search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஏ.டி.எம்.மில் கள்ளநோட்டு வந்தால் என்ன செய்வது?
    X

    ஏ.டி.எம்.மில் கள்ளநோட்டு வந்தால் என்ன செய்வது?

    ஒருவர் நம்மிடம் கள்ள ரூபாய் நோட்டைக் கொடுக்க முயன்றால், அதை சோதித்துப் பார்த்து திருப்பிக்கொடுத்துவிடலாம். ஆனால் ஏ.டி.எம்.மிலேயே கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது? என்று பார்க்கலாம்.
    சமீபத்தில் தலைநகர் டெல்லியில் ஏ.டி.எம்.மில் போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவர் நம்மிடம் கள்ள ரூபாய் நோட்டைக் கொடுக்க முயன்றால், அதை சோதித்துப் பார்த்து திருப்பிக்கொடுத்துவிடலாம். ஆனால் ஏ.டி.எம்.மிலேயே கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது?

    அனைத்து வங்கிகளும் ஏ.டி.எம்.முக்கு தங்கள் கருவூலம் மூலம்தான் பணத்தை அனுப்பி வைக்கின்றன. கருவூலங்களில் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர்தான் பணம் அனுப்பப்படும். எனவே ஏ.டி.எம்.மில் கள்ள ரூபாய் நோட்டு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

    எந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கப்பட்டதோ, அதற்கு அருகில் உள்ள அந்த வங்கியின் கிளைக்குச் செல்ல வேண்டும். வங்கியில் அந்தப் பணத்தைப் பரிசோதித்து, அது கள்ள நோட்டு என்று உறுதியாகும் பட்சத்தில் அதன் மீது ‘கள்ள நோட்டு’ என்று சீல் வைக்கப்படும். அதன்பின் வாடிக்கையாளரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றை வாங்கி, அவரிடம் கையெழுத்து பெறப்படும்.

    ஒவ்வொரு வங்கியிலும் கள்ளநோட்டுக்கு என்றே தனிப்பதிவேடு வங்கி மேலாளரிடம் இருக்கும். அதில் வாடிக்கையாளர் கொண்டுவந்த கள்ள நோட்டு குறித்த விவரம் பதிவு செய்யப்படும். மீண்டும் வாடிக்கையாளருக்கு அந்தக் கள்ள நோட்டு திருப்பி வழங்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக, வேறு ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும்.



    பின்னர் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர் வழங்கிய கள்ள நோட்டு குறித்த விவரங்களை போலீஸ் ஸ்டேஷனில் தெரியப்படுத்தி எப்.ஐ.ஆர். பதிவு செய்வார்கள். அதேசமயம் வாடிக்கையாளர் ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டை எடுத்திருந்தால் அதை வங்கியில் நிரூபிக்க வேண்டும். கள்ள நோட்டு தொடர்பாக வங்கி முறையாக பதில் சொல்லவில்லை அல்லது வேறு பணத்தை வழங்கவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யலாம்.

    வாடிக்கையாளர் இரவு நேரத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்று அதில் கள்ள நோட்டுகள் இருந்தால், அங்குள்ள ஏ.டி.எம். காவலரிடம் அதுகுறித்த தகவல்களை தெரிவித்துவிட்டு, சிசிடிவி காமிரா முன் ஏ.டி.எம். ரிஜிஸ்டரில் உங்களுக்குக் கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளதைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் அருகில் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டு கிடைத்ததாக புகார் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில் ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டு வந்தது உறுதியானால் வாடிக்கையாளருக்கு உரிய பணம் வழங்கப்படும்.

    வங்கியில் ஒரு வாடிக்கையாளர் கள்ள நோட்டை வழங்கி, காசாளர் அதைப் பரிசோதிக்காமல் மற்றொரு வாடிக்கையாளருக்கு வழங்கிவிடும் வாய்ப்பு உண்டு. அதுபோன்ற நிலையில், வங்கியில் இருந்து கள்ள நோட்டைப் பெற்ற வாடிக்கையாளர் அதற்குரிய ஆதாரத்தை வழங்கினால் உரிய பணம் வழங்கப்படும்.

    வங்கிகள் தரப்பில் தவறு என்றால் அந்தப் பணத்தை குறிப்பிட்ட வாடிக்கையாளர் பெற்றுவிடலாம். ஆனால் வங்கி, ஏ.டி.எம். தவிர பிற இடங்களில் கள்ள நோட்டு கிடைத்தால் அந்த நோட்டைப் பெற்ற நபர் நஷ்டத்தைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

    ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, தெரியாமல் ஒன்றிரண்டு கள்ள நோட்டுகள் வைத்திருப்பது பெரிய குற்றமில்லை. ஆனால் மற்றவரை ஏமாற்றும் நோக்கில் கள்ள நோட்டை வினியோகித்தால் அது சட்டப்படி தவறாகும். அம்முயற்சியில் ஈடுபடுபவர், கைது நடவடிக்கைக்கு உள்ளாகலாம்.
    Next Story
    ×