search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குறைகளை நீக்கி பேசவைக்கும் ‘குரல் மேம்பாடு’
    X

    குறைகளை நீக்கி பேசவைக்கும் ‘குரல் மேம்பாடு’

    ஆசிரியர்கள், மேடைப்பேச்சாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு குரல்நாணில் மொட்டுகள் ஏற்படும். குரல்வளையிலும் நோய்கள் ஏற்பட்டு பாதிப்புகள் தோன்றலாம்.
    இதுதான் மனிதர்களின் இன்றியமையாத அடையாளம். எண்ணங்களையும், கருத்துக்களையும், தேவைகளையும் வெளிப்படுத்த குரல் அவசியம். முகம் தெரியாதபோது பேசுவது ஆணா, பெண்ணா என்று குரல்தான் அடையாளம் காட்டுகிறது. பிரபலமான பாடகர்களையும், பேச்சாளர்களையும் குரலே, உலகின் உச்சாணிக்கு கொண்டு செல்கிறது.

    இந்த குரல் உருவாகும் இடம், குரல்வளையாகும். இது தொண்டையின் அடியில் அமைந்திருக்கிறது. எலும்பு, குறுத்தெலும்பு, தசையால் உருவாக்கப்பட்டிருக்கும் அதன் உள்ளே குரல் நாண்கள் உள்ளன. வலது மற்றும் இடது புறமாக அமைந்திருக்கும் இந்த குரல்நாண்கள் அசையும், அதிரும் தன்மைகொண்டது. நரம்பு, தசை, காற்றால் அதன் இயக்கம் நடைபெறுகிறது.

    உணவானது, உணவுக்குழாயின் உள்ளே செல்வதற்கும்- காற்று குரல்வளையின் உள்ளே செல்வதற்கும் தொண்டை பொது உறுப்பாக இருக்கிறது. வாயிலிருந்து உணவு உள்ளே செல்லும்போது அது தொண்டை வழியாக உணவுக் குழாயை சென்றடையும். அதுபோல் மூக்கு- வாய் வழியாக செல்லும் காற்று தொண்டை வழியாக மூச்சுக் குழாயின் குரல்வளைக்குள் மட்டும் செல்லவேண்டும்.

    உணவு உண்ணும்போது குரல்வளையின் உள்ளே உணவு செல்லாமல், குரல்வளை மூடி தடுத்துவிடும். மூச்சுவிடும்போது அது திறந்து விடும். அதனால்தான் சிரித்துக்கொண்டோ, பாடிக்கொண்டோ, இருமிக்கொண்டோ, அழுதுகொண்டோ சாப்பிட்டால் உணவு தவறுதலாக மூச்சுக்குழாயின் உள்ளே சென்று புரையேறுகிறது.

    சரி.. மனிதன் எப்படி பேசுகிறான்?

    மனிதனுக்கு பேசுவதற்கென்று எந்த உறுப்பும் இயல்பாக உருவாகுவதில்லை. அதனால்தான் பிறந்த உடன் பேச்சு வருவதில்லை. ஆனால் மூச்சு உறுப்பை மனிதன் பேச்சுக்காக உபயோகிக்கிறான். மூளையில் உருவாகும் எண்ணங்கள்தான் பேச்சாக வெளிவருகிறது. அடிவயிற்றின் உந்து சக்தியால் நுரையீரலில் இருந்து வெளியேறும் காற்று, குரல்நாண்களின் அதிர்வினால் ஓசையாகி, தொண்டை- மூக்கு-சைனஸ்- வாய் போன்றவைகளில் அதிர்வை ஏற்படுத்தி, பல்- உதடு- நாக்கு- மூக்கு- அண்ணம் ஆகிய உறுப்புகளின் இயக்கத்தால் (ஒலி) குரலாகி வாய் வழியாக வெளியேறுகிறது.



    ஆண், பெண் இருபாலரும் குழந்தைப் பருவமாக இருக்கும்போது குரல்வளையானது தொண்டையின் அடிப்பாகத்தில், அருகில் காணப்படும். அதனால்தான் இருபாலருக்கும் ஒரே மாதிரியான கீச்சுக்குரல் வெளிப்படுகிறது. குழந்தை வளர வளர குரல்வளை பெரிதாகி, கீழ்நோக்கி நகரும். ஆண்களுக்கு, பெண்களைவிட குரல்வளை நீளம் அதிகம். அதனால் அவர்களுக்கு குரல்நாணும் நீளமாக இருக்கும்.

    ஆணும், பெண்ணும் பருவமடையும்போது அவர்களுக்கான பாலின சுரப்பிகள் வீரியமடைகின்றன. ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டிரான்’ ஹார்மோன் அதிகம் சுரக்கும். பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதனால் அவர் களது பாலின உறுப்புகளில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள், அவர்களது குரல்நாண்களிலும் ஏற்படும். அந்த மாற்றத்தால்தான் ஆண்களின் குரல் ஆழமானதாகவும், எதிரொலிப்போடும் இருக்கும். பெண்களின் குரல் பெண்மை நிறைந்த கீச்சுக் குரலாக ஒலிக்கும்.

    ஒருவர் எப்படி உபயோகிக்கிறார் என்பதைவைத்துதான் அவரது குரலை இனிமையானது, இனிமையற்றது என்று வகைப்படுத்துகிறோம். உணர்ச்சிவசப்படும்போது பேச்சின் தொனியில் மாற்றம் ஏற்படும்.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சில ஆண்களுக்கு விடலைப் பருவத்தில் குரல் உடையாமல் பெண்குரலாக ஒலிக்கும். அதனால் தாழ்வுமனப்பான்மையும், மனஉளைச்சலும், சமூகத்தில் இருந்து தனிமைப்படும் சூழலும் உருவாகும். அதனை சரிசெய்வதற்கு இரண்டு விதமான சிகிச்சைகள் உள்ளன. ஒன்று: பேச்சுப் பயிற்சி நிபுணர்கள் வழங்கும் ‘ஸ்பீச் தெரபி’. அவர்கள் குரல் ஆண்மைத்தன்மையை அடைய பலவிதமான பயிற்சிகளை கொடுப்பார்கள்.

    இரண்டு: அறுவை சிகிச்சை. கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து குரல்நாண் தளர்வடையச்செய்யப்படும். தொண்டைக்குள் உள்ளுறுப்பு நோக்கி மூலம் பார்த்து, உபகரணங்களால் குரல்நாண் தளர்வடையச்செய்யப்படும். இத்தகைய ஆபரேஷன்கள் செய்த பின்பும் பேச்சுப்பயிற்சி அவசியம்.

    உலகமக்களில் 9 லட்சம் பேரில் ஒருவருக்கு இந்த குரல்மாற்றம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு ‘வெர்ச்சுல் ரியாலிட்டி’ பயிற்சி உள்ளது. இது ஒரு உணர்வுபூர்வமான பயிற்சி. இந்த பயிற்சி பாடகர்கள், ஆசிரியர்கள், மேடைப்பேச்சாளர்களுக்கு நல்ல பலனைத்தரும். கீச்சுக்குரலை சரிசெய்ய, தொண்டையில் நூல் முடிச்சுப்போட்டு குரல்வளையை தாழ்வாக்கி குரல்நாணை நீளப்படுத்தும் சிகிச்சையையும் நாங்கள் செய்கிறோம்.

    குரல்வளையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?


    ஆசிரியர்கள், மேடைப்பேச்சாளர்கள், பாடகர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு குரல்நாணில் மொட்டுகள் ஏற்படும். குரல்வளையிலும் நோய்கள் ஏற்பட்டு பாதிப்புகள் தோன்றலாம். அதை குரல்வளை அழற்சி என்று கூறுவோம். நச்சுக்காற்றை சுவாசித்தாலோ, அதிக சூடான காற்றை சுவாசித்தாலோ குரல்நாண் கெட்டுப்போகும். காசநோய், பால்வினைநோய், தொழுநோய் போன்றவைகளும் குரல்நாணை பாதிக்கும். மது அருந்துவோருக்கு புற்றுநோய்க்கு முன்பாக தோன்றும் வெண்பொருக்கு என்ற பாதிப்பு தோன்றலாம். சில நேரங்களில் சிறுவர்களுக்கு திக்குவாயும் தோன்றலாம்.

    வார்த்தை வெளிவரும் வேகத்தைவிட மனம் அதிவேகமாக செயல்படும்போது வார்த்தைகள் ஒன்றோடொன்று பிறழ்ந்து திக்குவாய் ஏற்படுகிறது. இடது கை பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றும்போதும் திக்குவாய் ஏற்படலாம். திக்குவாயை குணப்படுத்துவதற்கும் பல்வேறு வழிமுறைகளும், பயிற்சிகளும் நடைமுறையில் உள்ளன.

    விளக்கம்: டாக்டர் மு.குமரேசன்

    (பிரபல காது-மூக்கு-தொண்டை நிபுணர்)

    சென்னை.
    Next Story
    ×