையடுத்து, ‘Toy for Joy' என்ற திட்டத்தை செயல்படுத்தும் வகையில் துபாய், மதுரை, சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் குழும உறுப்பினர்களின் வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பொம்மைகளை குழுமத்தின் நிர்வாகி வகிதா பானு, துபாயிலிருந்து சென்னை சென்று, மே 8-ஆம் தேதியன்று, , பத்மினி மாலா மற்றும் ரேவதி செல்லதுரையின் உதவியுடன், அவற்றை வில்லிவாக்கம் சேஃப் இந்தியா என்ற குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தனர். குழந்தைகளுக்கு பொம்மை மற்றும் இனிப்பு வழங்கியதோடு, அவர்களோடு ஆடிப் பாடி உற்சாகமூட்டி, இறுதியில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    இதுபோன்று இன்னும் பல சமூக செயல்கள் - விவசாயிகளுக்கு உதவுவது, 12-ஆம் வகுப்பில் நன்மதிப்பெண் பெற்று மேற்படிப்பை தொடர இயலாத குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தவிருப்பதாக துபாயில் வசிக்கும் இக்குழுமத்தின் நிர்வாகி வகிதா பானு மற்றும் துணை நிர்வாகி பெனாசிர் பாத்திமா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
    Next Story
    ×