search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நிலவேம்பு கசாயமும், நிஜங்களும்
    X

    நிலவேம்பு கசாயமும், நிஜங்களும்

    மற்ற காய்ச்சல்களுக்கும், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது.
    தமிழகம் மட்டும் அல்ல, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களையும் டெங்கு காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது.

    மற்ற காய்ச்சல்களைப்போல டெங்கு காய்ச்சலை ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது.

    இந்தநிலையில் தான் ஏற்கனவே மற்ற காய்ச்சல்களுக்கும், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது.

    இதை கட்டுப்படுத்த தவறும்போது மரணத்தை சந்திக்க வேண்டியதாகி விடுகிறது.

    நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால், தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

    இதனால்தானோ அல்லது வேறு காரணமோ, இப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால், நிலவேம்பு கசாயம் குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தீயாக பரவுவதால், இப்போது நிலவேம்பு கசாயம் என்றால் மக்கள் ஒருவித அச்சத்துடனையே பார்க்கிறார்கள்.

    நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளரும், நிலவேம்பு குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவருமான டாக்டர் சுபாஷ்சந்திரன் கூறியதாவது:-

    நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதை கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள்.

    இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.

    தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும்.

    எய்ட்ஸ் நோய்க்கும் இதை மருந்தாக பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

    டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. நிலவேம்புடன் மேலும் 8 பொருட்களும் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது.

    அதாவது நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும்.

    அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.

    இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

    காய்ச்சல் இருப்பவர்கள் காலை மாலை என ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்க வேண்டும். காய்ச்சல் நிற்கும் வரை குடிக்கலாம்.

    சர்க்கரை நோயாளி வாரம் 3 முறை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

    நிலவேம்பு கசாயம் என்பது 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள். இந்த கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது.

    மலட்டு தன்மைக்கும் இந்த கசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

    நெல்லை சித்த மருத்துவ கல்லூரி தொடங்கி 50 வருடங்களுக்கு மேலாகிறது. 50 வருடங்களாக இங்கு வருகிற நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. யாருக்கும் எந்த பாதிப்பும் வந்தது இல்லை.

    சித்தர்கள் எழுதிய நூல்களில் உள்ள மருந்துகளை பாரம்பரியமிக்க சித்த மருத்துவர்களை கொண்டு ஆராய்ச்சி செய்து அதன்மூலம்தான் மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சித்த மருத்துவத்தால் எந்த வித பக்க விளைவோ, பாதிப்போ ஒரு காலமும் ஏற்படாது. தற்போது பெரும்பாலானவர்கள் சித்த மருத்துவத்தை நாடி வருகிறார்கள்.

    நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத்தன்மையை முறிக்கும். இதைபோன்று ஒவ்வொரு மூலிகையும், ஒவ்வொரு விதமான நன்மையை உடலுக்கு தரும்.

    நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே மக்கள் யாரும் பயப்படாமல் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் நேராது.

    இவ்வாறு டாக்டர் சுபாஷ் சந்திரன் கூறினார்.

    நிலவேம்பு கசாயம் குறித்து, சென்னை அரும்பாக் கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ மனையில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவு சிறப்பு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் பி.மல்லிகா கூறியதாவது:-

    நிலவேம்பு சூரண குடிநீரில் உள்ள மூலப்பொருட்களை கிண்டியில் உள்ள ‘கிங்’ இன்ஸ்டிடியூட்’ நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரசை இது உடனடியாக அழிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கர்ப்பிணி பெண்கள் உணவு சாப்பிட்டபின், சித்த மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். கருச்சிதைவோ, குழந்தைக்கு பாதிப்போ ஏற்படாது.

    சர்க்கரை நோய், தைராய்டு போன்றவற்றுக்கு மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் ½ மணி நேரம் கழித்து குடிக்கலாம். ஜலதோஷம், இருமல், சைனஸ் ஆகியவற்றுக்கும் நிலவேம்பு குடிநீர் நிவாரணம் அளிக்க வல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×