search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய எட்டு அம்சங்கள்
    X

    வீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய எட்டு அம்சங்கள்

    சொந்த வீட்டு கனவை நிஜமாக்க மனை வாங்குபவர்கள், சம்பந்தப்பட்ட மனை உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்வதுதான் முதலில் செய்யக்கூடியதாகும்.
    நகரமயமாக்கல் மற்றும் அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள் காரணமாக பெருநகரங்கள் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீட்டு மனை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சொந்த வீட்டு கனவை நிஜமாக்க மனை வாங்குபவர்கள், சம்பந்தப்பட்ட மனை உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதி பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்வதுதான் முதலில் செய்யக்கூடியதாகும்.

    1.சம்பந்தப்பட்ட வீட்டு மனையின் மூலப்பத்திரம் எனப்படும் தாய் பத்திரத்தை பெற்று, அதை சரிவர படித்து அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்வது அவசியம்.

    2.சம்பந்தப்பட்ட மனைக்கு யாரெல்லாம் உரிமையாளராக இருந்திருக்கிறார்கள்..? அல்லது அதன் உரிமை சம்பந்தப்பட்ட சகல விஷயங்களையும் அறிந்துகொள்ள 30 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றை பெற்று தெரிந்து கொள்ளவேண்டும்.

    3.சம்பந்தப்பட்ட மனை கிராம பகுதியை சார்ந்தது என்றால் அதன் நிர்வாக அதிகாரியை சந்தித்து வீட்டுமனைக்கான தாலூகா அலுவலகம் தொடர்புடைய ஆவணங்கள் பற்றி விசாரிப்பதோடு, அதன் ‘பீல்டு மேப்’ மற்றும் ‘அ பதிவேடு’ ஆகியவற்றையும் வாங்கி பார்க்க வேண்டும். அதில், சர்வே எண், உட்பிரிவு செய்யப்பட்ட விவரம், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும். குறிப்பிட்ட சொத்து வாங்கப்படும்போது, அதன் விபரங்கள் ‘அ பதிவேட்டில்’ இடம் பெறும்.

    4.சம்பந்தப்பட்ட மனை நகர்ப்புறத்தில் இருந்தால், அப்பகுதி தாலூகா அலுவலகத்தில் அதன் நிரந்தர நிலப்பதிவேடு இருக்கும். அதில், சர்வே எண், உட்பிரிவு, வீடாக இருந்தால் கதவு எண், உரிமையாளர் பெயர், சொத்தின் நான்கு எல்லைகள், சொத்தின் அளவீடுகள் போன்ற விவரங்கள் இருக்கும். ‘பிளான்’ மற்றும் ‘பில்டிங் அப்ரூவல்’, கடைசியாக சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது போன்றவற்றை வைத்து ‘லீகல் ஒப்பீனியன்’ பெற்று மனை வாங்குவது பற்றி முடிவு எடுப்பது பாதுகாப்பானது.



    5.முக்கியமாக, சம்பந்தப்பட்ட மனையை ‘சர்வேயர்’ மூலமாக நான்கு பக்க அளவுகளையும் சரி பார்த்துக்கொள்வது முக்கியம். பெரும்பாலும், பத்திரத்தில் உள்ள அளவுகளுக்கும் ‘சர்வே’ செய்யும்போது கிடைக்கக்கூடிய அளவுகளுக்கும் வித்தியாசங்கள் இருக்க வாய்ப்பு உண்டு.

    6.‘பவர்’ பெற்றவரிடமிருந்து மனைக்கான ‘அக்ரிமெண்டு’ போடுவதற்கு முன்னர் அவரது இருப்பிடம் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை சரியாக அறிந்தபிறகு முடிவெடுப்பதுதான் சிறந்தது. மேலும், சொத்தின் உண்மையான உரிமையாளர் யார்..? என்பது வாங்குபவருக்கே சரிவர தெரியாத சூழலில் வீட்டு மனை வாங்குவதை தவிர்க்கும்படி நிதி ஆலோசகர்கள் சொல்வது கவனிக்கத்தக்கது.

    7.கடைசியாக, மனையின் ஆவணங்களில் ஏதாவது சந்தேகம் இருக்கும்பட்சத்தில், அதன் உரிமையாளர் அனுமதியுடன் பத்திரிகைகளில் சொத்து வாங்குவது பற்றியும் அதில் ஆட்சேபம் இருப்பவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தெரிவிக்கும்படியும் விளம்பரம் செய்யலாம்.

    8.வீடு கட்டுவது அல்லது முதலீட்டு அடிப்படை ஆகிய எதுவாக இருந்தாலும் மனைக்கான சாலைகள் அளவு குறைந்தபட்ச அகலம் 23 அடியாக இருப்பது முக்கியம். மேலும், மனையின் மொத்த அளவு 1200 சதுரஅடி அல்லது அதற்கும் மேலாக இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் வரக்கூடிய பல சிக்கல்களை தவிர்க்கலாம்.
    Next Story
    ×