search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்
    X

    தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்

    இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்டகங்களாக அவை திகழ்கின்றன.
    குறிப்பாக, வாழை, பப்பாளி, கொய்யா, அன்னாசி, மாதுளை போன்ற எளிதாகக் கிடைக்கும் பழங்களைக் கூறலாம்.

    இந்தப் பழங்கள் பலவித நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவை, மலச்சிக்கல் தொடங்கி இதயநோய் வரை அனைத்தையும் குணப்படுத்தக்கூடியவை.

    வாழைப்பழம்: இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலன்களை அடையலாம். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, வாழைப்பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிக்கத் தூண்டும் நிகோட்டினை சிறிது சிறிதாகக் குறைக்க உதவும். இதன் மூலம் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.



    பப்பாளிப்பழம்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்று, பப்பாளி. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டைத் தீர்க்கவும், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் கிட்டவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரிகிறது. 

    பெண்களை அவதிப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. பழுக்காத பப்பாளிப்பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.

    கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொய்யாவுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்தும் சாப்பிடலாம். சொறி, சிரங்கு மற்றும் ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நலம் பயக்கும். வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்த கொய்யா தோல் வறட்சியைப் போக்கும், முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையை மிளிரச் செய்யும்.

    அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்குப் பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், தாது உப்புகள் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. தாது உப்புகள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் முக்கியமாகும். 

    கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது. தொப்பையைக் கரைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் சேர்த்து நீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் பருகிவந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

    மாதுளம்பழம்: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம், இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்தி தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாறை அருந்தலாம். மேலும் இது, கர்ப்பகால ரத்தசோகையைப் போக்கும். உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாறுடன் கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். மாதுளை கடுமையான இதய வலியைப் போக்கக்கூடியது.

    பழங்கள் எல்லாமே நற்பலன்களைத் தருபவைதான். அவற்றிலும், மேற்கண்ட 5 பழங்களை அன்றாடம் நம் உணவில் சேர்த்துவந்தால், நோய்களை அண்டாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    Next Story
    ×