search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது.
    கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உண்டு. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும் பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளிப்படும். கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.

    சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு/முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும். இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும்.

    கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.

    முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.

    கருச்சிதவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

    சில பெண்களில் கருச்சிதைவானது திரும்பபத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.
    மெனோபாஸ் காரணமாக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம்.
    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண் டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற் றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், ‘எக்ஸ்சர்சைஸ் பேண்டு’ எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.
    ஆண்களை விட பெண்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். எந்தெந்த வகையில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
    ஒரு நபர் மூன்று நாட்களுக்கு மேல் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கொண்டிருந்தால் மன நல ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்தால், அது கடுமையான மனச்சோர்வாக மாறிவிடும். 6 மாதங்களுக்கும் மேல் நீடித்தால் நாள்பட்ட மன அழுத்தமாக மாறிவிடும். அதில் இருந்து மீள் வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.

    இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆண்களை விட பெண்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். மன சோர்வின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. அதுதான் பாதிப்பை அதிகரிக்க செய்துவிடுகிறது. எந்தெந்த வகையில் மனச்சோர்வு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

    ஆர்வமின்மை:

    மனச்சோர்வுக்கான முதன்மை அறிகுறிகளில் ஒன்று, ஆர்வமின்மை. தாங்கள் விரும்பி அடிக்கடி செய்யும் விஷயங்களை கூட ரசித்து செய்ய மாட்டார்கள். பெரும்பாலான நேரங்களை தனிமையில் செலவிடுவார்கள். வழக்கத்தை விட குறைவாக பேசுவார்கள். மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க விரும்பமாட்டார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் கூட ஆர்வம் இல்லாதது மனச்சோர்வுடன் இருப்பதை உறுதிப்படுத்திவிடும்.

    கவனம் செலுத்துவதில் சிரமம்:

    மனச்சோர்வுடன் இருக்கும் பெண்கள் விருப்பமான செயல்பாடுகளின் மீது கூட கவனம் செலுத்துவதற்கு சிரமப்படுவார்கள். ஏதோ ஒரு விஷயம் அவர்களின் மனதை பாதித்து இருக்கும். அதில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்காமல் அது பற்றியே நினைத்துப் பார்த்து மனதை குழப்பிக்கொள்வார்கள். அது அவர்களின் வேலை மற்றும் செயல்பாடுகளை பாதிக்கும்.

    பசியின்மை:

    உணவு விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். விதவிதமாக சமைத்து, ருசிக்கவும் விரும்புவார்கள். எந்த உணவையும் சாப்பிடும் மன நிலை தனக்கு இல்லை என்று ஒரு பெண் சொன்னால் அது மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கலாம். பசியின்மை பிரச் சினையை எதிர்கொள்வார்கள். மனச்சோர்வின்போது தங் களுக்கு பிடித்தமான உணவுகளை கூட சாப்பிடுவதற்கு விரும்பமாட்டார்கள்.

    தனிமையை நாடுவது:

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனச்சோர்வின் அறிகுறி கள் வேறுபடும். மனச்சோர்வு மகிழ்ச்சியை பறித்துவிடும். சோகத்திற்கும் ஆளாக்கிவிடும். தனிமை சிந்தனை மேலோங்கும். தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள். அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இதை புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். அவர்களுக்கு போதுமான அன்பையும், ஆதரவையும் வழங்குவது அவசியமானது.

    காரணம் இல்லாமல் அழுவது:

    ஒரு நபர் எந்த காரணமும் இல்லாமல் அழுகிறார் என்றால், அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். ஏனென்றால், மனச்சோர்வு உள்ளவர்கள் தங்கள் ஆழ் மனதில் ஏதாவதொரு விஷயத்தை புதைத்து வைத்திருப்பார்கள். அதை நினைத்து பார்த்து அழுவார்கள். அதன் காரணமாக சோகம் குடிகொள்ளும். அது மன ஆரோக்கியத்தை பாதிக்கும் தொடர்ச்சியான செயல்முறையாக மாறிவிடும். எனவே, அழுகை எட்டிப்பார்த்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

    தூக்கமின்மை:

    மனச்சோர்வின்போது எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை தூக்கமின்மை. மனச்சோர்வினால் பாதிக்கப்படுபவர் களுக்கு ரத்த சோகை அல்லது தூங்குவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. சிலர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பார்கள். மனச்சோர்வின் காரணமாக தூக்க சுழற்சி பாதிப்புக்குள்ளாகிவிடும்.
    பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.
    முட்டைக்கோஸ்

    முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன் மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

    ப்ராக்கோலி

    கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக்  அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது. கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

    மாதுளை

    மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

    வாழைப்பழம்

    சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

    அன்னாசிப்பழம்

    அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக, உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

    முட்டை

    முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும் வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

    மஞ்சள்

    சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
    கருப்பைக்கு உள்ளும் சுற்றியும் வளரும் புற்று அல்லாத கட்டியே கருப்பைத்திசுக்கட்டி என அழைக்கப்படுகிறது. இந்த நோய் வரக்காரணமும், அறிகுறியையும் அறிந்து கொள்ளலாம்.
    கருப்பைக்கு உள்ளும் சுற்றியும் வளரும் புற்று அல்லாத கட்டியே கருப்பைத்திசுக்கட்டி என அழைக்கப்படுகிறது. இது கருப்பைத் தசைக்கட்டி என்றும் சில சமயம் அழைக்கப்படும். கருப்பைச் சுவரின் உள்ளும் புறமும் வளரும் உயிரணுக்கள் மற்றும் பிற திசுக்களால் கருப்பைத்திசுக்கட்டி உருவாகிறது. இதன் காரணம் தெரியவில்லை. அதிக எடையும் உடல் பருமனுமே ஆபத்துக் காரணிகள். ஆப்பிரிக்க-அமெரிக்கர்களிடம் பெரும்பாலும் இது காணப்படுகிறது. அவை கருப்பையின் எந்த இடத்திலும் வளரலாம். இடத்தைப் பொறுத்துப் பெயர் பெறுகிறது.

    * அகச்சுவர் கருப்பைத்திசுக்கட்டி: இவ்வகை, கருப்பைத் திசுக்களுக்குள் வளருகிறது. இது வளர மிகவும் பொதுவான இடம் இதுவே.
    * நிணநீர்ச்சவ்வடி கருப்பைத்திசுக்கட்டி: இது கருப்பை வெளிச்சுவரில் இருந்து இடுப்புப் பகுதிக்குள் வளருகின்றது.
    * சளிச்சவ்வடி கருப்பைத்திசுக்கட்டி: இது பொதுவாக கருப்பையின் உட்சுவரில் இருந்து நடுவை நோக்கிக் காணப்படுகிறது.
    * தனிக்காம்பு கருப்பைத்திசுக்கட்டி: இது கருப்பையின் வெளிச்சுவரில் இருந்து வளர்ந்து ஒரு குறுகிய தனிக்காம்பில் இணைந்துள்ளது.

    நோயறிகுறிகள்

    கருப்பைத்திசுக்கட்டி உள்ள பல பெண்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் அவற்றில் அடங்குவன:

    * அதிக, வலியோடு கூடிய மாதவிடாய் அல்லது மாதவிடாய்களுக்கு இடையே உதிரப்போக்கு
    * கீழ் வயிறு நிறைந்திருப்பது போல் உணர்வு
    * அடிக்கடி சிறுநீர் கழித்தல்
    * உடலுறவின் போது வலி
    * கீழ் முதுகு வலி
    * மலட்டுத்தன்மை, பலதடவை கருக்கலைவு அல்லது முன்கூட்டியே குழந்தை பிறத்தல் போன்ற இனப்பெருக்க பிரச்சினைகள்

    காரணங்கள்

    மென்மையான தசையணுக்களின் மிகை வளர்ச்சியே கருப்பைத்திசுக்கட்டி. கருப்பை பெரும்பாலும் மென்மையான தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை:

    * மரபியல் காரணமாக இருக்கலாம்
    * முட்டைப்பையில் உருவாகும் பெண் இயக்குநீரால் கருப்பைத்திசுக்கட்டி பாதிப்படைகிறது. இந்நீர் அதிகமாகும்போது கருப்பைத்திசுக்கட்டி ஊதுகிறது; உதாரணமாகக் கர்ப்பகாலத்தில். மாதவிடாய் நின்ற பின் பெண் இயக்குநீர் குறைவடையும் போது கட்டி சுருங்குகிறது.

    நோய் கண்டறிதல்

    உடல் பரிசோதனை: மருத்துவர் உள்ளாய்வு (கருப்பை) நடத்தும் போது கருப்பைத்திசுக் கட்டியைக் கண்டறியலாம்.

    கருப்பை ஊடுறுவல் கேளா ஒலி: கருப்பைத்திசுக்கட்டியைக் கண்டறிய இச்சோதனை சிலசமயம் பயன்படுத்தப்படுகிறது. இது வலியற்ற சோதனை. கருப்பைக்குள் ஒரு சிறு கருவி நுழைக்கப்படுகிறது. ஒலி அலைகள் மூலம் கருப்பையின் பிம்பம் தொலைக்காட்சி திரையில் உருவாக்கப்படுகிறது.

    அகநோக்கு அறுவை: இம்முறையில் புகைப்படக் கருவி இணைக்கப்பட்டுள்ள குழாய் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வயிறு அல்லது இடுப்பின் உட்பகுதி ஒரு தொலைக்காட்சித் திரையில் பிம்பமாக மாற்றப்படுகிறது. அகநோக்குக் கருவி வளையும் அல்லது விறைப்பானதாக இருக்கலாம். ஆனால் கருப்பைத்திசுக்கட்டியைக் கண்டறிய விறைப்பான ஒன்று பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

    துல்லியமாகக் கண்டறிய மருத்துவரை அணுகவும்.
    மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, வேலை செய்யும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதையோ அல்லது வேலையில் கவனம் செலுத்துவதையோ குறைக்கிறார்கள்.
    உங்களுடைய நாளை சரியாகத் திட்டமிட்டு தொடங்குங்கள். உங்களது தேவைகளில் தெளிவாக இருங்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தினை வசதியாக அமைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இது உங்கள் வேலையில் மனம் இலகுவாகச் செயல்பட உதவும்.

    இன்றைய பெண்கள் ஒரே நேரத்தில் பல பாத்திரங்களை வகிக்கிறார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் நேரத்தை ஒதுக்குவதற்குத் திணறுகிறார்கள். ஓய்வு நேரம், உடற்பயிற்சி, நட்பு மற்றும் தூக்கம் போன்றவற்றுக்கு ஒரு பெண்ணின் தினசரி அட்டவணையில் இடம் இருப்பது நல்லது.

    எல்லா வேலைகளையும் தாங்களே செய்யாமல், குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளலாம். உறவுகளைப் பலப்படுத்துவது இயல்பிலேயே பெண்களின் குணம்.

    மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, வேலை செய்யும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதையோ அல்லது வேலையில் கவனம் செலுத்துவதையோ குறைக்கிறார்கள். இது குழந்தைகளின் வளர்ப்பு, தேவைகள், படிப்பு போன்றவற்றை பாதிக்கும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன. முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

    ரிதம் (காலண்டர்) முறை (Rhythm calendar method)

    இந்த முறைப்படி மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்கு பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சிப் பருவத்தில் உடலுறவைத் தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம் மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும் இந்த முறையில் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

    பில்லிங்ஸ் முறை (Billings or Ovulation Method)

    பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன் இது சற்று குறைந்த அளவில் வறண்டு கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்புத் தன்மை கரு முட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும் இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும்போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

    உடலில் வெப்ப மாறுபாடு

    * பெண்களில் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தின் நடுப்பகுதியில் கண்காணித்தல் வேண்டும்.

    * அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும்போது உடலில் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்ஹிட் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்துக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
    இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் கஷ்டத்தையும் அனுபவிப்பார்கள். அதில் ஒன்று தான் இரத்தக்கசிவு ஏற்படுவது. பொதுவாக கர்ப்பிணிகளுக்கு இரத்தக்கசிவு ஏற்படக்கூடாது. இருப்பினும் சிலருக்கு சில காரணங்களால் கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படும். அதற்காக பயப்பட வேண்டாம். ஏனெனில் இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும். இங்கு கர்ப்பிணிகளுக்கு எப்போதெல்லாம் இரத்தக்கசிவு ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

    கர்ப்பிணிகளின் கருப்பை வாயானது மிகவும் சென்சிடிவ்வாக இருந்தால், அப்போது லேசாக இரத்தக்கசிவு ஏற்படும். அதுவும் கர்ப்பமாக இருக்கும் போது உறவில் ஈடுபட்டால் இத்தகைய இரத்தக்கசிவு ஏற்படும்.

    கருமுட்டையானது வளர்ந்து, கருப்பையில் பதியும் போது, கருப்பையில் நிறைந்துள்ள இரத்தமானது கசிய ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் தான் சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் லேசாக இரத்தக்கசிவு ஏற்படுகிறது.

    நஞ்சுக்கொடியானது கருப்பை சுவரில் இருந்து முழுமையாகவோ அல்லது பாதியாகவோ தகர்ந்து காணப்பட்டால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். பொதுவாக இந்த நஞ்சுக்கொடி தகர்வானது பிரசவத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் அல்லது பிரசவம் நடைபெறும் போது ஏற்படும்.

    கருமுட்டையானது கருப்பையில் வளராமல், வேறு இடங்களில் அதாவது கருமுட்டை குழாயில் வளர ஆரம்பித்தால், அப்போதும் இரத்தக்கசிவு ஏற்படும். அதுமட்டுமின்றி இந்த காரணத்தினால் இரத்தக்கசிவு வந்தால், அத்துடன் கடுமையான வலி மற்றும் பிடிப்புக்கள் அடிவயிற்றில் ஏற்படக்கூடும்.

    நஞ்சுக்கொடியானது கருப்பை வாயை முழுமையாவோ அல்லது பாதியாகவோ உள்ளடக்கியிருந்தால், அளவுக்கு அதிகமாக இரத்தக்கசிவு ஏற்படும். இந்த நிலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், பெண்கள் தரையில் நேராக படுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த மாதிரியான சூழ்நிலையில் தாய் மற்றும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிசேரியன் செய்யக்கூடும்.
    பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
    எடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

    நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள். இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர்.

    உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும் ஒன்றாக இந்தப் பாதணிகள் விளங்குகின்றன. இப்போது பெண்கள் சேலை அணிந்தால் கட்டாயம் குதிகால் பாதணிதான் அணிய வேண்டும், இல்லையென்றால் சேலைக்கு எடுப்பாக இருக்காது என்று கூறும் நிலை வந்துவிட்டது. அது மட்டுமல்ல, குட்டையான பாவாடைகளை அணியும் பெண்களும் இதனைதான் கடைப்பிடிக்கின்றார்கள். இதைவிட பெண்களின் அழகை இந்தப் பாதணிகள் மேலும் மெருகூட்டி காட்டுகின்றன.

    இவற்றைத்தவிர, இந்த பாதணிகளால் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. நாகரீக மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தோற்றங்களிலும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்கள் மேலைத் தேய மோகத்தில் அதிகமாகவே ஈர்க்கப்பட்டு விட்டனர். இவ்வாறான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள் பணத்தை கொடுத்து பொருட்களை மட்டும் வாங்கவில்லை. பொருளுடன் சேர்த்து உடல் நலக்கேடுகளையும் வாங்கிக்கொண்டு வருகின்றார்கள். இத்தகைய அதி உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.  

    இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன. நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது. அதிக உயரமாக பாதணிகளை அணிந்துக்கொண்டு வீதியில் செல்லும் போது எமது இயல்பான நடையை மறந்து பாதுகாப்பாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் கீழே விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதைவிட வீதியில் விழவேண்டியும் ஏற்படும்.

    உயர் குருதியழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்துவிடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியதவைதான். இன்னும் சொல்லப்போனால் இந்தப் பாதணிகளை அணிந்துக்கொண்டு எந்தவித பயமும் இன்றி பளபளப்பான மேடையில் நடனமாடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர். இவ்வாறான பாதணிகளை தொடர்ந்து அணியாமல் குறிப்பிட்ட நிகழ்வுக்காக அணிந்தால் அது பெரிதளவான பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், தினமும் அதனையே அணிய விரும்புபவர்கள் கொஞ்சம் பணத்தை வைப்பிலிட்டு சேமித்துக்கொண்டாரல் எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களுக்கு செலவிடுவதற்கு இலகுவாக இருக்கும்.
    பெண்கள் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் இப்போதைய பரபரப்பான வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள்.
    நம் உடலில் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும். உடலில் தைராய்டு சுரப்புக்குறை எற்படுவதால், எந்நேரமும் தூக்கம், மறதி, உடல் தைராய்டு சுரப்புக்குறை ஆகியன மக்கள் தொகையில் மூன்று சதவீதம் பேருக்கு இருக்கின்றது. தைராய்டு, பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால் ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெல்லிக்காய் அளவில் கழுத்தில் ஒரு வீக்கம் தெரிகிறதா? கொஞ்சமாக சாப்பிட்டும்கூட எடை கூடிக்கொண்டே இருக்கிறதா? உற்சாகமின்றி அடிக்கடி களைப்புடன் காணப்படுகிறீர்களா?

    இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்குப் பதில், ஆமாம் என்றால் கூட உங்களுக்கு தைராய்டு தொடர்பான சிக்கல் உண்டாகியிருக்க வாய்ப்பு உண்டு. கழுத்தின் முன்பக்கமாக இருக்கிறது தைராய்டு சுரப்பி. அங்கே புடைத்துக்கொண்டிருக்கும் பகுதியை ஆடம்ஸ் ஆப்பிள் என்பார்கள். அதற்கு கொஞ்சம் கீழே இருக்கிறது தைராய்டு. சுவாசக்குழாய்க்கு முன்புறமும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக விரிந்திருக்க, நடுவே சுருங்கி இருக்கிறது இந்த சுரப்பி. ஒரு பட்டாம்பூச்சிபோல் தோற்றம் அளிக்கிறது இது. தைராய்டு சுரப்பி, தைராக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது உடலின் பல வேலைபாடுகளுக்கு அடிப்படையாகிறது. முக்கியமாக உடலில் மெடபாலிஸத்துக்கு.

    அதாவது மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவற்றின் செரிமானத்தை இது கட்டுபடுத்துகிறது. தசை வளர்ச்சி எலும்புகளின் உருட்கி ஆகியவற்றுக்கு தைராய்டு முக்கியச் காரணமாக அமைகிறது. தைராக்ஸின் குறைவாகவோ, அதிகமாகவோ, சுரக்கும்போது பிரச்னைகள் உண்டாகின்றன. தைராக்ஸின் போதிய அளவில் சுரக்க வேண்டும் என்றால் அதற்கு அயோடின் சத்து தேவை. அயோடின்தான் தைராக்ஸின் சுரப்பதற்கு தூண்டுகோலாக இருக்கிறது. பொதுவாக நாம் பயன்படுத்தும் தண்ணீரிலேயே நம் உடம்புக்கு இந்த அயோடின் சத்து கிடைத்துவிடுகிறது என்றாலும் மலைப்பகுதியில் வாழ்பவர்களுக்கு அங்குள்ள தண்ணீரிலும், உப்பிலும் வழக்கத்தைவிட குறைவான அயோடினே இருப்பதால் தைராக்ஸின் குறைவாகச் சுரந்து சிக்கல்களை உண்டாக வாய்ப்பு அதிகம்.

    நகரங்களில் வசிப்பவர்களுக்கும் தைராக்ஸின் குறைபாடு ஏற்படுவது உண்டு. அதுவும் இப்போதெல்லாம் தைராய்டு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சிலருக்கு பிறவியிலேயே இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கிறது. பிரசவம், பூப்பெய்தல், மாதவிலக்கு போன்ற சமயங்களில் உடலிலும், மனத்திலும் உண்டாகும் இறுக்கங்கள் காரணமாகவும் தைராய்டு பிரச்னைகள் உண்டாகலாம். அப்போது உடலுக்கு தைராக்ஸின் தேவை அதிகமாக ஏற்படலாம். அந்த அளவுக்கு இந்த ஹார்மோன் சுரக்காதபோது, தைராய்டு சுரப்பி தன்னை பெரிதாகிக்கொள்ளும். அப்படியாவது தைராக்ஸின் அதிகம் சுரக்கட்டும் என்பதற்காக இயற்கை செய்யும் விந்தை இது. ஆனால் அப்போதும் போதிய தைராக்ஸின் கிடைக்காமல் போகலாம்.

    நாளடைவில் உடலுக்கு தேவையான அளவு தைராக்ஹினை இந்த சுரப்பியால் சுரக்கமுடிந்தால் பெரிதான சுரப்பி தானாகவே பழைய நிலையை அடையக்கூடும். அப்படி இல்லையென்றால் வீக்கம் தொடர்ந்து பெரிதாகும். மிக அதிக அளவில் பெண்கள்தான் தைராய்டு பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இப்போதைய பரபரப்பான வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள். முதலில் பட்டாணி அளவுக்குதான் இந்த சுரப்பி வீங்கும். அதற்கு பிறகு, பெரிய நெல்லிக்காய் அளவில் விரிவடையும். பின்னர் மேலும் பெரிதாகும். சிலருக்கு தொடக்கத்திலேயே தொண்டைப் பகுதியில் இரண்டு மூன்று கட்டிகள் தோன்றலாம்.

    இவை ஒவ்வொன்றும் பெரிதாகும் போது நாளடைவில் பார்க்கவே விகாரமாக இருக்கும். அதேசமயம் பார்வைக்கு விகாரமாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே இதில் ஏற்படும் பிரச்னை அல்ல. பெரும்பாலும் பெரிதாக வளர்ந்துவிட்ட தைராய்டு சுரப்பி மீண்டும் பழைய நிலையை அடைவதில்லை. உள்ளுக்குள் ரத்தக்கசிவும் ஏற்படலாம். அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். மருந்தினால் இதை குணப்படுத்திவிட முடியாது. அறுவை சிகிச்சையின் மூலம் வீக்கப்பகுதியை நீக்கிவிடுவார்கள். தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தால் கழுத்துப்பகுதியில் வீக்கம் கட்டாயம் தோன்றுமா? என்றால், அவசியமில்லை. வீக்கம் இல்லாமல் கூட தைராக்ஸின் மிகக் குறைவாக சுரக்கலாம்.

    இதற்கு ஆயுள் முழுவதும் மாத்திரைகள் உட்கொள்ளவேண்டி இருக்கும். தைராக்ஸின் அதிகமாக சுரப்பதும் சிக்கல்தான். தைராக்ஸின் அதிகமாக சுரக்கும் நபரின் கைகளில் நடுக்கம் இருக்கும். அவர்களால் வெப்பத்தை தாங்க முடியாது. சரியாக தூங்க முடியாது. கண்கள் வீங்கும். எடை குறையும். மருந்துகளின் மூலம் தைராக்ஸின் சுரப்பதைக் குறைக்கலாம்.

    கதிரியக்க அயோடின் சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியையே செயலற்றதாக ஆக்க முடியும். அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை நீக்குவதும் ஒரு வழிதான். தைராக்ஸின் குறைவாக சுரந்தால் முதல் கட்டமாக மாத்திரைகள் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்ய முயற்சிக்கப்படும். வீக்கம் அதிகமாகி பார்வைக்கு உறுத்தலாக இருக்கும் நிலையில், இதை சரிசெய்யத்தான் தைராய்டு சுரப்பியில் வீங்கிய பகுதி அறுவைச்சிகிச்சையின் மூலம் நீக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியையோ அல்லது அதை முழுவதுமாகவோ நீக்கிட்டால் அதற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் தினமும் தைராக்ஸின் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டி இருக்கும்.

    சாப்பிடக் கூடியவை

    தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

    தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மில்லி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்து பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

    பாதுகாப்பு முறை:

    உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ள கூடாது. உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டை தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
    பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு மாற்றாக இயற்கை மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் நாப்கின்களுக்கு மவுசு கூடி வருகிறது.
    மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாததாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு மாற்றாக பருத்தி, மரக்கூழ், வாழை நார், கரும்பு சக்கை போன்ற இயற்கை மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் நாப்கின்களுக்கு மவுசு கூடி வருகிறது.

    அந்த வாய்ப்பை கனகச்சிதமாக கையாண்டு தொழில்முனைவோர்களாக மாறி நாப்கின் தயாரிப்பில் பல மடங்கு லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட தொழில் முனைவோர்களுள் ஒருவராக விளங்குகிறார், சுஜாதா பவார். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே பகுதியை சேர்ந்த இவர், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய இயற்கை சானிட்டரி நாப்கின்களை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கினார்.

    இன்றைக்கு இந்தியா முழுவதும் விற்பனையை விரிவுபடுத்தி இருப்பவர் நேபாளம், சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார். கடந்த பத்தே மாதங்களில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் வணிகம் செய்துள்ளதோடு, 30 பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார்.

    33 வயதான சுஜாதா பி.பார்ம் முடித்துவிட்டு எம்.பி.ஏ. படித்தவர். படிப்பை முடித்ததும் 8 ஆண்டுகளாக பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றினார். அவரது கணவரும் இதே துறையில் வேலை பார்த்ததால், வருமானத்திற்கு குறைவில்லை. அதனால் வேறு தொழில் தொடங்க வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கவும் இல்லை. பிறகு எப்படி இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரித்து இந்த நிலையை எட்டிப் பிடித்தார்? என்பதை சுஜாதாவே கூறுகிறார்...

    "மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தும்போது மற்ற பெண்களை போல் எனக்கும் பிரச்சினை வந்தது. அப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தாத நாப்கின்களை எப்படி தயாரிப்பது? என்ற ஆராய்ச்சியில் களம் இறங்கினேன்.

    நீண்ட ஆய்வுக்கு பிறகு, தற்போது புழக்கத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களில் பிளாஸ்டிக் மூலக்கூறுகளும், சில ரசாயனப் பொருட்களும் இருப்பதை தெரிந்து கொண்டேன். இதனால்தான் பெண்களுக்கு தோல் வியாதி தொடர்பான பாதிப்புகள் வருவதையும் புரிந்து கொண்டேன்.

    அதோடு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கும் இந்த சானிட்டரி நாப்கின்களே காரணம் என்பதும் புரிந்தது. இதற்கு மாற்றாக நாப்கின்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு பருத்திதான் சரியான மாற்றாக இருக்க முடியும் என்பதை பல்வேறு ஆய்வு தகவல்கள் உறுதிப்படுத்தின. அந்த காலத்தில் கிராமப்புறப்பெண்கள் நீண்ட காலமாக பருத்தி துணிகளையே பயன்படுத்தி வந்தனர்.

    அதன் அடிப்படையில் இயற்கையான சானிட்டரி நாப்கின்களை தயாரித்தேன். அதனைப் பயன்படுத்திய பின்பு எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உறவினர்களுக்கும் கொடுத்தேன். எனது நாப்கின்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் இரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டன. முதலில், இந்த நாப்கினைப் பயன்படுத்திய பிறகு மீண்டும் துவைத்துப் பயன்படுத்த இரண்டு நாட்கள் ஆனது. இரண்டாவதாக, இந்த நாப்கின்களை துவைத்து பயன்படுத்தியபோது உடலுக்கு பிரச்சினை ஏற்பட்டது.

    சரியாக சுத்தம் செய்யாவிட்டால், இந்த நாப்கின் பயன்படுத்தினாலும் தொற்று ஏற்படும் நிலை இருந்தது. அதன் பிறகு, வடிவமைப்பு நிறுவனத்தின் உதவியோடு, மீண்டும் பயன்படுத்தும் வகையிலான இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க தொடங்கினேன். அந்த நாப்கின் எளிதில் உலரும் தன்மையுடன் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதும் பாதுகாப்பானது'' என்பவர் தான் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாப்கின் தயாரிப்பில் முழு நேரமாக ஈடுபட தொடங்கிவிட்டார்.

    ''ஆரம்பத்தில் 5 மாதங்கள் வீட்டிலேயே வைத்து நாப்கின் தயாரித்தேன். வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தானேயில் அலுவலகத்தை தொடங்கினோம். தற்போது என்னுடன் சேர்த்து 30 பேர் பணியாற்றி வருகிறோம். இதில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்கள் பேக்கிங் பணிகளை செய்கிறார்கள்.

    என் கணவரும் வேலையை விட்டுவிட்டு என்னுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது நாங்கள் இயற்கை சானிட்டரி நாப்கின் தயாரிக்க ரூ.25 லட்சம் முதலீடு செய்துள்ளோம். இதில் பெரும்பாலான தொகையை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளோம். இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்களை வாங்குவதற்கு இந்த முதலீட்டைப் பயன்படுத்தியுள்ளோம். அதோடு, சந்தை வியூகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்காகவும் செலவு செய்துள்ளோம்.

    சமூக ஊடகங்கள் வழியே எங்கள் சந்தைப்படுத்தலை தொடங்கினோம். எங்கள் தயாரிப்பு தொடர்பான படங்களையும், வீடியோக்களையும் அதில் பகிர்ந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேவேளையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என்று நினைத்தேன். எந்த சானிட்டரி நாப்கின் நல்லது என்பதை வீடியோக்கள் மூலம் விளக்கினேன். அதன்பிறகு நிறைய ஆர்டர்கள் வரத்தொடங்கின.

    தற்போது மூன்று விதமான இயற்கை சானிட்டரி நாப்கின்களை தயாரித்து வருகிறோம். முதல் தயாரிப்பான காட்டன் சானிட்டரி நாப்கின்களை 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். ஒரு முறை பயன்படுத்திய பிறகு 4 மணி நேரத்தில் இது உலர்ந்துவிடும். இரண்டாவது தயாரிப்பு, ஒருமுறை பயன்படுத்தும் இயற்கை சானிட்டரி நாப்கின். இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக மாதவிடாய் கோப்பையை தயாரித்துள்ளோம். இது சிலிக்கானில் தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பையை 4 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்" என்றார்.
    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது.
    குழந்தைகள் மற்றும் தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து, குடும்ப கட்டுப்பாடு, கல்வி அறிவு, திருமண வயது, நல வாழ்வு, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (என்.எப்.எச்.எஸ்) மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி இரண்டு கட்டங்களாக கள ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வரும் போக்கு நிலவுவதை கள ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 15-49 வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமனாக உள்ளனர்.

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது. கோவா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், இந்த விகிதம் 900-க்கும் குறைவாக உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறக்கும் பாலின விகிதம் கொண்ட ஒரே மாநிலமாக திரிபுரா உருவெடுத்துள்ளது.

    2015-16-ம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த பதின்ம வயது கர்ப்பம் 43 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. 2015-16-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது குழந்தை திருமண விகிதம் 26.8 சதவீதமாக இருந்தது. தற்போது 23.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ வசதி கொண்ட இடங்களில் நடக்கும் பிரசவம் 2015-16-ல் 78.9 சதவீதமாக இருந்தது. தற்போது 88.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் சிசேரியன் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் சிசேரியன் பிரசவம் 47.4 சதவீதமாகும். அரசு மருத்துவமனைகளில் 14.3 சதவீதம் சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கவலைக்குரியதாகவே உள்ளது.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை (வயதுக்கு ஏற்ப உயரம்) சற்று குறைந்துள்ளது. 2015-16-ல் 38.4 சதவீதத்தில் இருந்து சமீபத்திய கணக்கெடுப்பில் 35.5 சதவீதமாக குறைந்துள்ளது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ அதிகமான பெண்கள் சொந்தமாக வீடு வைத்துள்ளனர். இது 38.4 சதவீதத்தில் இருந்து 43.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையலுக்கு கியாஸ் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களின் சதவீதம் 43.8 சதவீதத்தில் இருந்து 58.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    ×