search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மகளிர் நலமும் - மகப்பேறு பாதுகாப்பும்
    X

    மகளிர் நலமும் - மகப்பேறு பாதுகாப்பும்

    நவீன காலமாற்றங்களுக்கு ஏற்ப பெண்களின் உடல்நிலை குறித்து எவ்வித கவனம் இருந்தால் வாழ்வில் ஒளிமயம் மலரும் என்று விரிவாக பார்ப்போம்.
    பெண்கள் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். பல பொறுப்புகளை பெண்கள், ஒரே நேரத்தில் கையாளும் சூழல் இன்று நிலவி வருகிறது. மேலும் சமூக சூழலிலும், வாழ்க்கை நடைமுறையிலும் நாம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறோம். முன்னேற்றமும், மாற்றமும் ஒன்று சேரும்போது பெண்களின் உடல் நலத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவெடுக்கின்றன. இவ்வாறான நவீன காலமாற்றங்களுக்கு ஏற்ப பெண்களின் உடல்நிலை குறித்து எவ்வித கவனம் இருந்தால் வாழ்வில் ஒளிமயம் மலரும் என்று பார்ப்போம்.

    இன்றைய சூழலும் கர்ப்பகாலமும் :


    ஒரு பெண் தாயாய் உருவெடுக்கும் காலம் 40 வாரங்கள் அடங்கிய கர்ப்பகாலமாகும். கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள், சத்து மாத்திரைகள் உட்கொள்வது பற்றி பல ஆண்டுகளாக விழிப்புணர்வு பெற்று வருகிறோம். ஆயினும், இன்று புதிய யுக்திகளை கவனிக்க வேண்டியவைகளை பற்றி இதில் காண்போம். இன்று சந்திக்கும் கர்ப்பகால சிக்கல்களில் சில, அதிகரிக்கும் கருச்சிதைவு, கர்ப்பகால சர்க்கரை நோய், கர்ப்பகால ரத்த அழுத்த நோய் மற்றும் அதிகரிக்கும் சிசேரியன் முறை பிரசவம் போன்றவைகளின் காரணங்களையும் அவற்றை, எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றியும் பார்ப்போம்.

    கருச்சிதைவு :

    கருத்தரித்த நாள் முதல் 2 மாதங்களுக்குள் மிக அதிக கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. இதற்கு மரபணுக்கோளாறுகளுடன் உருவாகும் கரு(தரமில்லாத விதை), ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம், தைராய்டு, சர்க்கரை நோய் ஆகியவை முக்கிய காரணமாக அமைகின்றன.

    விர்ப்பது எப்படி?

    கர்ப்பம் தரிக்கும் முன்பே தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெற்று, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். போலிக் ஆஸிட் மாத்திரைகளை கருத்தரிக்கும் முன்பு இருந்தே உட்கொண்டு வந்தால் ஆரோக்கியமான கரு உருவாகும்.

    மாதவிடாய் தள்ளிய உடன் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. பெரும்பாலும் 45 அல்லது 60 நாட்கள் கழித்து முதல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்தஉடன் மருத்துவரின் ஆலோசனைகளை பெற வேண்டும். தேவையான நேரத்தில் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைகளை செய்வது அவசியம்.

    இதனால் ஆரம்பத்திலேயே கருவின் ஆரோக்கியத்தை உறுதி செய்து அதற்கு தக்கவாறு பாதுகாக்கலாம். மேலும் சத்துமாத்திரைகள் உட்கொள்ளுவதன் மூலம் கருச்சிதைவு ஏற்படும் என்றும், குழந்தையின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என்றும், குழந்தை அதிக எடையுடன் பிறக்கும் என்றும் தவறான எண்ணங்கள் இன்று மக்களிடையே வளர்ந்து வருகிறது. இது முற்றிலும் தவறு. நமது உணவு பழக்கவழக்கங்கள் சரியில்லாத இச்சூழலில் சத்து மாத்திரைகள் மிக அவசியமான தேவையாகும்.



    சர்க்கரை நோய்-ரத்த அழுத்தம் :

    பரம்பரை சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், 30 வயது முதல் 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரித்தல், நீண்ட நாள் குழந்தை இன்மை பிரச்சினைக்குப்பின் கருத்தரித்தல் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளோருக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய காரணி உள்ளவர்கள் கருத்தரிக்கும் முன்பே தமது ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிந்து கொள்ள வேண்டும்.

    கருத்தரிப்பதற்கு முன் உடல் எடையினை சீராக்கி கொண்ட பின்னரே கருத்தரிக்க வேண்டும். உணவு பழக்கவழக்கங்களில் மருத்துவ ஆலோசனை பெற்று, கருவுரும் முன்னும், பின்னும் முறையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு சர்க்கரை நோய் வந்துவிட்டால் குழந்தைக்கு பாதிப்பு வராமல் இருக்க அடிக்கடி மருத்துவரின் ஆலோசனைகளையும், முறையான பரிசோதனைகளையும் மேற்கொண்டு சிரமங்களை தவிர்க்கலாம்.

    உயிர்க்கொல்லி :

    முறையான பரிசோதனைகள், மாத்திரைகள் மூலம் ரத்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய தாய்-சேய் உடல் நலப்பாதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

    சிசேரியன் முறை பிரசவம் :

    சுகப்பிரசவம் எண்ணிக்கை குறைந்து சிசேரியன் முறை பிரசவங்களின் எண்ணிக்கை இன்றைய சூழலில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தாய் மற்றும் சேயினை காப்பாற்ற வேண்டிய சூழலில் சிசேரியன் முறை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.

    பிரசவத்தின்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுதல், குழந்தை அதிக எடையுடன் பிறத்தல், தாயின் உயிருக்கு ஆபத்தாகும் ரத்த அழுத்தம், கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு போன்ற சூழ்நிலைகளில் சிசேரியன் முறை பிரசவம் அவசியமாகிறது. இதுத்தவிர வேறுகாரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சிசேரியன் முறை பிரசவங்களை எப்படி தவிர்க்கலாம் என்று காண்போம்.

    நவீன தொழில்நுட்ப காரணத்தினால் உடற்பயிற்சி குறைந்து வருகிறது. உடற்பயிற்சிக்கு இணையான அன்றாட வீட்டு வேலைகளை எந்திரங்களே செய்து வருகின்றன. இதனால் அடி வயிறு, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் உள்ள தசைகளின் பலம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பிரசவ நேரத்தில் குழந்தையின் தலை திரும்பி பிரசவ பாதையில் பொருந்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

    மகப்பேறு காலங்களில் முக்கியமாக பிரசவவலி மற்றும் அந்த நேரத்தில் ஏற்படும் சிரமங்களை எவ்வாறு சந்திப்பது என்பதனை கர்ப்பிணி பெண் மற்றும் கணவர், அவரது குடும்பத்தினர் கர்ப்பகாலத்திலேயே டாக்டர் வழக்கும் அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

    நல்ல உடல் ஆரோக்கியம், தேவையான உடற்பயிற்சி, போதிய மனவலிமை இவை மூன்றும் ஒருசேர இருந்தால் சுக பிரசவத்திற்கு அதிக வாய்ப்புகள் அமையும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் மற்றும் கருத்தடை பற்றிய ஆலோசனைகளை பெண்கள் முழுமையாக டாக்டரிடம் பெற்று தெளிவுபெற்ற பின்னரே வீடு திரும்ப வேண்டும். முறையான கருத்தடை முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தேவையில்லாத, இடைவெளியில்லாத கர்ப்பம், கருக்கலைப்பு ஆகியவற்றை தவிர்த்து பெண் தன் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.

    தாய்மையின் மேன்மையை போற்றுவோம்!

    தாய்-சேய் நலத்தினை கவனமுடன் காப்போம்!

    பெண் சிசுவின் பிறப்பை ஆதரிப்போம்!

    சமுதாயத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து அதற்கு முதுகெலும்பாய்த்திகழும் பெண்களின் மேன்மையை பாதுகாத்து ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுப்போம்.
    Next Story
    ×