search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மரண வலையில் சுலபமாக விழும் மனிதர்கள்
    X

    மரண வலையில் சுலபமாக விழும் மனிதர்கள்

    காதல் தோல்வி, உறவுகளிடையே சச்சரவு, கடன் தொல்லை என்று தற்கொலைகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன.
    தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காதல் தோல்வி, தொழில் நஷ்டம், உறவுகளிடையே சச்சரவு, கடன் தொல்லை, நோய் தாக்குதல் என்று தற்கொலைகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. காரணம் என்னவாக இருந்தாலும், அந்த நபரை இழக்கும் குடும்பம் பெருந்துன்பத்திற்கு உள்ளாகிறது. மனித வாழ்க்கையில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அந்த தீர்வைத் தேடும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் தற்கொலை என்ற தேவையற்ற விபரீத முடிவைத் தேடிக்கொள்கிறார்கள்.

    உலக மனநல விழிப்புணர்வு இதழ் ஒன்று, ‘உலகத்திலே இந்தியாவில்தான் அதிகமானவர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்’ என்று குறிப்பிடுகிறது.

    -ஏன் இந்த அவலம்?

    பிறந்து, வளர்ந்து, சமூக அந்தஸ்தை அடைந்து, எல்லோரையும் போல் சிறப்பாக வாழ்ந்து காட்டவேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஆசைதான். ஆனால் ஏதாவது அற்ப காரணத்திற்காக அத்தகைய கனவுகளை துறந்து, விலைமதிப்பில்லாத உயிரை விட்டுவிடுகிறார்கள்.

    தற்கொலைக்கு காரணம் எதுவாக இருந்தாலும், கடைசியில் அது அவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை கொடுத்து, அதற்கு மேல் சிந்திக்க முடியாத தேக்கத்தை ஏற்படுத்தி, ‘அது ஒன்றுதான் முடிவு’ என்பது போன்ற மாயைக்குள் அவர்களைத் தள்ளி, மரணத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடுகிறது.

    ‘தொடர்ச்சியான மனஅழுத்தம்தான் தற்கொலைக்கு காரணம் என்றால், உலகிலே இந்தியர்கள்தான் அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்களா?’ என்ற கேள்வி எழும்.

    உலகில் எல்லா நாட்டு மக்களும், எல்லா தரப்பினரும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகத்தான் செய்கிறார்கள். ஆனால் வெளிநாட்டினர், இந்த விஷயத்தில் அதிக விழிப் புணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அதனால் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத்தேடி அதற்குரிய மனநல ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்களை சந்திக்கிறார் கள். அவர்களது ஆலோசனைகேட்டு, அதன்படி நடந்து, அந்த அழுத்தத்தில் இருந்து விடுபட தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகிறவர்களின் எண்ணிக்கை குறைவு.

    ‘உலகத்திலே என் பிரச்சினைதான் மிக தீவிரமானது. அதற்கு யாராலும் தீர்வு சொல்ல முடியாது’ என்ற எண்ணமோ, ‘அவர்களை போய் அணுகினால் தன்னை மனநோயாளி என்று கருதிவிடுவார்கள்’ என்ற அச்சமோ, அவர்களை தடுத்துவிடுகிறது. குடும்ப பிரச்சினைகளை முகம் தெரியாத நபர்களோடு வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளத் தெரிந்தவர்கள்கூட மனநல மருத்துவர்களை நாடுவதற்கு தயங்குகிறார்கள் என்பது வேதனையான ஒன்று.

    தனது அன்புக்குரியவர்களாக இருப்பவர்கள், நெருக்கத்தை குறைத்து விலக முற்படும்போது ஏற்படும் மன உளைச்சல் சிலரின் தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது. காதல் தோல்வி, பெற்றோரின் இழப்பு, துணைவரின் பிரிவு போன்றவை இந்த வகையில் அடக்கம். பொருளாதார பிரச்சினை, குடும்ப பிரச்சினை, தீராத வியாதிகள் போன்றவையும் கணிசமான தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன. தன்னை உதாசீனப்படுத்தியவர் களை சமூகத்தின் பார்வையில் குற்றவாளியாக நிறுத்தி அவஸ்தைப்பட வைக்க வேண்டும் என்கிற மோசமான எண்ணமும் பல தற்கொலைகளுக்கு பின்னணியாக இருக்கிறது.

    உடல்நலம் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அதே அளவு மனநலமும் நன்றாக இருக்க வேண்டும். அதுதான் தற்கொலைகளை குறைக்கும். உடல் நலத்தைப் போன்று மனநலத்தை பேணவும் மக்கள் முன்வரவேண்டும்.

    மனத் தடுமாற்றத்தால் தற்கொலை செய்ய விரும்புகிறவர்களை கண்டுபிடிப்பதும், தடுப்பதும் ஒருவகையில் எளிதான காரியம்தான். ஏனெனில் பெரும்பாலான தற்கொலைகள் திடீர் முடி வினால் நிகழ்வதில்லை. ஒருவர் தற்கொலைக்கு தயாராகி வருவதை அவரை சுற்றி இருப்பவர்களுக்கு உணர்த்த ஏதேனும் செய்து கொண்டே இருப்பார். இயல்புக்கு மாறாக இருக்கும் அவரது பழக்க வழக்கங்களை உற்றுக் கவனித்தாலே, அவரின் எண்ண ஓட்டத்தை அறிந்துவிடலாம். தன் மனகஷ்டங்களை பிறரிடம் சொல்லி புலம்புவார்கள். இதற்கு பின்னும் நான் உயிர்வாழ வேண்டுமா? என்கிற தொனியில் பேசுவார்கள். தன்னை பற்றி மற்றவர்களுக்கு பரிதாபம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ‘இந்த சின்ன வயதிலே உன் வாழ்க்கையில் இவ்வளவு போராட்டமா” என்று மற்றவர்கள் ஆதங்கப்பட வேண்டும் என்று கருதுவார்கள்.

    தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்கள், தன்னுடைய இஷ்டபொருளை மற்றவருக்கு தானம் செய்துவிட்டு ‘இனி எனக்கு இது தேவையில்லை. நீயே வைத்துக் கொள்’ என்று, அதை பாதுகாக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்களுக்கு மிக நெருக்கமான ரத்த சம்பந்த உறவினர்கள் யாராவது அப்படி தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவர்களை பற்றி அடிக்கடி பேசுவார்கள். ‘அவர் முடிவு சரியானது. அதேபோல நிம்மதி எனக்கும் கிடைத்தால் நல்லது’ என்று பிதற்றுவார்கள். ‘எனக்கு கிடைத்திருக்கும் பணம், புகழ், அழகு, அந்தஸ்து இதெல்லாம் தராத நிம்மதியை தேடிப்போகிறேன்’ என்று சுற்றிவளைத்து பேசி, விரக்தியை வெளிப்படுத்துவார்கள்.

    இப்படி தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்த முடியும் என்கிற மனநல நிபுணர்கள், தொடர்ந்து சில விஷயங்களை வலியுறுத்துகிறார்கள். “தற்கொலை செய்துகொள்பவர்கள் யாரும் விரும்பி மரணத்தை தழுவுவதில்லை. ஆரம்பத்தில் தன்னுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே முயற்சிக்கிறார்கள். அது முடியாதபட்சத்தில் தன்னை முடித்துக் கொள்ள துணி கிறார்கள். அதன் விளைவாக தன்னை கஷ்டப்படுத்தியவரையோ அல்லது தனக்கு தலைவலியாக இருக்கும் விஷயத்தையோ சமூகத்தின் பார்வையில் குற்றவாளியாக்கிட தற்கொலையை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இத்தகைய செயல் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கையை அனைவர் கவனத்திற்கும் கொண்டு சென்றுவிடும் என்றோ, தன் மரணம் கொச்சைப் படுத்தப்படும் என்றோ அவர்கள் புரிந்து கொள்வதில்லை” என்கிறார்கள்.

    ஒரு உயிர் என்பது அந்த ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. பெற்றோர், வளர்த்தவர்கள், அன்பு பாராட்டியவர்கள், உறவுகள், நட்புகள் என்று ஒரு உயிருக்கு அன்பு வழி தொடர்ச்சி அதிக மிருக்கிறது. நாம் சார்ந்து வாழும் உள்ளங்களை சூன்யமாக்கிவிட்டு சுயநலமாக நிம்மதி தேடிக் கொள் கிறேன் என்கிற பெயரில் முட்டாள்தனமாக முடி வெடுக்கக்கூடாது.

    தற்கொலையில் ஈடுபடுபவரால் அவஸ்தைக்குள்ளாகுவது அவருக்கு மிகவும் நெருங்கிய உறவுகளே என்பதை உணர வேண்டும். அவரது திடீர் முடிவால் மனைவி- குழந்தைகள், பெற்றோர் போன்றோர் செய்வதறியாது திகைக்கிறார்கள். தற்கொலைக்குப் பின்னால் நிகழப்போவதை அதுபோன்ற அவசர முடிவு எடுக்கப்போகிறவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    இதுநாள் வரை மதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலைக்குப்பின் சமூகத்தின் பார்வையில் தரம் தாழ்த்தப்படுவார் என்பதை உணர வேண்டும். அவரின் செயல் சமூகத்தில் கேலிக்குரியதாகவே பார்க்கப்படும். உயிரின் விலையை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். மனிதப்பிறவி என்பது மிகமிக அரிது. அதில் இருக்கும் இன்னல்களை கடந்துபோக அனைவருக்கும் போதிய அவகாசம் உள்ளது. வழிகளும் ஏராளம் உள்ளன. அதை முயற்சித்து கண்டடைய வேண்டும். அதற்கு உதவி செய்ய பலர் உள்ளனர். அற்புத பிறவியை தற்கொலை எனும் அவசர முடிவில் தொலைத்து விடக்கூடாது!

    மது போன்ற போதை பொருட்கள் தற்கொலை விஷயத்தில் அதீத பங்காற்றுகிறது. இவற்றுக்கு அடிமையானவர்கள் யாருடைய அறிவுரையையும் ஏற்கும் நிலையில் இருப்பதில்லை. போதையில் ஒருவர் எளிதாக தற்கொலை மனநிலைக்கு தள்ளப்படுகிறார். சாதாரண நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள பயப்படுகிறவர்கள் கூட போதை தலைக்கேறிவிட்டால் விரக்தி அதிகமாகி தற்கொலை பயம் நீங்கி மரணவலையில் சுலபமாக விழுந்து விடுகிறார்கள்.
    Next Story
    ×