search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி
    X

    சன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

    எத்தனையோ பிரியாணியை செய்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை யாரும் செய்திருக்கமாட்டோம். இன்று பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. இந்த பிரியாணியை செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 1/2 கப்
    துண்டு மீன் - 1 கிலோ
    வெங்காயம் - 2
    உருளைக்கிழங்கு - 2
    பட்டை - 1
    கருப்பு ஏலக்காய் - 1
    பச்சை ஏலக்காய் - 2
    கிராம்பு - 3
    பிரியாணி இலை - 3
    ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
    பால் - 1 கப்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    நெய் - தேவையான அளவு
    சர்க்கரை - 1 ஸ்பூன்
    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
    தண்ணீர் - 5 கப்

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * அரிசியை கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பாலில் குங்குமப்பூவை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு போட்டு நன்றாக வதக்கிய பின்னர் கவி வைத்துள்ள அரிசியை போட்டு கிளறி விட வேண்டும்.

    * பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், அதனை இறக்கி, ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு 5 நிமிடம் நன்கு வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.  

    * பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள மீனை போட்டு, தீயை குறைவில் வைத்து 8 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி வைக்கவும்..

    * அடுத்து அடி கனமான அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், குளிர வைத்துள்ள சாதத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியை மட்டும் வாணலியில் போட்டு, அதன் மேல் சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ பால், சிறிது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வெங்காயத்தைப் பரப்பி விட வேண்டும்.

    * பின்பு அதன் மேல் மீதமுள்ள சாதம், உருளைக்கிழங்கு, வெங்காயம், குங்குமப்பூ பால் மற்றும் உப்பு ஆகியவற்றை பரப்பி, பின் அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து, வாணலியை மூடி, 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

    * இறுதியில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

    * சூப்பரான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×