search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலில் சில உறுப்புகளை அகற்றினாலும் உயிர்வாழ முடியும்
    X

    உடலில் சில உறுப்புகளை அகற்றினாலும் உயிர்வாழ முடியும்

    நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை. சில உறுப்புகள் இல்லை என்றாலும், அவற்றின் பங்களிப்பு இல்லை என்றாலும் கூட ஆரோக்கியமாக வாழ முடியும்.
    மனித உடல், ஒரு சிக்கலான அமைப்பு கொண்டது. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை. சில உறுப்புகள் இல்லை என்றாலும், அவற்றின் பங்களிப்பு இல்லை என்றாலும் கூட ஆரோக்கியமாக வாழ முடியும்.

    கண்கள், கை, கால்கள் போன்ற இரட்டை உறுப்புகளில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ நீக்கினாலும் ஒருவர் உயிர் வாழ முடியும். அதேபோல், குடல் வால், பித்தப்பை, டான்சில் போன்றவற்றை நீக்கினாலும் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகம், நுரையீரல் போன்ற இரட்டை உள் உறுப்புகளில் ஒன்றை நீக்கினாலும் நம்மால் உயிர்வாழ முடியும். இரைப்பை, சிறுகுடல், பெருங்குடலின் சில பகுதிகளை அகற்றினாலும் அதாவது நீளத்தைக் குறைத்தாலும் உயிர் வாழ முடியும். இப்படி நீக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிறுகுடலிலோ, பெருங்குடலிலோ புற்றுநோய் உருவாகும்போது, அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கிவிடுவார்கள். சிறுகுடல், பெருங்குடல் இரண்டுமே மிக நீளமானவை என்பதால் அதன் சிறுபகுதி நீக்கப்படுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.



    பித்தப்பையில் கல் உருவாகும்போது பித்தப்பை நீக்கப்படுகிறது. பித்தப்பை மிகவும் மென்மையானது என்பதால் அதனை அறுவை சிகிச்சை செய்து கற்களை நீக்கமுடியாது. எனவே, முழுப் பித்தப்பையையும் அகற்ற வேண்டியுள்ளது. பித்தப்பைக் கல் இருக்கும் அனைவருக்கும் பித்தப்பை நீக்கப்படமாட்டாது. வயிற்றில் வலி இருப்பவர்களுக்கு மட்டுமே நீக்கப்படுகிறது. ஏனெனில், பித்தப்பையின் இயங்கும் தன்மை முழுமையாகக் குறையும்போதுதான் வலி ஏற்படுகிறது.

    பித்தப்பையை நீக்குவதால் உடலின் செயல்பாடுகளில் வேறு பாதிப்புகள் எதுவும் இருக்காது. பித்தப்பையில் கட்டி வந்தால் அதனை ஒட்டி இருக்கும் கல்லீரலின் ஒரு பகுதியையும் வெட்டி எடுக்க வேண்டியது இருக்கும். அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல்வால் என்பது குடலின் நுனியில் உள்ள வால் போன்ற ஓர் உறுப்பு. இது ஏன் உள்ளது என்பது பற்றிய மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

    ஆனால், சிலருக்கு இந்த குடல்வாலில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. இதை அப்பென்டிசிட்டிஸ் என்கிறோம். கடுமையான அடிவயிற்றுவலி இதன் முக்கியமான அறிகுறி. இந்த உறுப்பை நீக்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பெண்களுக்கு கர்ப்பப்பை, சினைப்பை, ஆண்களுக்கு பிராஸ்டேட், விதைப்பை ஆகியவற்றை அகற்றினாலும் ஆரோக்கியமாக வாழ முடியும்.
    Next Story
    ×