search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பன்றி காய்ச்சலை குணமாக்கும் கசாயம்
    X

    பன்றி காய்ச்சலை குணமாக்கும் கசாயம்

    பொதுவாகக் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி என்று வரும்போது அதை ஆம ஜுரம், கப ஜுரம் என்று கூறி ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்துகளைக் கொடுக்கின்றனர்.
    நமது நாட்டில் ஒவ்வொரு பருவக் காலத்திலும் ஒவ்வொரு நோய் மக்களை வாட்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்தது. பின்பு சிக்குன் குன்யா வந்தது, பலரும் மூட்டு வலியால் அவதிப்பட்டார்கள். பின்பு எலி காய்ச்சல் வந்தது. இது போன்ற காய்ச்சல்கள் தீவிரமாகத் தொற்றக்கூடிய நோய்கள்.
    இன்ஃப்ளூயன்சா ஃபுளூ என்பது ஆதி காலம் தொட்டே மனிதனுக்கு வருகிற ஒரு வகை சளிக்காய்ச்சல்.

    முதலில் பன்றிகளைத் தாக்கிய இந்தக் காய்ச்சல், அவற்றின் மூலமாக மனிதர்களுக்கும் தொற்றியது. அதனால் இதைப் பன்றிக் காய்ச்சல் என்று அழைத்தார்கள். ஆனால், இன்ஃப்ளூயன்சா ஃபுளூ என்பதுதான் சரி. ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இந்த நோய் இப்போது பரவுகிறது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்திய மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சுஷ்ருதர் எழுதிய சுஷ்ருத சம்ஹிதையில் தொற்று நோய்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எப்படித் தொற்றும்?

    உடலுறவின் மூலமோ, மூச்சுக் காற்றின் மூலமோ, சேர்ந்து உண்பதன் மூலமோ, நோய் தாக்குண்டவரின் ஆடைகளை உடுத்துவதன் மூலமோ, அவர்களுடைய அணிகலன், பவுடர், பேஸ்ட் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமோ தோல் நோய்கள், காய்ச்சல் நோய்கள், மறைமுக நோய்கள், ஆள்வாட்டி நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்குத் தொற்றுகிறது.

    இந்தக் காய்ச்சலில் பலர் குணமடைந்தாலும், ஒரு சிலர் உயிரிழக்க நேரிடுவதால் மக்கள் அஞ்சுகிறார்கள். சிகிச்சையின்றி ஏழு நாட்களில் காய்ச்சல் நோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டும். இதில் ஒரு சிலருக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அப்போது வைரசுக்கு எதிராக மருந்துகள் கொடுக்கப்பட்டு, சிக்கல்கள் மட்டுப்படுத்தப்படுகின்றன, நோயின் தீவிரம் குறைகிறது. பி1என்1 என்பது மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவக் கூடியது. 2009-ம் ஆண்டில் மெக்ஸிகோ நாட்டில் இந்த நோய் பரவ ஆரம்பித்தது. மூக்கின் வழியாக ஒரு பொருளைச் சுவாசிக்கும்போது அது உள்ளே செல்கிறது. பி1என்1 தாக்கப்பட் டவர்களிடம் சென்றுவந்தால் நமக்கும் தொற்று ஏற்படலாம்.

    அறிகுறிகள் :

    இந்த நோயின்போது காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, உடல் வலி, தலைவலி, குளிர், சோர்வு, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை வரலாம். இந்த நோய் தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு ஏற்பட்ட பின், ஒன்றில் இருந்து 3 நாட்களுக்குள் இது வரலாம். வந்தால், ஏழு நாள்வரை காய்ச்சல் இருக்கும்.

    இந்த வைரஸ் கிருமி கபத்தின் ஸ்தானமாகிய மூக்கு, தொண்டை, நுரையீரலைச் சார்ந்து இருக்கிறது. இந்தக் காய்ச்சலின் குறியீடுகள் எல்லாம் கப ஜுரம், ஆம ஜுரத்தின் அறிகுறிகளை ஒத்ததாக இருக்கின்றன. இதய நோய்கள், மூச்சுமுட்டுவது, காக்காய் வலிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு இது வரலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது வந்தால், நோயைத் தாங்கும் சக்தி மிகவும் குறைவாக இருக்கும்.

    இந்தக் காய்ச்சலால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைத் தணிப்பதற்காக மருந்து கொடுக்கிறார்கள். சில நேரம் இந்தக் காய்ச்சலை உருவாக்கும் கிருமிகளுக்கு எதிரான மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி வந்துவிடலாம். அதனால், கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள், 5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேலே உள்ள பெரியவர்கள், கர்ப்பிணிகள், கர்ப்பத்தை இழந்தவர்கள், நீண்ட காலம் ஆஸ்பிரின் மருந்து பயன்படுத்துபவர்கள், ஆஸ்துமா, இதய நோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய், நுரையீரல் நோய் இருப்பவர்கள், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்கள் அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ் வருகிறார்கள்.



    ஆயுர்வேத அணுகுமுறை :

    பொதுவாகக் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி என்று வரும்போது அதை ஆம ஜுரம், கப ஜுரம் என்று கூறி ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்துகளைக் கொடுக்கின்றனர். சில நேரம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், இதய நோய் உள்ளவர்களுக்கும் உடனடி சிகிச்சை செய்ய வேண்டிவரும்.

    இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் சுக்கு, பற்பாடகம், கோரைக் கிழங்கு ஆகியவற்றைத் தண்ணீரில் காய்ச்சிக் குடிக்க வேண்டும். ஆயுர் வேதத்தில் ஷடங்கம் என்று ஒரு மருந்து உண்டு. கோரைக் கிழங்கு, சந்தனம், சுக்கு, இருவேலி, பற்பாடகப் புல், வெட்டி வேர் ஆகியவற்றைக் காய்ச்சிக் தண்ணீர் குடிப்பதற்குப்பதிலாக, அடிக்கடி அப்படியே குடிக்கலாம். இரவு வேளைகளில் நன்றாக உறங்கலாம், பகல் உறக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    நவீன மருத்துவத்தில் பாரசிட்டமால் மாத்திரையைக் கொடுப்பார்கள். ஆயுர்வேதத்தில் சுதர்சன மாத்திரைக்கு இணையில்லை. சுதர்சனம் ஒரு கிராம் மாத்திரையில் மூன்று வேளை பெரியவர்களுக்கும், ஒரு மாத்திரை மூன்று வேளை சிறியவர்களுக்கும் கொடுக்கலாம். அல்லது 10 கிராம் சுதர்சன பொடியை வெந்நீரில் கலந்து, இரண்டு வேளை கொடுக்கலாம். கபத்துக்கு வெந்நீர் அல்லது தேன் அனுபானமாகக் கொடுக்க வேண்டும். நிலவேம்பு சேருவதால் இது மிகவும் கசப்பாக இருக்கும். வலி மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தும்போது வயிற்றுவலி வந்துவிடக் கூடாது.

    ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடலாம். இந்த மருந்தை மூக்கின் வழியாகவும் செலுத்தலாம். 2 முதல் 49 வயதுவரை உள்ளவர்களுக்குச் செலுத்தலாம்.

    ஒரு வேளை இந்தக் காய்ச்சல் வந்துவிட்டால் வெளியில் போவதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று வந்த பிறகு கைகளை நன்றாகச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். வாயையும், மூக்கையும் நன்றாக மூடிக்கொள்ள வேண்டும். தும்மல் வரும்போது மூக்கையும் வாயையும் மூடி தும்ம வேண்டும். கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்லக் கூடாது. வெளி இடங்களில் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

    காய்ச்சல் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை போகலாம். சிலருக்குக் காது வலி வரலாம். அபூர்வமாகச் சிலருக்கு ரத்த வாந்தி, மூக்கில் ரத்தம் ஒழுகுதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கடும் கூச்சம் போன்றவை இருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

    ஆயுர்வேத மருந்துகள் :

    மனித உடலில் ஆதார சக்தியாக அக்னி சக்தி, பித்தச் சக்தி உள்ளது. இதில் பித்தம் அதிகரித்தல், பித்தம் சீர்கேடு அடைதல் மூலமாக ஜுரம் ஏற்படுகிறது. உடலில் இருக்கிற பித்த சக்தியை, அக்னி சக்தி என்று குறிப்பிடுவோம். தவறான உணவு, விகாரங்கள், தொற்றுதல், பருவ மாற்றங்கள், மற்ற நோய்களின் வெளிப்பாடு காரணமாகப் பித்தம் தன்னுடைய இருப்பிடமாகிய பெருங்குடலுக்கும் சிறுகுடலுக்கும் இடையே உள்ள இடத்தைவிட்டு வெளியேறி, உடலின் மற்றப் பகுதிகளுக்குச் சென்று உஷ்ணத்தை ஏற்படுத்துகிற நோயே ஜுரம். இதில் சளி, தலைவலி, தொண்டை வலி, நுரையீரல் பிரச்சினைகள் எல்லாம் கப ஸ்தான அறிகுறிகள் என்பதால் கப ஜுரம் அல்லது கபப் பித்த ஜுரம் என்றே இதைக் குறிப்பிட வேண்டும்.

    பன்றிக் காய்ச்சல் வந்தால் பயப்பட அவசியமில்லை. ஆயுர்வேத மருந்துகளுக்கு வைரஸைக் குறைக்கும் தன்மையும், நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தூண்டும் தன்மையும் உண்டு. நோய் எதிர்ப்பு ஆற்றலாகிய ஓஜோ சக்தி யாருக்கு அதிகம் உள்ளதோ, அவரை எந்த நோயும் அணுகாது என்பதே அடிப்படை.

    நிலவேம்பு கஷாயம் :

    கபத்தையும், பித்தத்தையும் தணிப்பதற்குக் கசப்பு, துவர்ப்பு போன்றவையே மருந்துகள். அதனால் நிலவேம்புக் குடிநீரையே இதற்கும் கொடுக்கலாம். அதைவிட சளி அதிகமாக இருக்கிற நேரத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் வியக்ராதி கஷாயம், இந்து காந்தம் கஷாயம், தசமூலக் கடுத்ரயம் கஷாயம், பாசனாமிர்தம் கஷாயம், வில்வாதி குளிகை, சுதர்சன குளிகை போன்றவை மிக முக்கியமானவை.

    காய்ச்சல் தாக்குதலுக்குச் சிறுதேக்கு, முத்தங்காய், பற்பாடகம், விஷ்ணுகிராந்தி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீந்தில் கொடி, நிலவேம்பு, வெட்டிவேர் சேர்ந்த கஷாயத்தைக் கொடுப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

    டாக்டர் எல். மகாதேவன்.
    தெரிசனங்கோப்பு
    செல்:9282405680
    Next Story
    ×