search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
    • உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.

    கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.

    தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.

    உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.

    வாழ்க்கை முறை:

    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.

    4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • மூச்சு இன்றி உடல் இயங்காது.
    • மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான்.

    மூச்சு இன்றி உடல் இயங்காது. இன்றைக்கு தியான மையங்கள், இயற்கை மருத்துவ நிலையங்கள் என்று எங்கு போனாலும் அங்கு ஆழ்ந்த மூச்சு பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. மனித உடலில் நுரையீரல் தொடர்ந்து சுருங்கி விரிவதால் காற்று உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடலை புத்துணர்வு பெற செய்கிறது. இதனால் உடலின் செல்களுக்கு வேண்டிய உணவான காற்று கிடைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆயுள் நீடிக்கும்.

    சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இதையே நிதானமான ஆழ்ந்த மூச்சு மூலம் 48 மணி நேரம் ஆக்கினால் வாழ்நாள் இரண்டாக நீடிக்கும் என்கிறது சித்தர் நூல்கள். அதாவது, ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு சுமார் 15 முறை மூச்சு விடுகிறான். இதையே மெதுவாக செய்தால் நிமிடத்திற்கு 10 முறை என்ற அளவில் சுருக்கலாம். இதையே மூச்சு பயிற்சி அல்லது பிராணயாமம் என்கிறார்கள்.

    வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி, இடது நாசியினால் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின் வலது மோதிர விரலாலும், சுண்டு விரலாலும் இடது நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசியை திறந்து மெதுவாக மூச்சை வெளியே விடவும்.

    இதுபோல் வலது நாசியில் மூச்சை வெளியே விட்டு உடனே, அதே நாசியினால் மூச்சை உள்ளே இழுத்து, வலது நாசியை மூடி, இடது நாசியினால் மூச்சை வெளியே மெதுவாக விடவும். இதுபோல் அவரவர் உடல்நிலைக்கு தகுந்தபடி 5 முதல் 8 தடவை செய்யலாம்.

    இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடலின் கழிவுகள் நீங்கி நோய் தாக்காமல் பாதுகாக்கலாம். குறிப்பாக மன அழுத்தம் நீங்கி எப்போதும் மனம் பாரம் இல்லாமல் இருக்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
    • ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது.

    ஓட்ஸ் ஒரு தானியமாகும், அதன் உயர் ஊட்டச்சத்து மதிப்பு, அதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகச் சரியான தீர்வாக காணப்படுகின்றது. காலை உணவு எப்போதும் ஆரோக்கியமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். சிலர் இதை பின்பற்றுகிறார்கள்.

    இப்போது நீங்களும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட விரும்பினால், உங்கள் சுவையில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால், அதற்கு சரியான தீர்வு ஓட்ஸ்தான். இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நிரம்புவதுடன், வேலை செய்ய போதுமான சக்தியும் கிடைக்கும். இது பல வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இவை மிகவும் ஆரோக்கியமானவை. காரம், இனிப்பு என பல வகைகளில் செய்யலாம்.

    ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

    ஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஓட்சில் பீட்டா குளுக்கான் உள்ளது, இது உணவை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது.

    ஓட்ஸ் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சருமம் என்றும் இளமையாக இருக்க துணைப்புரிகின்றது.

    ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம், புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களைத் தவிர்க்கலாம். ஓட்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது, இதன் உதவியுடன் புற்றுநோயை ஊக்குவிக்கும் கூறுகள் குறைக்கப்படுகின்றன.

    ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்சில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இந்த பிரச்சனைகளை நம்மிடமிருந்து விலக்கி வைக்கிறது.

    ஓட்ஸ் கிரீம்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஓட்சில் வைட்டமின் சி காணப்படுகிறது, இது உங்களை கருமை நிறத்தில் இருந்து பாதுகாக்கிறது. முகத்தில் அதிக அளவு மெலனின் இருப்பதால், கருமை பிரச்சனை அதிகரிக்கிறது, ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

    ஒரு ஆய்வின் படி, ஓட்ஸ் சாப்பிடுவது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஓட்ஸில் புரதம், சிலிக்கான், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவது எலும்புகளுக்கு பெரும் பலன்களைத் தருகிறது.

     30 கிராம் ஓட்ஸை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளித் துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம், இரண்டு வால்நட்ஸ், ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள் எல்லாம் சேர்த்து ஸ்மூத்தி போன்று எடுத்துக் கொள்ளலாம். எனவே, நீங்கள் சாப்பிடும் அதே ஓட்ஸை, இப்படி வேறு வேறு வகைகளில் மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள் ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள், எடையும் அதிகரிக்காது.

    • மனித உடலின் 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன.
    • மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்றுபோய்விடும்.

    * மனித உடலின் மூலப்பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை மீண்டும் மண்ணோடு கலப்பவை.

    * மனிதஉடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்றுபோய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும்தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்து கொண்டால், அவனது காது, ஒரு குட்டி யானையின் காது அளவுக்கு இருக்கும்.

    * ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் (முடி) எண்ணிக்கை, சுமார் 5 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும், உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள், உள்ளங்கையும் உள்ளங்காலும்தான்.

    * பொதுவாக மனிதர்கள் இரவு வேளையில் தூங்கும்போது மட்டும்தான் கண்களை மூடியிருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் பகல் வேளையில் விழித்திருந்தாலும் கூட, ஆயிரக்கணக்கான முறை நம்முடைய கண்களை சிமிட்டுகிறோம். இதை ஆய்வு செய்து பார்த்தால், இரவைத் தவிர பகல் வேளையிலும் கூட பாதி நேரம் நாம் கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    * மனித இதயம், இடது பக்கத்தைவிட வலது பக்கம் கொஞ்சம் பெரியதாக இருக்கும். இதயமானது, ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறை சுருங்கி விரிகிறது. அப்படியானால் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட நான்கு கோடி முறை.

    * இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் ஒன்று அல்லது இரண்டு வேலைகளைத்தான் செய்யும். ஆனால் மனித உடலில் உள்ள கையானது, பல ஆயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாகச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றது. நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள 30 இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

    * மனித உடலில் உள்ள கால் பாதங்களும், பிரம்மிப்பை ஏற்படுத்தும் ஒன்று தான். ஒரு சதுர அடியில், 3-ல் ஒரு பங்கு மட்டுமே உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள உடலை, சுமார் 70 முதல் 80 வருடங்களாக தாங்கி நிற்கின்றன என்பதே வியப்புக்குரியதுதான்.

    * மனித உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, 2 நீச்சல் குளங்களை சுத்தப்படுத்துவதற்கு தேவையான குளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க தேவையான பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு, ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

    • உணவில் நிறைய வெள்ளை நிற பொருட்கள் இடம் பெறுகின்றன.
    • உடல்நல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக வெள்ளை உணவுகள் உள்ளன.

    அரிசி முதல் சர்க்கரை வரை நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் நிறைய வெள்ளை நிற பொருட்கள் இடம் பெறுகின்றன. இந்த வெள்ளையர்கள் நம் வாழ்க்கையை சீர்குலைக்கிறார்கள் என்பதை தெரிந்தும் பலரும் அதனையே விரும்பி உட்கொள்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூல காரணமான வெள்ளை உணவுகள் உள்ளன.

    உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை பொருட்களை நீக்கி, அவற்றுக்கு மாற்றாக அதே வகையை சேர்ந்த வண்ண பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். தவிர்க்க வேண்டிய வெள்ளை பொருட்கள் பற்றியும், அவற்றுக்கான ஆரோக்கிய மாற்று பற்றியும் பார்ப்போம்.

     வெள்ளை ரொட்டி:

    இது சுத்திகரிக்கப்பட்ட மாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதில் தவிடு நீக்கப்படுவதோடு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் அதிகம் இழக்கப்படுகின்றன. இது பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருளில் தயாரிக்கப்படுகிறது.

    ஆரோக்கியமான மாற்று: முழு தானிய ரொட்டி, கோதுமை ரொட்டி.

    வெள்ளை பாஸ்தா:

    இதுவும் சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படுகிறது. மிகக் குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவிலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: முழு தானியத்தில் தயாரான பாஸ்தா

    வெள்ளை அரிசி:

    இதுவும் சுத்திகரிக்கப்பட்ட தானிய வகையில் அடங்கும். நெல்லின் உமி நீக்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதன் மூலம் ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. குறிப்பாக நார்ச்சத்து மற்றும் புரதம் இல்லாத நிலையை உண்டாக்குகிறது. அப்படிப்பட்ட வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: பழுப்பு அரிசி

     வெள்ளை சர்க்கரை:

    இது மிகக் குறைவான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இனிப்புப் பொருள். கலோரிகளைத் தவிர, மிகக் குறைந்த ஊட்டச்சத்துகளையே வழங்கும். நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க செய்யும். குறிப்பாக தேவையற்ற எடை அதிகரிப்பு, இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும்.

    ஆரோக்கியமான மாற்று: நாட்டு சர்க்கரை, இயற்கை பழங்கள்

    வெள்ளை உப்பு:

    மனித உடலுக்கு உப்பு அவசியம் என்றாலும், வெள்ளை உப்பு அதிகம் சேர்ப்பது இதய நோய், பக்கவாதம், உடல் பருமன் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

    ஆரோக்கியமான மாற்று: இளஞ்சிவப்பு உப்பு,

     உருளைக்கிழங்கு:

    உருளைக்கிழங்கை சமைக்கும் போது பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும். உடலுக்கு குறைவான பலன்களையே கொடுக்கும். ஆனால் எடை அதிகரிப்பு, நீரிழிவு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    இறைச்சி:

    விலங்கு வகை இறைச்சிகளில் காணப்படும் கொழுப்புகள் அடர்த்தியானவை. பெரும்பாலானவை நிறைவுற்ற கொழுப்புகளை கொண்டவை. சிலருக்கு கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கவும் செய்துவிடும். ஆரோக்கியமான மாற்றுகள்: தாவர அடிப்படையிலான கொழுப்புகள் (ஆலிவ், நட்ஸ்கள், விதைகள் மற்றும் வெண்ணெய்)

    • குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    • காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். அதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அப்படி கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி வழக்கத்தை முறையாக பின்பற்றி வருவதுடன் மேலும் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

    1. தண்ணீர்:

    காலையில் எழும்போது பலருக்கும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். பல் துலக்கியதும் தண்ணீர் பருகுவதன் மூலம் அதனை விரட்டியடிக்கலாம். ஒரு டம்ளர் சூடான நீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். சியா விதை அல்லது ஆளிவிதையை சூடான நீரில் கலந்தும் பருகலாம். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்யலாம். உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.

    2. உடற்பயிற்சி:

    தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் ஏதாவதொரு யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். அது சுறுசுறுப்பாக உணர வைக்கும். அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு மன ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    3. புரதம்-நார்ச்சத்து:

    காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. அது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாக அமைந்திருப்பது சிறப்பானது. நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அவை தரும். மதிய உணவுக்கு இடையே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையும் தடுக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

    4. நீர்ச்சத்து:

    எல்லா பருவ காலநிலையிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறி எலக்ட்ரோலைட் சம நிலையின்மை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அடிக்கடி பருக வேண்டும். அவை உடல் எடையை குறைப்பதற்கும் வித்திடும்.

    5. நீச்சல்:

    நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமையும். கோடையில் ஏற்படும் சோர்வை விரட்டி உற்சாகத்தையும் கொடுக்கும். நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது டோபமைன் வெளியீட்டை தூண்டும். தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு இது நல்ல பயிற்சியாகவும் அமையும்.

    6. இரவு உணவு:

    கோடை காலத்தில் இரவு உணவை குறைவாகவே சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானமாகும் விதமாகவும் இருக்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    7. தூக்கம்:

    முறையான தூக்கம் முக்கியம். அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். போதுமான நேரம் தூங்காதது எடை அதிகரிப்பு மற்றும் பசிக்கு வழிவகுக்கும்.

    • திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலை தடுக்கும் ஆற்றல் உள்ளது.
    • ரத்தம் உறையாமல் இருக்க, ‘பிளாவனாய்டு’ என்ற வேதிப்பொருள் உதவுகிறது.

    இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது, திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் போல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

    பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கு இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க, 'பிளாவனாய்டு' என்ற வேதிப்பொருள் உதவுகிறது. ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவேதான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின், இதயநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

    இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான் போல்ட்ஸ் தெரிவிக்கிறார். இதய நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஆஸ்பிரின் அளவைக் குறைத்து திராட்சை ரசம் அல்லது திராட்சை பழச்சாறு அருந்தக் கொடுக்கலாம் என அவர் பரிந்துரைக்கிறார்.

    பொதுவாக திராட்சை ரசத்தில் தயாராகும் ஒயினில் இந்த பிளாவனாய்டு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், போதை தரும் ஒயினை ஒரு மருந்தாகப் பரிந்துரைக்க முடியாத நிலை இருந்தது. இப்போது திராட்சை பழச்சாறில் அதே அளவு பிளாவனாய்டு இருப்பது தெரிய வந்துள்ளதால், தாராளமாக அது ஆஸ்பிரினின் இடத்தைப் பிடிக்கலாம். காதல் ரசத்தால் பலவீனப்பட்ட இதயத்தை, இனி திராட்சை பழச்சாறு, திராட்சை ரசம் ஆகியவற்றால் வலுசேர்க்கலாம்!

    • புகைபிடிப்பதில் இருந்து விடுபட இயற்கை வைத்தியம் சிறந்தது.
    • சிலர் சந்தைகளில் விற்கப்படும் மருந்துகளை நாடுகிறார்கள்.

    புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் பல உடல் நல பிரச்சனைகளை சந்திப்பதுடன், புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களுக்கு பலியாகிறார்கள். புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 ஆம் தேதி அதாவது மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை 'No Smoking Day' கடைபிடிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதன் ஆபத்தை அறிந்தாலும் அவர்களால் கைவிட முடியவில்லை.

    இதனால் சிலர் சந்தைகளில் விற்கப்படும் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால், அவை ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. அவர்களின் ஒருவராக நீங்களும் இருந்தால் அவர்களுக்கு புகைபிடிப்பதில் இருந்து விடுபட இயற்கை வைத்தியம் சிறந்தது. குறிப்பாக, யோகாசனம் மிகவும் சிறந்தது. புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் சில ஆசனங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

     புஜங்காசனம்

    புஜங்காசனத்தின் பயிற்சி கழுத்து மற்றும் மார்பை விரிவடைய செய்கிறது. இது நுரையீரலுக்கு போதுமான ஆக்சிஜனை வழங்குகிறது. இதனால், நுரையீரலின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்த ஆசனம் புகைபிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதேபோல, நமது தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை எளிதில் கைவிடலாம்.

    புஜங்காசனம் செய்யும் முறை:

    முதலில், குப்புற படுக்க வேண்டும். பின்னர், உங்கள் இடுப்பு மற்றும் தலையை உயர்த்தி வில் போன்று வளையவும். அப்போது மூச்சை இழுத்து வெளியிடவும். உங்கள் கைகளை அருகில் ஊன்ற வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்துவிட்டு, பிறகு இயல்பு நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் நீங்கள் அதை 3 முதல் 5 முறை பயிற்சி செய்ய வேண்டும், அதன் பிறகு நீங்கள் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

     தனுராசனம்

    தனுராசனாம் பயிற்சியின் போது, வயிறு, கைகள் மற்றும் கால்கள் மற்றும் மார்பின் தசைகள் நீட்டப்படுகின்றன. இதனால், நுரையீரல்கள் நல்ல பலனை அடைகிறது. இதன் வழக்கமான பயிற்சி நுரையீரலை பலப்படுத்துகிறது மற்றும் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதைத்தொடர்ந்து செய்வதால், புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்கலாம். மேலும், இது மனதையும் மூளையையும் உற்சாகப்படுத்துகிறது. இது புகைபிடிக்கும் பிடிவாதமான அடிமைத்தனத்தில் இருந்து விடுபட உதவுகிறது.

    தனுராசனம் செய்யும் முறை:

    முதலில், குப்புற படுக்கத்து பின்னர், மூச்சை உள்ளிழுத்து உடலின் மேல் பகுதியை வளைத்து, உங்கள் கைகளால் கணுக்கால்களை பிடித்து, கால்களை முழங்காலில் இருந்து பின்னோக்கி வளைக்க வேண்டும். இந்த நிலையில் உடலின் வடிவம் ஒரு வில் போல காணப்படும். எனவே தான் இது தனுராசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் சிறிதுநேரம் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் மூச்சை வெளியேற்றி இயல்பு நிலைக்கு வர வேண்டும்.

     கபால்பதி

    கபால்பதியின் வழக்கமான பயிற்சி சிகரெட் மற்றும் புகையிலை நுகர்வு ஆகியவற்றின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கும். உண்மையில், கபால்பதி மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது மன அமைதியையும் ஆற்றலையும் வழங்குகிறது. இது மன ஆற்றலையும், தன்னம்பிக்கையையும், புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கான உறுதியையும் வழங்குகிறது.

    கபால்பதி பயிற்சி செய்வதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் எளிதில் அகற்றப்படுகின்றன. இந்நிலையில், அதன் நடைமுறையானது சிகரெட் மற்றும் புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீங்குகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

    கபால்பதி செய்யும் முறை:

    இதற்காக, சுகாசன நிலையில் கால்களை மடக்கி உட்காரவும். உங்கள் தலை, கழுத்து மற்றும் இடுப்பு முற்றிலும் நேர்கோட்டில் இருக்க வேண்டும். இந்த நிலையில், இரண்டு உள்ளங் கைகளையும் இரண்டு முழங்கால்களிலும் மேல்நோக்கி வைத்து, வயிறை உள்நோக்கி இழுத்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை சிறிது நேரம் பிடித்து வைத்துவிட்டு மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.

    நீங்கள் இதை குறைந்தது 10 முதல் 20 முறை செய்ய வேண்டும், இது கபால்பதியின் ஒரு சுற்று முடிவடையும். ஒரு பயிற்சியில் 1 முதல் 3 சுற்றுகள் செய்யலாம். இந்த யோகாசனங்களை பயிற்சி செய்வது புகைபிடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும் மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கான மன ஆற்றலையும் உங்களுக்கு வழங்கும்.

    • உடல் எடையை குறைக்க காலை உணவை தவிர்ப்பது சரியான வழி அல்ல.
    • எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் குறைக்க நினைப்பது தொப்பை பகுதியைத்தான். உடலின் புறப்பகுதியில், நம்முடைய கண்ணுக்குத் தெரியும் தொப்பையை மட்டும் கொலஸ்ட்ரால் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளிலும் கொழுப்பு படிந்திருக்கக்கூடும். இது தொப்பை பகுதியைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய கொழுப்பானது இருக்கும் என நினைக்கக்கூடாது. ஒல்லியாக மற்றும் சரியான உடல் அமைப்பைக் கொண்ட மக்களிடமும், இது காணப்படுகிறது.

    உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

     * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

    * எடையை குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

    * காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

    * இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

    * உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

    * தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

    * எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

    இதனை தொடர்ந்து செய்து வந்தால், பானை போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

    • ஒரு கப் தர்ப்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
    • தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

    கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து பெறுவதற்கு தர்ப்பூசணி மிகச்சிறந்த பழமாக திகழ்கிறது. தர்ப்பூசணியில் 90 சதவிகிதத்திற்கு மேல் நீர்ச்சத்து நிறைந்துஇருக்கிறது. ஒரு கப் தர்ப்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

    இதனுடைய சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசீமிக் இன்டக்ஸ்) 72 ஆகும். எனவே சர்க்கரை நோயாளிகள் தர்ப்பூசணியை மிக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

    இதில் வைட்டமின் சி. ஏ.பி6 போன்ற ஊட்டச்சத்துக்களும், பொட்டாசியம் மெக்னீசியம் போலேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் அதிகமாக உள்ளன. மேலும் தர்ப்பூசணியில் லைக்கோபின் மற்றும் சிட்ருலின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்ஸ் இருக்கின்றன, இதில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஜீரண ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது.

    தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் தோல் வறட்சி ஏற்படாமல் தடுத்து அரிப்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தர்ப்பூசணியில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் சிட்ருலின் தசை பிடிப்பு மற்றும் தசை வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

    தர்ப்பூசணியை உணவுக்குப் பின் சாப்பிடுவதை விட இடைப்பட்ட உணவாக (ஸ்நாக்ஸ்) உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் மிகாமல் தர்ப்பூசணி உட்கொள்ளலாம் பொதுவாக பழங்களை இயற்கையாக உண்ணுவது ஜூஸ் வடிவில் குடிப்பதை விட நல்லது.

    • முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல்.
    • வைட்டமின் டி சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம். தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையே சதையாலான டிஸ்க்" இருக்கும். இதன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தை போல் இருந்து, தண்டுவட எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது.

    எலும்புகளுக்கு இடையேயுள்ள டிஸ்க்" நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து சுருங்கி இருந்தால் அது 'ஸ்பாண்டிலோசிஸ்' என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியேநீட்டி நிற்பது ஹெர்னியேட்டட்டிஸ்க்' எனப்படும்.

    டிஸ்க் வீங்கி மிருந்தால் அது பல்ஜிங் தண்டுவட எலும்புகளின் ஓரத்திலிருந்து எலும்புகள் துருத்தி வளர்ந்து காணப்பட்டால் ஆஸ்டியோபைட் அல்லது ஸ்பர்' என்றும் விபத்து, காயங்களில் டிஸ்க்குகளில் ஏற்படும் வீக்கங்கள் அல்லது அழற்சிகள் ஸ்பாண்டிலைடிஸ்' என்றும் அழைக்கப்படும்.

     காரணங்கள்:

    அடிபட்ட காயங்கள் விபத்துக்கள் காரணமாகவும், தொழில் ரீதியாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சுமை தூக்குபவர்கள் மற்றும் டெய்லர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடை மாறுபடுவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1)அமுக்கரா சூரணம் 1 கிராம். சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. பவள பற்பம் 200 மி.கி, குங்கி லிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    4) தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித்தைலம் சிவப்புருக்கில் தைலம் விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம் குக்கில் தைலம் உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு இடுப்பு கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரில் இவாதாடக்கி வாதநாராயணன் முடக்கற்றான், தழுதாழை நொச்சி பழுத்த எருக்கம் இலை இவைகளில் ஒன்றை எண்ணெய்யில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் வேண்டும்.

    கொல்சியம் வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு முருங்கை கீரை, முட்டையின் வெள்ளை கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை வெந்தயம் உளுந்து இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • அதிக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.
    • ஒருமுறை வயிற்றை வெட்டி எடுத்து விட்டால் மீண்டும் பொருத்தமுடியாது.

    நாம் எடுத்துக்கொள்ளும் உணவு வாய் வழியாக தொண்டைக்குள் இறங்கி உணவுக்குழாய்க்குள் இறங்கும். அங்கு உணவுகள் உடைக்கப்பட்டு அதன் சத்துக்கள் குடல் வழியாக உறிஞ்சப்பட்டு எஞ்சியிருப்பவை மலக்கழிவாக வெளியேறும்.

    எந்த ஒரு சர்ஜரியையும் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நமது உணவுகளின் அளவை குறைக்க வேண்டும். உணவு அளவுகளை குறைக்க வேண்டுமென்றால் வயிறு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்கு வயிற்றின் அளவை சுருக்க வேண்டும்.

    அப்போதுதான் குறைந்த உணவு எடுத்துகொண்டாலே வயிறால் நிறைந்த உணர்வை பெற முடியும். எளிய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் கோட்பாடு. இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் மூன்று வகைகளும் கூட உள்ளன. இந்த மூன்று பற்றியும் அதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

    பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகள்

    பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையை பொறுத்தவரை முழுக்க முழுக்க அனஸ்தீஸியா கொடுக்கப்பட்டு மயக்க நிலையில்தான் செய்யப்படும். பெரும்பாலும் லேபராஸ்கோபி முறையில்தான் செய்யப்படுகிறது. காரணம், இதன் மூலம் குணமடையும் காலம் வேகமானதாக இருக்கும். முன்பே சொன்னது போல் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் மூன்று வகைகள் உள்ளன.

    ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி

    இரைப்பை என்றாலே வயிறு என்று அர்த்தம். எக்டோமி என்றால் ரிமூவ் செய்வது, ஸ்லீவ் என்றால் வெட்டி எடுத்தல் என்ற பொருள்படும். இந்த ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி நிலையில் வயிற்றில் 80 சதவீதம் பகுதியை வெட்டி எடுத்து விட்டு மீதி உள்ள 20 சதவீதம் பகுதியை தையல் போட்டு விடுவார்கள். இதன் அடிப்படையே பெரிதாக இருக்கும் வயிற்றை சிறிதாக மாற்றுதல். அப்படி உங்கள் வயிறு சிறிதாக மாறிவிட்டால் உங்கள் உணவு உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். உங்கள் வயிற்றுப்பகுதியில் சுரக்கும் கிரெலின் என்ற ஹார்மோனும் கூட குறைவாகவே சுரக்கும்.

    ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி நன்மைகள்

    * அதிக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது

    * மிக குறைந்த நாட்களே மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவை வரும்

    * மிக எளிய மற்றும் மற்ற வகைகளோடு ஒப்பிடும் போது இது ஒரு சிறிய அறுவை சிகிச்சையே..

    ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி பக்கவிளைவுகள்

    * ஒருமுறை வயிற்றை வெட்டி எடுத்து விட்டால் மீண்டும் பொருத்தமுடியாது.

    * இந்த அறுவை சிகிச்சையில் வயிறு உறிஞ்சக்கூடிய நியூட்ரிஷன்ஸ், ஜூஸ்கள் அனைத்தும் உறிஞ்சப்படுவதற்குள் வெளியேறி விடும்.

    * இதனால் சிலருக்கு நியூட்ரிஷியன் குறைபாடு ஏற்படலாம்.

    * அமில எதிர்வினை ஏற்படும் வாய்ப்புண்டு.

    ×