search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்வது எப்படி?
    X

    சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்வது எப்படி?

    சருமத்தில் ஏற்படுகிற மாற்றங்களை அலட்சியப்படுத்தக்கூடாது. மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும்.
    தலைக்குத் தேங்காய் எண்ணெய் நிறைய தேய்த்துக் கொண்டால் பொடுகு போய்விடும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அதிக எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் பருக்கள்தான் அதிகமாகுமே தவிர, பொடுகு குறையாது. உடல் சூடு தணியும் என்பதற்காகவும் நிறைய எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள். இதுவும் தவறான எண்ணம்தான். உடல் சூடுக்கு இளநீர் குடிப்பது போன்ற மாற்று வழிகளைத்தான் செய்ய வேண்டும்.

    பாலிசிஸ்டிக் ஓவரிஸ் (PCOD) பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கும், பருக்கள் வரும், முடி உதிரும். தரமற்ற ஹேர் டை பயன்படுத்தினால் தலையைச் சுற்றியுள்ள இடங்களில் திட்டுத்திட்டாக மங்கு மாதிரி ஏற்படும். புற்றுநோயாளிகளுக்கு சருமத்தில் கொஞ்சம் தாமதமாகத்தான் அறிகுறிகள் தெரியும். உள்ளங்கைப் பகுதி கடினமாக மாறிவிடுவதை வைத்தோ, ஈறுகளில் ஏற்படும் வித்தியாசங்களை வைத்தோ கண்டுபிடிக்க முடியும். எனவே, சருமத்தில் ஏற்படுகிற மாற்றங்களை அலட்சியப்படுத்தக்கூடாது.

    குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். குளித்து முடித்தவுடன் மாயிச்சரைஸர் பயன்படுத்துவது, தண்ணீர் நிறைய குடிப்பது, நல்ல சோப்பை பயன்படுத்துவது போன்ற விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். தேமல் வந்தால் பலரும் அதை கண்டுகொள்வதில்லை.



    படர் தாமரை, வெண்புள்ளி நோய், அழுக்கால் நிறம் மாறுவது என்று பல பிரச்சனைகளையும் தேமல் என்றுதான் சொல்கிறார்கள். அது எந்த வகையாக இருந்தாலும் அலட்சியமாக விட்டுவிடுவது புத்திசாலித்தனமானதல்ல.

    முதலில் நமக்கு அது சாதாரண தேமல்தானா அல்லது வேறு ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது தெரியாது. அதனால், சருமத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு முடிவு எடுத்துக் கொள்வதே நல்லது. உதாரணத்துக்கு, படர் தாமரையை கவனிக்காமல் விட்டால் அது மற்றவருக்கும் பரவும்.

    ‘வைட்டமின் டி’ யை பொறுத்தவரை சூரிய ஒளியில் இருந்து கிடைப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல. 30 நிமிடங்கள் இருந்தால் போதும் என்று சொல்கிறார்கள். ஆனால், சூரிய ஒளியில் அதிக நேரம் இருக்கும் விவசாயிகள், தொழிலாளிகளுக்குக் கூட போதுமான ‘வைட்டமின் டி’ கிடைப்பதில்லை என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும், உடல் முழுவதும் மூடிக் கொண்டு முகம், கை, கால் போன்ற சில இடங்களில்தான் நமக்கு சூரிய ஒளி படுகிறது. இந்த அளவில் நிச்சயம் போதுமான ‘வைட்டமின் டி’யை சருமம் உற்பத்தி செய்யாது.



    ‘வைட்டமின் டி’ பற்றாக்குறை இருந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதே சரியானது. அதற்காக ‘வைட்டமின் டி’ பற்றாக்குறை இல்லாத பட்சத்தில் மாத்திரை எடுத்துக் கொண்டால் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதையும் மறக்கக் கூடாது. குறிப்பாக, இந்த நேரத்தில்தான் ‘வைட்டமின் டி’ கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

    சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் இயற்கையாகவே சிலருக்கு வரும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும். பருக்கள் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதிக நேரம் பயணத்தில் இருக்கிறவர்களுக்கும் இதே பிரச்சனை வரலாம். இந்த வறட்சியைத் தடுக்கக் குளித்து முடித்தவுடன் மாயிச்சரைஸர் போட்டுக் கொள்ளலாம். அதிகம் பயன்படுத்தினால் வியர்க்குரு வரும் வாய்ப்பு உண்டு என்பதையும் மறக்கக் கூடாது.

    முடி கொட்டுகிற பிரச்சனைக்குக் கூட முதலிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டு விடுவது நல்லது. முடி நிறைய கொட்டிய பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கேற்றவாறுதான் பலன் கிடைக்கும். 40 வயதில் சேதம் அடைந்துவிட்டது என்று வருவதைவிட 30 வயதிலேயே பார்ப்பது சிறந்தது.
    Next Story
    ×