search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இருக்கிறது.
    • தூங்க செல்வதற்கு முன்பு சில பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது.

    பழங்களில் இயற்கையான இனிப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் அவை தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலங்காரங்களுக்கு மாற்றுத்தேர்வாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இருக்கிறது. அதிலும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சில பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது.

    ஏனெனில் சில பழங்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். தூக்கத்தைச் சீர்குலைக்கும். தூங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கலாம். இரவில் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய அத்தகைய பழங்களுள் சிலவற்றை பார்ப்போம்...

     சிட்ரஸ் பழங்கள்:

    ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. இரவில் தூங்குவதற்கு முன்பு அவற்றை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் அதிகளவிலான அமிலத்தன்மை வயிற்றுக்கு தொந்தரவு கொடுக்கும். செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். அசிடிட்டி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் தூக்கம் சீர்குலைய நேரிடும்.

     அன்னாசி:

    அன்னாசிப்பழத்தில் புரோமலைன் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். அன்னாசி பழத்தை அதிகமாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ உட்கொள்ளும்போது இரைப்பை, குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். தூங்குவதற்கு முன்பு அன்னாசிப்பழம் சாப்பிடுவது செரிமான கோளாறு, வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும் புரோமெலைன் நொதி இரைப்பை அமிலத்தின் உற்பத்தியை தூண்டி அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.

    தர்ப்பூசணி:

    தர்ப்பூசணி நீர்ச்சத்து மிகுந்த புத்துணர்ச்சியூட்டும் பழமாகும். அதில் நீர் அதிகம் இருப்பதால் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். தூங்குவதற்கு முன்பு அதனை உட்கொள்வது வயிறு வீக்கம் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக அளவில் சாப்பிட்டால், அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரையை ஜீரணிக்க உடல் கடுமையாக போராடும். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் தூக்கம் தடைபடும்.

     மாம்பழம்:

    இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. தூங்குவதற்கு முன்பு மாம்பழம் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதனால் தூக்கமும் தடைபடலாம்.

     வாழைப்பழம்:

    வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டிய சிற்றுண்டியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதிகம் சாப்பிடுவது ஆபத்தானது. நன்கு பழுக்காத பழமாக இருந்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளன. அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். இருப்பினும், படுக்கைக்கு முன்பு வாழைப்பழங்களை அதிகமாக உட்கொள்வது வயிறு வீக்கம், அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

    • உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதற்கு குடிநீர் பருகுவது அவசியமானது.
    • வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பருகும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.

    உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதற்கு குடிநீர் பருகுவது அவசியமானது. ஆனால் உட்கொள்ளும் நீரின் வெப்பநிலை உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியூட்டுவது போல தோன்றினாலும், வெப்பநிலை அதிகரிக்கும் கோடை காலங்களில் அதனை உட்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அப்படி குளிர்ந்த நீரை அதிகம் பருகுவதால் ஏற்படும் 10 பக்க விளைவுகள்.

    உடல் அதிர்ச்சி

    குளிர்ந்த நீரை திடீரென உட்கொள்வது உடலை அதிர்ச்சிக்குள்ளாக்கும். குறிப்பாக உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பருகும்போது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அதிர்ச்சி ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழி வகுக்கும். ரத்த ஓட்டத்தையும் பாதிக்கக்கூடும். தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம்.

    செரிமானத்தை மெதுவாக்கும்

    குளிர்ந்த நீர் வயிறு மற்றும் குடலில் உள்ள தசைகளை சுருங்கச் செய்வதன் மூலம் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். செரிமானத்தில் ஏற்படும் மந்தநிலை காரணமாக அசவுகரியம், வயிறு வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.

    நீரேற்றம்

    அறை வெப்பநிலையில் இருக்கும் சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரை பருகும் போது உடல் நீரை விரைவாக உறிஞ்சி நீரேற்றத்தை தக்கவைக்கும். ஆனால் குளிர்ந்த நீர் விரைவாக நீரேற்றம் ஆகாது. உடலால் மெதுவாகவே உறிஞ்சப்படும்.

     சளியை உண்டாக்கும்

    குளிர்ந்த நீரை குடிப்பது சுவாச மண்டலத்தில் சளி உற்பத்தியை தூண்டும். அதிலும் சுவாசம் சார்ந்த பிரச்சினை கொண்டவர்கள் குளிர்ந்த நீரை அதிகமாக பருகினால் சளியும் அதிகமாகி மூக்கு ஒழுகுதல், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    தலைவலியை அதிகப்படுத்தும்

    குளிர்ந்த நீரை பருகினால் சிலருக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்படும். குளிர்ந்த நீரை பருகும்போது உடலில் ஏற்படும் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் தலையில் ரத்த நாளங்கள் சுருங்கலாம். அதனால் அசவுகரியம், தலைவலி ஏற்படும்.

     பல் ஆரோக்கியத்தை பாதிக்கும்

    உணர்திறன் வாய்ந்த பற்கள் கொண்ட நபர்கள் குளிர்ந்த நீரை குடிப்பது, பல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏற்கனவே பல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் குளிர்ந்த நீர் பருகுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

    தசைவலியை அதிகரிக்கும்

    உடற்பயிற்சி செய்து முடித்ததும் குளிர்ந்த நீரை பருகுவது தசை வலி அல்லது தசைப்பிடிப்பை அதிகப்படுத்திவிடலாம். குறிப்பாக தசை வலியை அனுபவிப்பவர்களாக இருந்தால் குளிர்ந்த நீரை பருகக்கூடாது. ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலை தசைகளை சுருங்கச் செய்து அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.

    சீர்குலைக்கும்

    குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை தற்காலிகமாக சீர்குலைக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. குளிர்ந்த நீரை தொடர்ந்து பருகுவது, காலப்போக்கில் வளர்சிதை மாற்றத்தின் செயல்திறனை பாதிக்கலாம்.

    நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்

    குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பது நோய் கிருமிகளை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தலாம். குளிர்ந்த நீரை பருவதால் உண்டாகும் குளிர்ச்சியான வெப்பநிலை, உடலை அழுத்தத்திற்கு உள்ளாக்கி, எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாக்கலாம்.

    சுவாசக் கோளாறுகள் ஏற்படும்

    ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறு சார்ந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் குளிர்ந்த நீரை குடித்த பிறகு கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஏனென்றால் குளிர்ந்த வெப்பநிலை காற்றுப்பாதைகளை சுருக்கி, சுவாசிப்பதை கடினமாக்கும். சுவாசக் கோளாறுகளுக்கு வித்திடும்.

    • ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது.
    • ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது.

    உட்கடசனா (நாற்காலி போஸ்)

    * உத்கடாசனா நமது தொடை தசைகள் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.

    * இந்த ஆசனம் நமது தோள்பட்டைகள், முதுகு, இடுப்பு மற்றும் பிட்டம் ஆகிய உறுப்புகளை சீராக்குகிறது. மேலும் நமது தசைகளை இறுக்கி, அவற்றுக்குள்ளேயே வலிமையைத் தருகிறது.

    * தட்டையான பாதங்களினால் சிரமப்படுபவா்களுக்கு உத்கடாசனா மிகப் பொிய நன்மையைச் செய்கிறது. அதாவது தட்டைப் பாதப் பிரச்சினையை படிப்படியாகக் குணப்படுத்துகிறது.

    * இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உத்கடாசனா மிகவும் உதவியாக இருக்கிறது. இது இதயத்தை மேம்படுத்தி, இதயத்தையும் அதன் துடிப்பையும் தூண்டிவிடுகிறது. பதங்குஸ்தாசனம் (பெருவிரல் போஸ்)

    இந்த ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. பதங்குஸ்தாசனத்தில் கால்களின் விரல்களை கைகளின் கட்டைவிரல்களால் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

     உத்தனாசனம் (முன்னோக்கி நிற்கும் வளைவு)

    உத்தனாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது முக்கியமாக கணுக்கால், முழங்கால்கள், தொடைகளில் வலிமையை உருவாக்குகிறது. இது தசையின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. உத்தனாசனம் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்கிறது.

    உத்தாசனத்தில் உடலின் மேல் பகுதி தரையை நோக்கி வளைவதுடன், தலை பாதங்களைத் தொடுவது போல இருக்க வேண்டும். இதன் காரணமாக, இதயத்தை நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கத் தொடங்கலாம். இது இதய செல்திறனை மேம்படுத்துகிறது.

     தடாசனா (மலை போஸ்)

    தடாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது மிகவும் பயனுள்ள ஆசனமாகும். இந்த ஆசனம் செய்வது உடல் தோரணையை மேம்படுத்துவதுடன், உடல் சீரமைப்பை சரியாக்குகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் மன வலிமையை அதிகரிக்கிறது.

    கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் எதிர்மறை எண்ணங்களைக் குறைக்கிறது. நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் நேர்மறையை ஊக்குவிக்கிறது. கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. உங்கள் முதுகுத்தண்டில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

     சக்ராசனம்

    இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகாசனங்களில் சக்ராசனம் மிகவும் கடினமான ஒன்றாகும். இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பிட்டம், முதுகு மற்றும் கால்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். இது தவிர, இந்த ஆசனம் செய்வது மார்பு தசைகளை நீட்டுவதுடன் முதுகுத் தண்டின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய செயல்பாட்டை அதிகரிக்கிறது.

    முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீண்ட நேரம் மேசையில் அமர்ந்து கணினி பயன்படுத்துவோர்களுக்கு மன அழுத்தம், கோபம் மற்றும் கூன் முதுகு வராமல் தடுக்கும்.

    இந்த ஆசனங்கள் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் ஆசனம் செய்யும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதைத் தவிர்ப்பது நல்லது. எனவே நிபுணரின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த ஆசனம் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

    • ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.
    • ஜீரண உறுப்புகள் சரியாக செயல்பட இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது.

    இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது உடல் முழுவதும் ரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கவும் முக்கியம்.

    இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை மிகவும் பொதுவான ஒன்றாகும். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய போதுமான இரும்புச்சத்து உடலில் இல்லாதபோது ஏற்படுகிறது. ஆய்வின்படி, குழந்தைகளில் 30 முதல் 50 சதவிகிதம் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுகிறது. சோர்வு, பலவீனம் மற்றும் வெளிர் தோல் ஆகியவை அறிகுறிகளாகும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும், ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படவும் இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என அறிவோம்...

    இரும்புச்சத்து குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது:

    கீரைகள்:

    உணவில் அதிகளவு கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகளில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக கீரைகளில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது.

    நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்:

    முந்திரி பருப்பு, ஆப்ரிகாட், பாதாம் பருப்பு, வாதுமை, உலர்ந்த பழங்கள் மற்றும் பேரீச்சம் பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது.

    பருப்பு வகைகள்:

    பருப்பு வகைகளிலும் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது. சோயா, பீன்ஸ், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால், இரும்புச் சத்தை அதிகரிக்கலாம். பாசிப்பயிறு, முழு கருப்பு உளுந்து போன்ற பயிறு வகைகளைச் சாப்பிடுவது இன்னும் அதிக அளவிலான இரும்புச்சத்து கிடைக்க வழி வகைசெய்யும்.

    விதைகள்:

    பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். இதுவும் உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

    செறிவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள், ஓட்ஸ் நல்ல ஆதாரங்களாகும். ஒரு கப் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போதுமான அளவு இரும்புச்சத்தை வழங்கும். கூடுதலாக, பாதாம், திராட்சை மற்றும் முந்திரி போன்ற சில பழங்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம்.

    மீன்:

    மீன் வகைகளில் ஷெல்பிஷ், நண்டு, டூனா மற்றும் சார்டைன்ஸ் போன்ற மீன்களில் இரும்புச் சத்து காணப்படுகிறது. சிவப்பு இறைச்சி, கோழி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், டோஃபு, கொட்டைகள், விதைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    டார்க் சாக்லேட்:

    டார்க் சாக்லேட் உடம்பிற்கு தேவையான இரும்புச் சத்தையும், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் தருகிறது. டார்க் சாக்லேட்டில் 55 சதவிகிதம் கோக்கோ மற்றும் நிறைய இரும்புச்சத்து காணப்படுகிறது.

    வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது தாவர மூலங்களில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடைமிளகு மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றில் காணப்படுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், இரும்புச்சத்து உறிஞ்சுதலில் தலையிடக்கூடிய சில பொருட்களின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த பொருட்களில் காபி, தேநீர் மற்றும் பால் பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் அடங்கும்.

    • உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.
    • பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும்.

    பிட்டான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம்.

    ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடல்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் ஜிம்முக்கு செல்லும் முன் உடலின் சர்க்கரை அளவை தெரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் மயக்கம், வாந்தி அல்லது உடற்சோர்வு ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் சுயநினைவு இழக்க நேரிடும். மாவுச்சத்து அதிகம் உள்ள திண்பண்டங்களை ஜிம்முக்கு எடுத்து செல்வது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

     பயிற்சி முறை

    ஜிம் பயிற்சிகள் சிக்கலானவையாக இருக்கலாம். சரியான முறையில் பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும். அதேபோல, புதிய பயிற்சி மேற்கொள்ளும் முன்னர் பயிற்சியாளரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

    உடற்பயிற்சி செய்வது அவசியம் தான். இருப்பினும், அளவிற்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பது போல அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடும். பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு மட்டுமே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    • சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள் தான்.
    • சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது.

    உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்கு போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் இல்லையா?

    இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.

     ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் இந்த வைட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளை செய்கிறது. வைட்டமின் டி நமது உடலில் கேல்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியமும் குறையும். அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் வைட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எப்படி உடல் பருமன் ஆகிறது?

    உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது.

    உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக வைட்டமின் டி அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடை குறையாது. மேலும் கால்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    வைட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்?

    முதலில் உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

    இந்த வகை வைட்டமின்கள் வெயில் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பதால் உங்களுக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை வைட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம்.

    பொதுவாகவே தினமும் வைட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித் தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள்.

    தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், வைட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள்.

    • பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும்.
    • முழு நேரமும் ஓய்வில் இருப்பதால் கூட எடை அதிகரிக்கலாம்.

    பிரசவத்துக்கு பிறகு இளம் தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும். கொஞ்சம் கவனமெடுத்தால் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.

    கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு போஷாக்கான உணவு தேவை என்பதால் எடுத்துகொள்ளும் அதிகப்படியான உணவுகள் கர்ப்பகாலத்தில் அதிக எடையை உண்டாக்குகிறது. ஆனால் பிரசவத்துக்கு பிறகும் எடை கூட வாய்ப்புண்டு என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அதற்கு காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு போன்றவையே காரணமாக சொல்லப்படுகிறது. இவை தவிர பிரசவக்காலத்துக்கு பிறகு முழு நேரமும் ஓய்வில் இருப்பதாலும் கூட சமயத்தில் எடை அதிகரித்துவிடுகிறது.

     உடற்பயிற்சி செய்யுங்கள்

    பிரசவம் சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்யலாம். சுகப்பிரசம் ஆன பெண்கள் 7 நாட்களுக்கு பிறகு மிதமான உடற்பயிற்சி செய்யலாம்.

    நடைபயிற்சி, வயிறு, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைப்பகுதியை இறுகச் செய்யும் பயிற்சிகள் செய்யலாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை செய்து இரண்டு மாதங்களில் உடல்நிலையை பொறுத்து பயிற்சி செய்யலாம்.

    படிப்படியாக சில மாதங்களுக்கு பிறகு ஏரோபிக் பயிற்சியான ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் போன்றவற்றை செய்யலாம். இவை பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்காது.

    தாய்ப்பால் கொடுக்க தவிர்க்க வேண்டாம்

    பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நாள் ஒன்றுக்கு 2000 முதல் 2500 கலோரிகள் வரை உட்கொள்ள வேண்டும். அப்பொதுதான் தாய்ப்பால் குறைவில்லாமல் கிடைக்கும். அதே போன்று தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கலோரிகள் எரிக்க முடியும். அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் நிறைவாக தந்தாலே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

    உணவில் கவனம்

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அதிகமாக உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. பிரசவம் முடிந்த கையோடு ஒரு டயட்டீஷியனை தொடர்பு கொண்டு ஆலோசித்து குழந்தைக்கு வேண்டிய சத்தான உணவு வகைகளை பட்டியலிடுங்கள். தாய்மார்கள் சத்தான உணவை எடுத்துகொள்வதன் மூலம் அந்த சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் செல்லும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், உலர் பருப்புகள், கீரைகள் நிச்சயம் ஆரோக்கியம் காக்கும். உடல் எடை குறைப்பிலும் உதவக்கூடும். ஏனெனில் உடல் எடையை குறைக்கும் போது உணவுகள் மீது அதிக கவனம் இருக்க வேண்டும்.

    திரவ ஆகாரங்கள் அவசியம்

    திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமே அல்ல. இவை உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் உணவை தாய்மார்கள் எடுத்துகொள்ள வேண்டும். அதே நேரம் அந்த உணவுகள் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான சாய்ஸ் திரவ ஆகாரங்கள் தான்.

    தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது கூட முதலில் ஒரு டம்ளர் நீர் குடித்தபிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சுரப்பு வேகம் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையவும், கட்டுக்குள் வைக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் என பலவிதமான திரவ ஆகாரங்கள் உண்டு. இவை எல்லாமே பக்கவிளைவுகளையும் உண்டாக்காது என்பதால் இதை முயற்சி செய்யலாம்.

    உதாரணத்துக்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, தேன், சீரகம், மிளகுத்தூள், புதினா, கறிவேப்பிலை சேர்த்த பானம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதோடு இவை உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்தும் வெளியேற்றும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள் மற்றும் பிரச்சனையும் அதிகரிக்காது.

    தவிர்க்க வேண்டியது

    கர்ப்பகாலத்தில் அதிக எண்ணெய் பொருள்கள், கொழுப்பு பொருள்கள், துரித உணவுகள், பேக்கரி உணவுகள், நொறுக்கு தீனிகள், பாக்கெட் உணவுகள், உடனடி தயாரிப்பு உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் என எதையெல்லாம் தவிர்த்தொமோ அதை இப்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை எல்லாமே கொழுப்பு நிறைந்தவை உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடியவை.

    • கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
    • உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.

    கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.

    தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.

    உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.

    வாழ்க்கை முறை:

    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.

    4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • மூச்சு இன்றி உடல் இயங்காது.
    • மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான்.

    மூச்சு இன்றி உடல் இயங்காது. இன்றைக்கு தியான மையங்கள், இயற்கை மருத்துவ நிலையங்கள் என்று எங்கு போனாலும் அங்கு ஆழ்ந்த மூச்சு பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. மனித உடலில் நுரையீரல் தொடர்ந்து சுருங்கி விரிவதால் காற்று உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடலை புத்துணர்வு பெற செய்கிறது. இதனால் உடலின் செல்களுக்கு வேண்டிய உணவான காற்று கிடைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆயுள் நீடிக்கும்.

    சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இதையே நிதானமான ஆழ்ந்த மூச்சு மூலம் 48 மணி நேரம் ஆக்கினால் வாழ்நாள் இரண்டாக நீடிக்கும் என்கிறது சித்தர் நூல்கள். அதாவது, ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு சுமார் 15 முறை மூச்சு விடுகிறான். இதையே மெதுவாக செய்தால் நிமிடத்திற்கு 10 முறை என்ற அளவில் சுருக்கலாம். இதையே மூச்சு பயிற்சி அல்லது பிராணயாமம் என்கிறார்கள்.

    வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி, இடது நாசியினால் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். பின் வலது மோதிர விரலாலும், சுண்டு விரலாலும் இடது நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசியை திறந்து மெதுவாக மூச்சை வெளியே விடவும்.

    இதுபோல் வலது நாசியில் மூச்சை வெளியே விட்டு உடனே, அதே நாசியினால் மூச்சை உள்ளே இழுத்து, வலது நாசியை மூடி, இடது நாசியினால் மூச்சை வெளியே மெதுவாக விடவும். இதுபோல் அவரவர் உடல்நிலைக்கு தகுந்தபடி 5 முதல் 8 தடவை செய்யலாம்.

    இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடலின் கழிவுகள் நீங்கி நோய் தாக்காமல் பாதுகாக்கலாம். குறிப்பாக மன அழுத்தம் நீங்கி எப்போதும் மனம் பாரம் இல்லாமல் இருக்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
    • ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது.

    ஓட்ஸ் ஒரு தானியமாகும், அதன் உயர் ஊட்டச்சத்து மதிப்பு, அதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகச் சரியான தீர்வாக காணப்படுகின்றது. காலை உணவு எப்போதும் ஆரோக்கியமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். சிலர் இதை பின்பற்றுகிறார்கள்.

    இப்போது நீங்களும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட விரும்பினால், உங்கள் சுவையில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால், அதற்கு சரியான தீர்வு ஓட்ஸ்தான். இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நிரம்புவதுடன், வேலை செய்ய போதுமான சக்தியும் கிடைக்கும். இது பல வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இவை மிகவும் ஆரோக்கியமானவை. காரம், இனிப்பு என பல வகைகளில் செய்யலாம்.

    ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

    ஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஓட்சில் பீட்டா குளுக்கான் உள்ளது, இது உணவை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது.

    ஓட்ஸ் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சருமம் என்றும் இளமையாக இருக்க துணைப்புரிகின்றது.

    ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம், புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களைத் தவிர்க்கலாம். ஓட்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது, இதன் உதவியுடன் புற்றுநோயை ஊக்குவிக்கும் கூறுகள் குறைக்கப்படுகின்றன.

    ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்சில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இந்த பிரச்சனைகளை நம்மிடமிருந்து விலக்கி வைக்கிறது.

    ஓட்ஸ் கிரீம்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஓட்சில் வைட்டமின் சி காணப்படுகிறது, இது உங்களை கருமை நிறத்தில் இருந்து பாதுகாக்கிறது. முகத்தில் அதிக அளவு மெலனின் இருப்பதால், கருமை பிரச்சனை அதிகரிக்கிறது, ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

    ஒரு ஆய்வின் படி, ஓட்ஸ் சாப்பிடுவது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஓட்ஸில் புரதம், சிலிக்கான், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவது எலும்புகளுக்கு பெரும் பலன்களைத் தருகிறது.

     30 கிராம் ஓட்ஸை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளித் துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம், இரண்டு வால்நட்ஸ், ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள் எல்லாம் சேர்த்து ஸ்மூத்தி போன்று எடுத்துக் கொள்ளலாம். எனவே, நீங்கள் சாப்பிடும் அதே ஓட்ஸை, இப்படி வேறு வேறு வகைகளில் மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள் ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள், எடையும் அதிகரிக்காது.

    • மனித உடலின் 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன.
    • மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்றுபோய்விடும்.

    * மனித உடலின் மூலப்பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை மீண்டும் மண்ணோடு கலப்பவை.

    * மனிதஉடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்றுபோய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும்தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்து கொண்டால், அவனது காது, ஒரு குட்டி யானையின் காது அளவுக்கு இருக்கும்.

    * ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் (முடி) எண்ணிக்கை, சுமார் 5 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும், உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள், உள்ளங்கையும் உள்ளங்காலும்தான்.

    * பொதுவாக மனிதர்கள் இரவு வேளையில் தூங்கும்போது மட்டும்தான் கண்களை மூடியிருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் பகல் வேளையில் விழித்திருந்தாலும் கூட, ஆயிரக்கணக்கான முறை நம்முடைய கண்களை சிமிட்டுகிறோம். இதை ஆய்வு செய்து பார்த்தால், இரவைத் தவிர பகல் வேளையிலும் கூட பாதி நேரம் நாம் கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

    * மனித இதயம், இடது பக்கத்தைவிட வலது பக்கம் கொஞ்சம் பெரியதாக இருக்கும். இதயமானது, ஒரு நாளுக்கு ஒரு லட்சம் முறை சுருங்கி விரிகிறது. அப்படியானால் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட நான்கு கோடி முறை.

    * இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் ஒன்று அல்லது இரண்டு வேலைகளைத்தான் செய்யும். ஆனால் மனித உடலில் உள்ள கையானது, பல ஆயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாகச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றது. நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள 30 இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

    * மனித உடலில் உள்ள கால் பாதங்களும், பிரம்மிப்பை ஏற்படுத்தும் ஒன்று தான். ஒரு சதுர அடியில், 3-ல் ஒரு பங்கு மட்டுமே உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள உடலை, சுமார் 70 முதல் 80 வருடங்களாக தாங்கி நிற்கின்றன என்பதே வியப்புக்குரியதுதான்.

    * மனித உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, 2 நீச்சல் குளங்களை சுத்தப்படுத்துவதற்கு தேவையான குளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க தேவையான பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு, ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

    • உணவில் நிறைய வெள்ளை நிற பொருட்கள் இடம் பெறுகின்றன.
    • உடல்நல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக வெள்ளை உணவுகள் உள்ளன.

    அரிசி முதல் சர்க்கரை வரை நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் நிறைய வெள்ளை நிற பொருட்கள் இடம் பெறுகின்றன. இந்த வெள்ளையர்கள் நம் வாழ்க்கையை சீர்குலைக்கிறார்கள் என்பதை தெரிந்தும் பலரும் அதனையே விரும்பி உட்கொள்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூல காரணமான வெள்ளை உணவுகள் உள்ளன.

    உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை பொருட்களை நீக்கி, அவற்றுக்கு மாற்றாக அதே வகையை சேர்ந்த வண்ண பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். தவிர்க்க வேண்டிய வெள்ளை பொருட்கள் பற்றியும், அவற்றுக்கான ஆரோக்கிய மாற்று பற்றியும் பார்ப்போம்.

     வெள்ளை ரொட்டி:

    இது சுத்திகரிக்கப்பட்ட மாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதில் தவிடு நீக்கப்படுவதோடு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் அதிகம் இழக்கப்படுகின்றன. இது பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருளில் தயாரிக்கப்படுகிறது.

    ஆரோக்கியமான மாற்று: முழு தானிய ரொட்டி, கோதுமை ரொட்டி.

    வெள்ளை பாஸ்தா:

    இதுவும் சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படுகிறது. மிகக் குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவிலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: முழு தானியத்தில் தயாரான பாஸ்தா

    வெள்ளை அரிசி:

    இதுவும் சுத்திகரிக்கப்பட்ட தானிய வகையில் அடங்கும். நெல்லின் உமி நீக்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதன் மூலம் ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. குறிப்பாக நார்ச்சத்து மற்றும் புரதம் இல்லாத நிலையை உண்டாக்குகிறது. அப்படிப்பட்ட வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: பழுப்பு அரிசி

     வெள்ளை சர்க்கரை:

    இது மிகக் குறைவான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இனிப்புப் பொருள். கலோரிகளைத் தவிர, மிகக் குறைந்த ஊட்டச்சத்துகளையே வழங்கும். நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க செய்யும். குறிப்பாக தேவையற்ற எடை அதிகரிப்பு, இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும்.

    ஆரோக்கியமான மாற்று: நாட்டு சர்க்கரை, இயற்கை பழங்கள்

    வெள்ளை உப்பு:

    மனித உடலுக்கு உப்பு அவசியம் என்றாலும், வெள்ளை உப்பு அதிகம் சேர்ப்பது இதய நோய், பக்கவாதம், உடல் பருமன் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

    ஆரோக்கியமான மாற்று: இளஞ்சிவப்பு உப்பு,

     உருளைக்கிழங்கு:

    உருளைக்கிழங்கை சமைக்கும் போது பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும். உடலுக்கு குறைவான பலன்களையே கொடுக்கும். ஆனால் எடை அதிகரிப்பு, நீரிழிவு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    இறைச்சி:

    விலங்கு வகை இறைச்சிகளில் காணப்படும் கொழுப்புகள் அடர்த்தியானவை. பெரும்பாலானவை நிறைவுற்ற கொழுப்புகளை கொண்டவை. சிலருக்கு கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கவும் செய்துவிடும். ஆரோக்கியமான மாற்றுகள்: தாவர அடிப்படையிலான கொழுப்புகள் (ஆலிவ், நட்ஸ்கள், விதைகள் மற்றும் வெண்ணெய்)

    ×