search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அக்கி நோயை குணமாக்கும் அருகம்புல் கசாயம்
    X

    அக்கி நோயை குணமாக்கும் அருகம்புல் கசாயம்

    அக்கி நோயை ஆங்கிலத்தில் ஷிங்கிள்ஸ் என்று அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தருகின்ற தோலில் கொப்பளத்தை உண்டாக்குகின்ற நோயாகும்.

    அக்கி நோயை ஆங்கிலத்தில் ஷிங்கிள்ஸ் என்று அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தருகின்ற தோலில் கொப்பளத்தை உண்டாக்குகின்ற நோயாகும். இது வைரஸால் உண்டாகிறது. அம்மை என்று சொல்லக்கூடிய சிக்கன்பாக்ஸை உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான். சிக்கன்பாக்ஸ் என்ற சின்னம்மை உருவானபிறகு இந்த வைரஸானது செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டி விடப்பட்டு இது அக்கி நோயாக மாறும்.

    50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களுக்கும் இது வரும். முதலில் வலி, துடிப்பு, எரிச்சல் இவை ஒரு பக்கத்தில் காணப்படும். பின்பு வலியும் எரிச்சலும் மிக அதிகமாகும். பின்பு சிவந்த நிறத்தில் தோலில் கொப்பளங்கள் உருவாகும். அதன்பின் இந்த கொப்பளங்கள் உடைந்து புண்ணாக மாறும். இது உலரத் தொடங்கும். மூன்று வாரங்களில் இந்த உலர்ந்த பகுதி கீழே விழும். பொதுவாக வயிற்றின் மேற்பகுதியிலோ அல்லது மார்பின் அருகேயோ இது வரலாம்.

    முகத்திலும், கண்ணிலும், வாயிலும் வந்து நாம் பார்த்ததுண்டு. இதனுடன் ஜூரம், குளிர் காய்ச்சல், உடல் அலுப்பு, தலைவலி, மூட்டுவலி, கழலைகள், கைகால் வலி, தசை பலவீனம் போன்றவை வரலாம். தசைகளை அசைப்பதில் பிரச்சனைகள் வரலாம். முக நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் கண்களை மூடித்திறப்பதிலும், செவித்திறனிலும், சுவைகளை உணர்வதிலும், பார்வையிலும் பிரச்சனைகள் உருவாகலாம். இந்த நோயை பார்த்த உடனேயே கண்டுபிடிக்க முடியும். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாகக் காணப்படும்.


    நவீன மருத்துவத்தில் வைரசுக்கு எதிரான மருந்துகள் வந்துள்ளன. இதனை 72 மணி நேரத்திற்கு முன்பு தொடங்க வேண்டும். கொப்புளங்கள் உருவாவதற்கு முன்பு தொடங்கினால் சிறந்தது. அரிப்பைக் குறைக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள், மேல்பகுதியில் பூசுவதற்கு சில களிம்புகள் இவற்றை நவீன மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். குளிர்ந்த நீரில் பஞ்சை முக்கி மெதுவாக அமுக்கிவிடச் சொல்வார்கள். காய்ச்சல் முடிகின்றவரை ஓய்வெடுக்கவும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் சொல்வார்கள்.

    இந்த புண்ணானது கசிவுடன் காணப்படும். சில வேளைகளில் சிக்கன்பாக்ஸ் வராதவர்களுக்கு இது வரலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் இவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. மூன்று வாரங்கள் இந்தக் கடுமைகள் காணப்படும். பொதுவாக இது ஒருமுறை ஒருவருக்கு வந்தால் மறுமுறை வருவதில்லை. இதனால் நரம்பு பாதிப்பு சிலருக்கு வருவதுண்டு. அக்கி வந்த இடத்தில் நரம்பு வலி மிகவும் தொந்தரவு அளிக்கும். மூளை பாதிப்பு, காது கேளாமை, கண் பாதிப்பு போன்றவை அபூர்வமாக ஏற்படலாம். கண்ணைப் பாதிக்கலாம்.

    ஆதலால் ஒழுங்காக சிகிச்சை செய்ய வேண்டும். நோயாளிகளின் கொப்புளங்களை நேரடியாக நாம் தொடக் கூடாது. இதற்கு இப்பொழுது தடுப்பூசிகள் வந்துள்ளன. இது சிற்றம்மை தடுப்பூசியிலிருந்து மாறுபட்டதாகும். இவை தவிர பிறப்புறுப்புக்களில், தவறான இல்வாழ்க்கையால் ஜெனிட்டல் ஹெர்பஸ் போன்றவை வரலாம். இது பிறப்புறுப்பில் காணுகின்ற தோலில் வரும். பாதுகாப்பற்ற இல்வாழ்க்கையின் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும். வாய், உதடு போன்றவற்றில் புண்களை ஏற்படுத்தி காய்ச்சலுடன் வரும். 

    இரண்டாவது வகை, பிறப்புறுப்பில் காணும் தோல், ஆண்குறி இவற்றில் இது வரலாம். பல நேரங்களில் இது கண்டுபிடிக்கப்படாமல் போய்விடும் அல்லது பூச்சிக் கடி என்று தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. இது இரண்டு நாட்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உருவாகும். இந்த நோயில் காய்ச்சல் ஏற்படும், பசி குறையும், உடல் அசதி காணப்படும், தசை வலி ஏற்படும், நிண நாளங்கள் வீங்கும். சிறிதான கொப்புளங்கள் உருவாகும். அதிலிருந்து திரவம் வெளிப்படும். பெண்களுக்கு பிறப்புறுப்புக்களில் கொப்புளங்கள் உருவாகும்.

    ஆண்களுக்கு ஆண்குறி, தொடை, மலத்துவாரம் போன்றவற்றிலும் உருவாகும். மரத்துப் போதல், அரிப்பு, எரிச்சல், வலி போன்றவை காணப்படும். இந்தக் கட்டிகள் உடையும்பொழுது புண்ணாக மாறும், அந்த நேரத்தில் வலி அதிகமாக இருக்கும். 14 நாட்களில் இவை மாறும். ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் ஏற்படலாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் இவை ஏற்படலாம், அப்பொழுது கடுமை சற்று குறைவாக இருக்கலாம்.

    அந்த திரவத்தை ஆராய்ந்து செய்யும் பரிசோதனைகள் எல்லாம் வந்துள்ளன. இதனை பிசிஆர் சோதனை என்று சொல்வார்கள். புண்களை குணமாக்குவதிலும், நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிப்பதிலும், மீண்டும் வராமல் தடுப்பதிலும், அரிப்பு, எரிச்சல், வலி போன்றவற்றை மாற்றுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு இது பரவாமல் தடுக்க கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள்.

    மன அழுத்தத்தைப் பொதுவாக குறைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு தீவிரமான இந்த நோயானது குழந்தைக்குப் பரவச் செய்யும். பாதுகாப்பான உடலுறவுமுறை இன்றியமையாததாகிறது. குறிப்பாக லேட்டக்ஸ் காண்டம் பயன்படுத்துவது சிறந்தது. விலங்குகள், மாட்டின் தோலினால் செய்த ஆணுறைகள் வழியாக வைரஸ் பரவும் வாய்ப்புகள் இருக்கிறது.

    இந்த நோயானது ஆயுர்வேத கண்ணோட்டப்படி பித்தமும் ரத்தமும் அதிகரித்து எரிநிலையை அடைந்து ரஸம், ரத்தம் போன்ற தாதுக்களைப் பாதித்து பின்பு சிகிச்சை செய்யா விட்டால் ஆழமான திசுக்களையும் பாதித்து வருகின்ற நோயாக கருதப்படுகிறது. இதனை விஸர்ப்ப நோய் என்பார்கள். அக்கி என்பார்கள். இந்த நோயில் பொதுவாக நாம் செய்கின்ற பஞ்சகர்ம சிகிச்சைகள் செய்யக் கூடாது.

    இந்த நோயில் வறட்சியை உண்டாக்குகின்ற ரத்தத்தை சுத்தி செய்கின்ற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். பேய்ப்புடல், வேப்பங் கொழுந்து, திராட்சை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கோரைக் கிழங்கு, நன்னாரி, விலாமிச்சை இவற்றை கஷாயம் செய்து கொடுக்கலாம். கஷாயம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.

    ஆயுர்வேதத்தில் இந்த நோய்க்கு ரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள். முதல் நிலை நீங்கியபிறகு 14 நாட்களுக்குப் பின் கசப்பு மருந்துகளால் காய்ச்சப்பட்ட திக்தகம், மஹாதிக்த கம் போன்ற நெய்களைக் கொடுக்கலாம். தாமரை, கருங்கு வளை, விலாமிச்சை, பால், நெய் சேர்த்து அரைத்து பூச்சுப் போடலாம். ஆலம் விழுது, வாழைத்தண்டு இவற்றை அரைத்து பூசலாம். காவிக்கல்லை நெய் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

    சில நேரங்களில் மெல்லிய துணியை பரப்பி அதன் மேல் மருந்தைப் பூச வேண்டும். அதிமதுரக் கஷாயம், கோரைக்கிழங்கு கஷாயம், கருப்பஞ்சாறு இவை குடிப்பதற்கும், நனைப்பதற்கும் சிறந்ததாகும். மரமஞ்சள் கஷாயம், அருகம்புல் கஷாயம் போன்றவை குடிப்பதற்கு எளிமையான கஷாயங்கள் ஆகும்.

    மண் பூசினால் வலி நீங்கும்:

    அக்கி நோய் பாதித்தவர்களை கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் அழைத்து செல்வார்கள். அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின் உடலில் தேய்த்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமாகும். பூங்காவியை பன்னீருடன் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூச எரிச்சல்,வலி, வேதனை குறையும். ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும். 


    உணவில் காரம், உப்பு, குறைக்கவும். குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது, குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை அளவு] கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். ஆலம் விழுதை சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும். செம்மர பட்டையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உடலில் அக்கி உள்ள இடத்தில் பூசி வந்தால் அக்கி குறையும்.

    டாக்டர் எல். மகாதேவன்.
    தெரிசனங்கோப்பு
    செல்:9282405680
    Next Story
    ×