search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சந்தேரி புடவையின் பின்னணியில் உள்ள சுவாரசியம்
    X

    சந்தேரி புடவையின் பின்னணியில் உள்ள சுவாரசியம்

    சந்தேரி காட்டன் மற்றும் சந்தேரி பட்டுப்புடவைகள் இன்றைய இளம் பெண்கள் விரும்பி அணியும் புடவை வகையாக இருக்கிறது.
    சந்தேரி காட்டன் மற்றும் சந்தேரி பட்டுப்புடவைகள் இன்றைய இளம் பெண்கள் விரும்பி அணியும் புடவை வகையாக இருக்கிறது. இதற்கு காரணம் அந்த புடவைகளின் எடைகுறைவு, வழுவழுப்பான தன்மை மற்றும் பார்க்க கம்பீரமாக தோன்றுவது போன்றவைகள். சந்தேரி சில்க் காட்டன் புடவைகளை பட்டுநூல், பருத்தி நூல் மற்றும் ஜரிகை கொண்டு நெய்யப்படுகிறது. இந்த நூல்களில் தரம் உயர்வானதாக இருப்பதால் இந்த துணிக்கு கம்பீரமும் நேர்த்தியும் ஒருங்கே கிடைக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சின்ன நகரம் தான் சந்தேரி. இந்த ஊரை சுற்றியுள்ள நெசவாளர்களின் திறமையான கைவண்ணத்தில் உருவாவது தான் சந்தேரி காட்டன் மற்றும் சந்தேரி சில்க் புடவைகள்.

    பழங்காலம் முதல் கைத்தறி நெசவிற்கு பெயர்பெற்ற ஊராக இருந்து வந்துள்ளது சந்தேரி. இவர்களின் நெசவுத்தொழில், புராதன இதிகாச காலத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் சகோதரரான சிசுபாலன் தோற்றுவித்ததாக ஒரு வரலாறு இருக்கிறது. கைத்தறி நெசவு செய்து வந்த சந்தேரி மக்கள் 1890களில் கைத்தறியிலிருந்து மில் உற்பத்திக்கு மாறியதாக கூறப்படுகிறது.



    1910ஆம் ஆண்டு சந்தேரி புடவைகளை ‘சிந்தியா’ அரச குடும்பத்தினர் உடுத்தத் தொடங்கி அந்த நேரத்தில் ஜரிகை குழையில் புட்டா மற்றும் டிசைன்கள் போடப்பட்டு மிகவும் ஆடம்பரமாகவும் நெய்யப்பட்டனவாம். காட்டன் மஸ்லின் துணியில் ஜரிகை டிசைன் போடப்பட்டது அதுவே முதல்முறை என்று தெரிகிறது. முகலாயர் காலத்திலும் இந்த புடவைகளை மகாராணிகள் அணிந்து வந்துள்ளனர். 1930களில் சந்தேரி நெசவாளர்கள் ஜப்பானிய பட்டை கண்டுபிடித்தனர். அதுவரை காட்டன் ‘பாலை’ மட்டுமே உபயோகித்து வந்த அவர்கள் அதன் பின் பட்டு பாலையும் உபயோகிக்க துவங்கினர்.

    தனித்தன்மை கொண்ட வித்தியாசமான டிசைன்களை கொண்ட இந்த புடவைகளின் துணி மிகவும் மெல்லியது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

    அந்த காலத்தில் சந்தேரி புடவைகள் பெரும்பாலும் வெளிர் நிறங்களில்தான் அதிகம் இருக்கும். ஆனால் தற்காலங்களில் கருப்பு, சிவப்பு, பர்பிள் போன்ற அடர்த்தியான நிறங்களும் காணப்படுகின்றன. இதில் பொறிக்கப்படும் ஜரிகை டிசைன்கள் இன்றளவும் கூட கைகளால் தான் பெரும்பாலும் செய்யப்படுகின்றன. தங்க நிறம், வெள்ளி நிறம் மற்றும் செம்பு நிற ஜரிகைகளுக்கு என்று தனித்தனி ஊசிகள் இந்த டிசைன்களை இவர்கள் நெய்கிறார்கள்.

    மிக மெல்லிய வழுவழுப்பான தோற்றமே இத்துணியின் தனித்தன்மைக்கு காரணமாக இருக்கிறது. பழமையாக சந்தேரி புடவைகள் என்பது கஜமாகத் தான் நெய்யப்பட்டன. பின்பு தான் ஆறு கஜம் தரத் தொடங்கியது. இன்றைய ஃபேஷன் டிசைனர்கள் பல விதமான இந்திய ஐரோப்பிய ஆடை வகைகளுக்கு சந்தேரி துணியை விரும்பி பயன்படுத்துகின்றனர்.
    Next Story
    ×