search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பட்டுப்புடவையை துவைக்கலாமா?
    X

    பட்டுப்புடவையை துவைக்கலாமா?

    பட்டுப்புடவையை துவைக்கலாமா, பட்டுப்புடவையை எப்படி பராமரிப்பது என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கான விடையை பார்க்கலாம்.
    பட்டுப்புடவையை துவைக்கலாமா என்பது தான் பலருக்கும் உள்ள முக்கிய சந்தேகம். தாராளமாகத் துவைக்கலாம். ஆனால், அதற்கென ஒரு முறை இருக்கிறது. அதாவது, முதல் சில முறைகள் அணிகிற போது, உடனுக்குடன் பட்டுப்புடவையைத் துவைக்க வேண்டியதில்லை. வியர்வை ஈரமும், நாற்றமும் போகிற படி சிறிது நேரம் நிழலில் உலர்த்தி எடுத்து மடித்து வைத்தாலே போதும். துவைத்தால் தேவலை என்கிற நிலை வரும் போது, வாஷிங் மெஷினில் போடுவதோ, வழக்கமான டிடெர்ஜென்ட்டில் ஊற வைத்துத் துவைப்பதோ கூடாது. சோப் போட்டுத் தேய்க்கக் கூடாது.

    குளிர்ந்த தண்ணீரில் மைல்டான ஷாம்பு சிறிது கலந்து, அதில் புடவையை முக்கியெடுத்து, மறுபடி ஒரு முறை நல்ல தண்ணீரில் அலசி உலர்த்தி னாலே போதும். பார்டர் ஒரு கலரிலும், உடல் இன்னொரு கலரிலும் உள்ள புடவைகள் என்றால் முதலில் முந்தானையை முக்கியெடுத்துவிட்டு, பிறகு உடல் பகுதியைத் துவைக்கலாம். புதிதாக வாங்கிய பட்டுப்புடவையில் லேசான மொடமொடப்பு இருக்கும். துவைத்து விட்டால் அது போய் விடும். அதே லேசான மொட மொடப்பு வேண்டும் என விரும்புவோர், சாதம் வடித்த கஞ்சியை நன்கு நீர்க்கச் செய்து, அதைக் குளிர்ந்த தண்ணீரில் கலந்து, புடவையை ஒரே முறை நனைத்துக் காய வைக்கலாம்.
     
    பட்டுப்புடவையை துவைத்ததும், அதை முறுக்கிப் பிழிவது கூடாது. மிக மிக மென்மையாகக் கையாள வேண்டும். ரொம்ப நேரம் தண்ணீரில் ஊற வைப்பதோ, துவைத்த பிறகு நீண்ட நேரம் அப்படியே ஈரத்துடன் வைத்திருப்பதோ கூடாது. உடனடியாக நிழலில், அதாவது, நேரடியான வெயில் படாத இடத்தில் உலர்த்த வேண்டும். எப்போதாவது ஒரு முறை ட்ரை வாஷுக்கு கொடுத்து வாங்கலாம்.

    அடிக்கடி ட்ரை வாஷ் செய்வதும் நல்லதல்ல. பட்டுப்புடவையில் கறைகள் ஏதும் படாதபடி ஜாக்கிரதையாகக் கையாள்வது நல்லது. அப்படியே தவிர்க்க முடியாமல் ஏதேனும் கறை பட்டு விட்டாலும், தாமதிக்காமல் சுத்தமான வெள்ளை நிற காட்டன் துணியைக் கொண்டு, கறை பட்ட இடத்தைத் துடைத்து விட வேண்டும். அந்தக் கறை காய்வதற்குள் துடைக்க வேண்டும்.
    Next Story
    ×