search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்
    X

    மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

    மதுவை பண்டைய காலத்தில் களைப்பு தெரியாமல் இருக்க அருந்துவர் என்ற நிலை இருந்தது. மது அருந்தாமல் இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
    மது மனிதர்களை கொன்று கொண்டே இருக்கிறது. ரத்தம் நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் சென்று உறுப்புகளை இயங்க வைக்கிறது. மது உடம்பில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் சென்று உறுப்புகளை செயல் இழக்க செய்கிறது. மதுவைப்பற்றி அறியாதோர் இவ்வுலகில் எவரும் இல்லை.

    உணவு இல்லாமல் கூட வாழ்ந்து விடுவார்கள். ஆனால் மது இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை இன்று பலருக்கு வந்துவிட்டது. மதுவை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதன் விளைவுகளை பற்றியும் பத்திரிக்கை, வானொலி மூலமாகவும் விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்.

    மதுவினால் பாதிக்கப்படுவது வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட. ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தில், குடும்ப தலைவர் பணத்தை வீட்டிற்கு கொடுப்பதில்லை. மதுவிற்கே பணத்தை செலவிடுகிறார். இது தான் இன்றைய நிலை. மது உயிரை கொல்லும் என்று தெரிந்துமே இதை அருந்துகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சினைகளால் பல குடும்பங்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுவை பண்டைய காலத்தில் களைப்பு தெரியாமல் இருக்க அருந்துவர் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது சந்தோஷமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் மது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். “மாதத்தில் ஒரு நாள் அமாவாசை இருக்கும், ஆனால் மதுவினால் ஒவ்வொரு குடும்பமும் மாதம் முழுவதும் இருட்டாகவே” இருக்கிறது, இந்தநிலை மாற வேண்டும் என்றால் மதுவை அருந்தக் கூடாது.



    மது அருந்தும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் “உங்கள் கோபங்களை ஐந்து நிமிடம் கண்களை மூடி இதுவரை வாழ்ந்த வாழ்வை நினைவுபடுத்தி பாருங்கள். குடும்பத்தில் மகனுக்கு தந்தையை பிடிப்பதில்லை. தந்தை மீது கோபத்தை திணிக்கிறான். கணவன், மனைவியை மதிப்பது இல்லை, இதனால் அழுகை தான் வாழ்வில் அதிகமாக இருக்கும். மதுவை அருந்தாமல் இருந்தால் மகன் தந்தை மீது மிகவும் அன்பு வைத்து இருப்பான். மனைவி, கணவன் மீது பாசத்தை வைப்பாள், குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும்”. நீங்கள் இப்போது கனவு தான் கண்டீர்கள்.

    டாக்டர் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று கூறி இருக்கிறார். நீங்கள் கனவை கண்டு விட்டீர்கள், எப்போது நனவாக்க போகிறீர்கள்?. கலாம் 2020-ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று கனவு கண்டு இவ்வுலகத்தை விட்டு சென்றுவிட்டார். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். அதற்கு மதுவை ஒழிக்க வேண்டும்.

    மதுவை ஒழித்தால், அனைவரும் வேலைக்கு சென்று கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக இருந்தால், வீடு சந்தோஷமாக இருக்கும். பொதுவாக மதுவை ஒழிப்போம் நாட்டை காப்போம் என்று தான் கூறுவோம். ஆனால் முதலில் “மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்” என உறுதியளிப்போம்.

    மது அருந்தாமல் இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நாடு தானாகவே வளர்ச்சி அடையும். அப்படி வளர்ச்சி அடைந்தால் கலாம் கண்ட கனவு நிறைவேறும். 2020-ல் இந்தியா வல்லரசாகும். மதுவை ஒழிப்போம், வீட்டை காப்போம்.
    Next Story
    ×