search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • சப்பாத்தி மாவு பிசையும் போது பால் சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.
    • கருணைக்கிழங்கு பொரியலுக்கு வேர்க்கடலையை பொடி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    1. நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி, புதினா துவையல் அரைக்கும்போது அதனுடன் சேர்த்து அரைத்தால் சுவையான நெல்லி-புதினா துவையல் ரெடி.

    2. எந்த பதத்தில் அரைத்தாலும் இட்லி பூ போல மென்மையாக வரவில்லையா? கவலை வேண்டாம். கழுவி ஊற வைத்த அரிசியுடன் ஒரு டம்ளருக்கு நான்கு ஸ்பூன் என்ற விகிதத்தில் பொட்டுக் கடலையை சேர்க்கவும். இதை எப்போதும் போல அரைத்து இட்லி சுட்டால் பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

    3. சாம்பாரிலோ அல்லது காரக்குழம்பிலோ புளிப்புச்சுவை அதிகமாகிவிட்டால் ஒரு துண்டு வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொதிக்க விடவும். புளிப்பு சுவை மட்டுப்படும்.

    4. கருணைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதனுடன் வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து சேர்த்தால் கருணைக்கிழங்கு பொரியல் சுவையாக இருக்கும்.

    5. புட்டுமாவு அரைக்கும்போது அதனுடன் நான்கிற்கு ஒன்று என்ற விகிதத்தில் சிறுதானியமான கம்பு சேர்த்து அரைத்து வேகவைத்து அதனுடன் வெல்லம், நெய், துருவிய தேங்காய், வாழைப்பழத் துண்டுகள் மற்றும் பொடித்த வேர்க்கடலை சேர்த்தால் சத்து நிறைந்த புட்டு தயார்.

    6. முள்ளங்கியை நறுக்கிய பிறகு அந்தத் துண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைத்துப் பின்னர் சமைத்தால் முள்ளங்கியின் வாடை துளி கூட வராது.

    7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதனுடன் வெந்நீர் அல்லது சூடான பால் சேர்த்துப் பிசைந்தால் சுவையான சப்பாத்தி செய்யலாம்.

    8. பூரிக்கு கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருள்களுடன் பொட்டுக்கடலைப் பொடியை சிறிதளவு சேர்த்தால் கிழங்கு மசாலாவின் சுவையும், மணமும் கூடும்.

    9. தயார் செய்த குழம்பில் உப்பு அதிகமானால் வறுத்து அரைத்த அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இவையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கலாம். உப்பு மட்டுப்படும்.

    10. மெதுவடை செய்யும்போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். வடை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

    11. பஜ்ஜி செய்யும்போது சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் வரும்.

    12. கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த வேர்க்கடலை மாவைச் சிறிது கலந்து சத்து நிறைந்த பூரி செய்யலாம்.

    • மாதக்கணக்கில் கெட்டுப்போகாது.
    • இனிப்பான மாங்காய் ஊறுகாய்

    மாதக்கணக்கில் கெடாத சுவை மிகுந்த இனிப்பான மாங்காய் ஊறுகாய் எவ்வாறு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய (அல்லது) பொடியாக நறுக்கிய மாங்காய் – 1 கப்

    மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

    சர்க்கரை – 1 கப்

    கசகசா தூள் – 1 ஸ்பூன்

    வறுத்த சீரகம் (எண்ணெய் சேர்க்காமல்) – 2 ஸ்பூன்

    உப்பு – 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மாங்காயை துருவிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் தாளித்து பின்னர் துருவிய மாங்காயை சேர்க்க வேண்டும். மாங்காய் நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் மிளகாய்தூள், வறுத்த சீரகம் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும். அப்போது சர்க்கரையுடன் மாங்காய் கலந்து ஜாம் பதத்திற்கு வந்தவுடன் இறக்கலாம்.


    மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் இந்த இனிப்பு மாங்காய் ஊறுகாயை பூரி, உப்புமா மற்றும் சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

    • மெக்சிகன் ரைஸ் இனிமேல் வீட்டிலேயே ஈஸியா பண்ணலாம்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    மெக்சிகன் ரைஸ் இனிமேல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈஸியா பண்ணலாம். வாங்க எப்படி பண்றதுனு பாப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பாசுமதி ரைஸ்- 500 கிராம்

    வெண்ணெய்- 3 ஸ்பூன்

    குடைமிளகாய்- 2

    வெங்காயத்தாள்- ஒரு கப்

    இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    சீரகம்- ஒரு தேக்கரண்டி

    தக்காளி பேஸ்ட் - ஒரு கப்

    மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை

    பாசுமதி அரிசியில் சிறிது வெண்ணை கலந்து தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் குடைமிளகாவை நீல வாக்கில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதன்பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    பின்பு வெங்காயத்தாளில் உள்ள வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதில் தக்காளி பேஸ்டை போட்டு நன்கு வதக்க வேண்டும். எல்லாம் நன்கு வதங்கியதும் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து வேக வைக்க வேண்டும். சாதம் வெந்தவுடன் வெங்காயத்தாள் தூவி இறக்கினால் மெக்சிகன் ரைஸ் தயார்.




     


    • காலையில் வெறும் வயிற்றில் பால் காபி, டீ குடிக்க கூடாது.
    • சைவ உணவுகளை சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.

    நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் சத்தான உணவுகளை தான் சாப்பிடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நாம் உணவருந்தும்போது சில தவறுகளை நமக்கு தெரியாமலே செய்கிறோம். சில உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்க் கூடாது. எனவே தான் உடலில் சில உபாதைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. நாம் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ளாத போதும் நம் உடல் பலவீனமாகின்றன.

    எனவே தான் காலை உணவை 10 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மதிய உணவுகளை 1 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே நமது உணவுலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உணவுகளில் சிலவற்றை சேர்த்து சாப்பிட கூடாது.

    * பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ள ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.

    * தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக்கூடாது. இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக்கூடும்.

    * முருங்கை, முள்ளங்கி மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக்கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும்.

    * எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரணம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

    * வாழைப்பழத்தை தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.

    * பழங்களை தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

    * வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அது செரிமான கோளாறை ஏற்படுத்திவிடும்.

    * மேலும் கோதுமையை, நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது.

    * மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் 'வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

    * தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.

    * பால் மற்றும் மீன் உணவுகளை எப்போதுமே சேர்த்து சாப்பிடக்கூடாது.

     * பால் என்பது குளிர்ச்சியூட்டும் உணவுப்பொருள், ஆனால் மீன் வெப்பமூட்டும் தன்மைக் கொண்டது. இந்த இரண்டு உணவையும் சேர்த்து உண்பது ரத்த சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.

    * பலாப்பழம், முள்ளங்கி ஆகியவற்றை கறுப்பு உளுந்தில் தயாரான உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

    * சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் கலப்பது தவறு. உதாரணமாக சமைத்த சாதத்துடன் சாலட் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு உண்டாகும்.

    * இறைச்சியோடு தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து சாப்பிடுவது தவறு. ஏனென்றால் அஜீரணம், குமட்டல், வாந்தி, படபடப்பு ஆகியவையும் உண்டாகலாம்.

    * பால், யோகர்ட், வெள்ளரி, தக்காளி இவற்றோடு எலுமிச்சையை சேர்த்து சாப்பிடுவது தவறான பழக்கம். இது அசிடிட்டிக்கு வழிவகுத்து, வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

    * பழங்கள் சாப்பிடும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் போன்ற மாவு வகை உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    * ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

    * நெய்யுடன் தேனை கலந்து சாப்பிட கூடாது. ஒரே நேரத்திலும் சாப்பிட கூடாது. ஏனெனினில் இரண்டும் சேர்ந்தால் நஞ்சாகி விடும்.

    * மோர், தயிர், பால் சாப்பிடும்போது வாழைப்பழம் சாப்பிட கூடாது.

    * பழங்களை எப்பொழுதும் கடித்து சாப்பிட வேண்டும். அதனை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது கூடாது.

    * காய்கறிகளுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட கூடாது.

    * காலையில் வெறும் வயிற்றில் பால் காபி, டீ குடிக்க கூடாது.

    * கோதுமையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட கூடாது.

    * சைவ உணவுகளை சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.

    * மீன் சாப்பிடும்போது தயிர் சாப்பிட கூடாது.

    * முள்ளங்கி கீரை வகைகள் சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.

    மேற்கூறிய உணவு முறைகளை பின்பற்றுவதனால் பல்வேறு நோய்கள் மற்றும் உணவினால் வரும் நஞ்சு நிலைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    • பார்லியை சூப்பாகவோ அல்லது கஞ்சியாகவோ கொடுக்கலாம்.
    • கர்ப்ப காலங்களில் ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

    கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் இருந்து பார்லியை சூப்பாகவோ அல்லது கஞ்சியாகவோ எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கங்கள் வராது.

    கர்ப்ப காலங்களில் ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். மேலும் பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

    குறிப்பாக மூளையில் செரோடோனின் என்ற மகிழ்ச்சியான ஹார்மோன் அதிகமாக சுரக்கும் இதனால் பிறக்கும் குழந்தை மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

    சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைக்க பார்லி உதவுகிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதில் ஓட்சை விட பார்லி 13 சதவீதம் அதிகமாக வேலை செய்கிறது என கூறப்படுகிறது.

    மேலும் பார்லியை இரவே ஊறவைத்து செய்வது தான் நல்லது. பொதுவாக எந்த ஒரு பொருளையும் அதிகமாக சூடு செய்தாலோ கொதிக்க வைத்தாலோ அதன் சத்துக்கள் வெளியேறும், ஆனால் பார்லியை அதிகமாக கொதிக்க வைத்தால் அதன் சத்துக்கள் அதிகமாகும் என ஆய்வில் கூறப்படுகிறது.

    கை கால் வலி ,வீக்கம் இருப்பவர்கள் மருந்து மாத்திரைகளுக்கு பதில் பார்லியையை தினமும் ஒரு டம்ளர் கஞ்சியாகவோ சூப்பாகவோ எடுத்துக்கொள்ளவும்.

    பார்லியை ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் அளவு குடிப்பது போதுமானது அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளும் போது இது வாயு தொந்தரவை ஏற்படுத்தும். மேலும் கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்களுக்கு மேல் தான் பார்லியை சேர்த்துக்கொள்ளவும். பார்லி சூப் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பார்லி -6 ஸ்பூன்

    பூண்டு -4

    கேரட் -சிறிதளவு

    பீன்ஸ் -சிறிதளவு

    சீரகம் -1/2 ஸ்பூன்

    கொத்தமல்லி இலை

    மிளகு தூள் -1 ஸ்பூன்

    எண்ணெய் -4 ஸ்பூன்

    சின்ன வெங்காயம் -6

    செய்முறை:

    பார்லியை உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும், அதில் இரண்டு ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதமுள்ளவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதிலே சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் பீன்ஸ், கேரட் ஆகியவற்றையும் சேர்த்து கிளறி, எடுத்துவைத்துள்ள இரண்டு ஸ்பூன் பார்லியையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள பார்லியையும் சேர்த்து மீண்டும் அந்த காய்கறிகள் வேகும் வரை கொதிக்க விடவும் பிறகு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும். இப்போது உங்களது காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமான பார்லி சூப் ரெடி.

    • இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள்.
    • நோன்பு கஞ்சி அருந்தி நோன்பை நிறைவு செய்வார்கள்.

    இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். இப்படி நோன்பு இருப்பவர்கள் மாலையில் தொழுகையை நிறைவு செய்த பிறகு நோன்பை நிறைவு செய்யும் வகையில் நோன்பு கஞ்சி அருந்தி நிறைவு செய்வார்கள். இந்த நோன்பு கஞ்சி என்பது அனைத்து பள்ளிவாசல்களிலும் கிடைக்கும். முஸ்லிம்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாக விளங்கும் நோன்பு கஞ்சியை வீட்டில் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரி- கால் கிலோ

    பாசிப்பருப்பு- 50 கிராம்

    பட்டை- 2

    ஏலக்காய்- 4

    கிராம்பு- 4

    பிரியாணி இலை- 1

    வெந்தயம்- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    நெய்- ஒரு குழி கரண்டி

    கொத்தமல்லி, புதினா- ஒரு கைப்பிடி

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    கேரட்- 1

    பச்சை மிளகாய்- 3

    சின்னவெங்காயம்- ஒரு கைப்பிடி

    பூண்டு- 5 பல்

    வெங்காயம்- 1 (நறுக்கியது)

    தக்காளி- 4 (நறுக்கியது)

    தேங்காய்ப்பால்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். இவை இரண்டும் நன்றாக சூடான பிறகு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.

    வெந்தயம் சிவந்த பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் ஒன்று இரண்டாக இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

    பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து, மூன்று பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய கேரட்டையும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் கேரட்டிற்கு பதிலாக கொத்துக்கறி வாங்கி இதில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்திருக்கும் பச்சரிசி, பாசிப்பருப்பை இதனுடன் தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு இதில் 5 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு விட வேண்டும்.

    ஐந்து விசில் வரும் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து விசில் வந்த பிறகு அதை அணைத்து விடலாம். விசில் முழுவதும் போன பிறகு குக்கரை திறந்து தண்ணீர் தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் பால் சேர்த்து ஒருமுறை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விட வேண்டும்.

    அவ்வளவுதான் மிகவும் சுவையான நோம்பு கஞ்சி தயாராகிவிட்டது. சைவம், அசைவம் இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் தான் சைவமாக இருந்தால் கேரட்டை சேர்த்துக் கொள்ளுங்கள் அசைவமாக இருந்தால் மட்டனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது.
    • வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம்.

    ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. மனிதர்கள் மட்டுமல்ல இதர உயிரினங்களும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வீட்டில் ஐஸ்கிரீமை தயார் செய்தால் அது பிராண்டட் நிறுவனங்கள் தயாரிக்கும் சுவையில் இருக்காது. ஆனால் குல்ஃபி அப்படி அல்ல. வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம். விடுமுறை நாட்களில் இந்த குல்ஃபியை தயார் செய்து உங்கள் மனதிற்கு பிடித்தமான நபருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாதாம், பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட்- 3

    பால் - ஒரு லிட்டர்

    பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 2 ஸ்பூன்

    குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

    சர்க்கரை- 100 கிராம்

    மில்க்மெய்டு- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை எல்லாம் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் காய்ந்தவுடன் அதில் சர்க்கரை, பொடித்த பிரெட் மற்றும் பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி கலவை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

    பின்னர் குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள் மற்றும் மில்க்மெய்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறினால் அந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு குல்பி மோல்டு அல்லது சிறிய கிண்ணங்கள் அல்லது, டம்ளர் ஆகியவற்றை ஊற்றி அதனை ஒரு அலுமினிய பேப்பர் கொண்டு மூடி ஃப்ரிட்ஜில் ஃபிரீசரில் 6 மணிநேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு எடுத்து பரிமாறலாம்.

    • கடுகு சட்னி ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது.
    • சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    எப்போது பார்த்தாலும் தேங்காய் சட்னி, கார சட்னி, வேர்க்கடலை சட்னி என்று அரைத்து சாப்பிடுகின்றோம். அந்த வரிசையில் கொஞ்சம் வித்தியாசமான ஆரோக்கியமான இந்த சட்னியையும் சேர்த்துக் கொள்வோமே. இது சுவையில் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு மிக மிக நன்மை தரக்கூடியது. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    அதை விட சுடச்சுட சாதத்தில் இந்த கடுகு துவையலை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கடுகு- 5 ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு- 5 ஸ்பூன்

    தக்காளி-2

    காய்ந்தமிளகாய்-4

    பூண்டு- 6 பல்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவேண்டும். கடாய் சூடானதும் அதில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். கடுகை கறியவிட்டுவிடக்கூடாது. அதன் பின்பு அதே கடாயில் பூண்டு, வரமிளகாய், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை கலவையை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னி அரைப்பது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒருவேளை உங்களுக்கு இதில் கடுகின் கசப்பு தெரிகிறது என்றால் சிறிய துண்டு வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    தாளிப்பு வேண்டுமென்றால் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கு தாளிப்பு தேவைப்படாது. சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். அது நம்முடைய விருப்பம் தான். நீங்க மிஸ் பண்ணாம உங்களது வீட்டில் டிரை செய்து பாருங்கள்.

     குறிப்பு: கடுகை வறுக்கும் போது கவனம் தேவை. கடுகு கருகி விட்டால் சட்னியின் ருசி மாறிவிடும்.

    • விதவிதமான உணவு சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர்.
    • குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    விதவிதமான உணவுகள் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர். சைவம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இனிப்பு வகைகள் பல உள்ளன. அவற்றில் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய கேரட், தேங்காய் லட்டு எப்படி செய்வது  குறித்து இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட்- 3

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    சர்க்கரை- 250 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    பால் பவுடர்- 100 கிராம்

    மெலன் சீட்ஸ்- ஒரு ஸ்பூன்

    நெய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    கேரட்டை சுத்தம் செய்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை நன்றாக உருகி கேரட் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.

    பின்னர் அதில் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சற்று கெட்டியாகி வந்தவுடன் அதில் மெலன் சீட்ஸ் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் லட்டுக்களாக உருட்டி எடுத்து பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    • உடல் எடை குறைப்பவர்களுக்கு பசலக்கீரை ஒரு வரப்பிரசாதமாகும்.
    • தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

    உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதமாகும். காரணம், இதிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

    பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது. நிறைய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு, இந்த கீரைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகின்றன. மேலும், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

    மேலும், உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுத்து நிறுத்துகின்றன.. எனவே, டயட் இருப்பவர்கள், வாரம் 2 முறையாவது, சேர்த்து இந்த கீரையை, உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பாலக்கீரையை பயன்படுத்தி ஆந்திரா ஸ்பெஷல் உல்லிக்காரம் செய்து பார்க்கலாம். இதனை சூடான சாதத்திலும், சப்பாத்திக்கு கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

     தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை- ஒரு கட்டு

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    பூண்டு- 20 பல்

    வெங்காயம்- 2

    உப்பு- தேவையான அளவு

    சீரகம்- கால் டீஸ்பூன்

    காய்ந்தமிளகாய்- தாளிக்க

    கடுகு- கால் டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் பசக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் தாளிக்க வேண்டும். அது பொறிந்ததும் காய்ந்தமிளகாய், பூண்டு. கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை அதில் சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு மசாலாவில் வெட்டி வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து நன்றாக மசாலா வாசனை போகும் வரையிலும், எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பாலக்கீரை உல்லிக்காரம் தயார். சூடான சாதத்தில் இதனை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அதுதாங்க அமிர்தம்.

    • வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...?
    • பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    வழக்கமான சிக்கன், மட்டன் பிரியாணியை ருசித்திருப்பீர்கள், வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...? இந்த கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், சுவையில் சுண்டியிழுக்கும். இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சீரகச் சம்பா அரிசி- 1 கிலோ

    மட்டன் (வெள்ளாட்டுக்கறி)-1 கிலோ

    வெங்காயம்- 200 கிராம்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- 50 கிராம்

    புதினா-1 கைப்பிடி

    கொத்தமல்லி-1 கைப்பிடி

    பச்சைமிளகாய்-12

    தேங்காய்ப் பால்-1கப்

    பாதம்-50 கிராம்

    பிஸ்தா-25 கிராம்

    முந்திரி-25 கிராம்

    கசகசா-10 கிராம்

    பட்டை-2 துண்டு

    கிராம்பு-6

    சோம்பு-2 ஸ்பூன்

    ஏலக்காய்-3

    எலுமிச்சை- 1/2

    நெய்- 50

    தேங்காய் எண்ணெய்- 50 மி.லி.

    உப்பு- தேவையான அளவு

    உலர் திராட்சை - 2 ஸ்பூன்

    தயிர்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தை கழுவி, அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை போட்டு அதனுடன் தயிர், இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் 5, புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    அடுத்து பாதம், பிஸ்தா, முந்திரி மற்றும் கசகசா இவற்றை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு மிக்சி ஜாரில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதைத்தொடர்ந்து, ஊறவைத்த மட்டன் கலவையை ஒரு குக்கரில் சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    அதன்பின் குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்த கலவை, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    அதன்பிறகு வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் எடுத்து இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

    இதைத்தொடர்ந்து இதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளற வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரையே ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்கின்ற அளவுக்கு ஊற்ற வேண்டும்.

    அதன் பிறகு இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதி வந்தவுடன், அரை மணி நேரம் ஊறவைத்த அரிசியை சேர்த்து, 90 சதவீதம் வெந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து மூடியிட்டு, 20 நிமிடம் 'தம்' போட்டு இறக்கினால், கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    • முந்திரி பருப்புகளை வறுத்து வைத்தால் கெடாது.
    • அடைக்கு பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்தால் அடை மொறுமொறுப்பாக கிடைக்கும்.

    * முற்றிய தேங்காயை துண்டுகளாக வெட்டுவது சிரமம். அதை பிரீசரில் 10 நிமிடங்கள் வைத்து விட்டு தண்ணீரில் கழுவி கீறினால் ஓடு கழன்று வந்துவிடும்.

    * பிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென இருக்க, லிக்விட் சோப்புடன் சொட்டு நீலத்தை நுரை வரும்வரை கலந்து, அந்த நுரையால் துடைத்தால் போதும்.

    * சவ்சவ் நறுக்கும்போது விரல் பிசுபிசுப்பாகி விடும். சவ்சவ்வை நீளவாக்கில் இரண்டாக வெட்டி ஒன்றோடு ஒன்று தேய்த்து, பின்பு நீரில் கழுவி விட்டு நறுக்கினால் பிசுபிசுப்பாக இருக்காது.

    * முழு முந்திரி பருப்புகளை விரைவில் பூச்சி அரித்து விடும். அவற்றை ஒன்றிரண்டாக உடைத்து, வெறும் வாணலியில் வறுத்துவிட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.

    * ரோஜா, சாமந்தி பூக்களின் காம்புகள் ஒடிந்த நிலையில் இருந்தால் சாமி படங்களுக்கு வைப்பது சிரமம். ஊதுவர்த்தியின் கீழ்பாகம் போன்ற சிறு குச்சிகளை பூ நடுவில் சொருகி விட்டால் அழகாக பூ சூட்ட முடியும்.

    * குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது காய்ச்சிய பாலை சேர்க்கலாம்.

    * பாகற்காயுடன் பீட்ரூட், கேரட் கலந்து பொரியல் செய்தால், அதன் கசப்பு தன்மை குறைந்து விடும்.

    * வெயில் காலத்தில் தயிர் வேகமாக புளித்து விடும். டிபன் கேரியரில் பால் உறை ஊற்றி மேல், கீழ் பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தால் எளிதில் புளிக்காது.

    * அடைக்கு பருப்பு ஊற வைக்கும்போது கைப்பிடி ஜவ்வரிசியையும் அதனுடன் ஊற வைத்தால் மொறுமொறு அடை கிடைக்கும்.

    * பால் சேர்த்து பாயசம் செய்யும்போது அடுப்பில் வைத்து சர்க்கரை கலந்தால் திரிந்தது போல் ஆகிவிடும். இறக்கிவிட்டு பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.

    * வெயில் காலத்தில் பூக்கள் சீக்கிரம் வாடாமல் இருக்க, ஸ்பாஞ்சை தண்ணீரில் நனைத்து அதன் மேல் பூக்களை வைத்து ஈரத்துணியால் சுற்றவும்.

    ×