search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குட்டீஸ் பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும்
    X

    குட்டீஸ் பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

    குட்டீஸ், நீங்கள் ரொம்ப ரொம்ப புத்திசாலிகள் தானே!. பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கே அறிவோம்...











    குட்டீஸ், நீங்கள் ரொம்ப ரொம்ப புத்திசாலிகள் தானே!. உங்களுக்கு எந்த நேரத்தில் எப்படி பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் இல்லையா? அவர்கள் சொல்படி கேட்டு நீங்களும் சமர்த்தாக நடப்பீர்கள் அப்படித்தானே. ஆனால் ஆபத்துகள் திடீரென நம்மை ஆட்கொள்பவை.

    சுற்றி இருப்பவர்களாலும், கவனக்குறைவாலும் ஆபத்து வரலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவை மோசமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். நீங்கள், கவனமாக, காயமின்றி பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடி இருப்பீர்கள், அதுபோலவே பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கே அறிவோம்...

    * உங்களுக்கு சாக்லெட்டும், பொம்மைகளும் ரொம்ப பிடிக்கும்தானே. ஆனால் பெற்றோர் வாங்கித் தரும்போது மட்டும் அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும். சாக்லெட்டை ருசித்து, பொம்மைகளுடன் விளையாட ஆனந்தப்பட வேண்டும். முன்பின் தெரியாத நபர்கள் யாரும் சாக்லெட் உள்ளிட்ட தின்பண்டங்கள் கொடுத்தாலோ, பொம்மைகள் போன்ற பரிசுகள் தந்தாலோ வாங்கக் கூடாது. ‘அம்மா எனக்கு தினமும் சாக்லெட் தருவார், எங்கள் வீட்டில் நிறைய பொம்மை இருக்கிறது’ என்று மறுத்துவிடுங்கள்.

    தெரிந்தவர்கள் என்றாலும் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிறந்த நாள் விழா, மற்றும் உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது மற்றவர்கள் தரும் பரிசுகளை பெற்றோர் அனுமதியுடன் வாங்கிக் கொள்வதில் தவறில்லை. அதுவே உங்களுக்குப் பாதுகாப்பானது. ஏனெனில், உலகில் காணாமல் போகும் குழந்தைகளில் சுமார் 80 சதவீதம் பேர், ஆசை காட்டி ஏமாற்றப்பட்டே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பாதுகாப்பாக செயல்படுவது புத்திசாலித்தனம். இனி யாரும் எதையாவது கொடுத்தால் வாங்கமாட்டீர்கள்தானே?

    * பள்ளி நேரத்தில் பாதுகாப்பாக வகுப்பறையில் இருக்க வேண்டும். அவசியமின்றி வகுப்பறை மற்றும் பள்ளியை விட்டு வெளியேறக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களுடன் செல்வது, வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியில் சுற்றுவது போன்றவை ஆபத்தானவை.

    * விளையாடும்போதும் அதிக கவனம் தேவை. ஒவ்வொரு விளையாட்டுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி விழிப்புடன் விளையாட வேண்டும். உதாரணமாக கிரிக்கெட் விளையாடினால் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும், கால்பந்து ஆடும்போது நல்ல காலணி அவசியம். முகம், தலை, அந்தரங்க பகுதிகளில் பந்துகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓடி விளையாடுவது, மரம் ஏறி விளையாடுவது போன்ற சமயங்களில் காயம் ஏற்படாத வகையில் எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

    * கருவிகளை உபயோகிக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிளேடு, கத்தி, கத்தரிக்கோல், சுத்தியல் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும். கவனமின்றி செயல்பட்டால் கைகளை பதம் பார்த்துவிடும். கருவிகளை பயன்படுத்தும்போது அவசியமான முதலுதவி பொருட்கள் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

    * சாப்பிடக்கூடாத பொருட்களை வாயில் வைத்து கடிக்கக்கூடாது. உதாரணமாக ஷாம்பு, சோப்பு, கொசுமருந்து, வீட்டை சுத்தப்படுத்தும் ரசாயனப் பொருட்கள் போன்றவற்றை அவசியமின்றி கையில் வைத்து விளையாடவோ, வாயில் வைத்து கடிக்கவோ கூடாது. ஏனெனில் இதுபோன்ற பொருட்களில் உடலுக்கு தீங்கான ரசாயனப் பொருட்கள் இருக்கும். சிலவற்றில் ஆபத்தான விஷப் பொருட்களும் இருக்கிறது. எனவே இவற்றை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.



    * உயரத்தில் இருக்கும் பொருட்களை எடுப்பது, உலோகச் சாமான்களை கையாளுவது போன்ற சமயங்களிலும் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை.

    * தண்ணீரில் விளையாடுவது ஜாலியாக இருக்கலாம். ஆனால் முன்பின் பழக்கமில்லாத நீர் நிலைகளில் விளையாடச் செல்லக்கூடாது. ஆழமான பகுதிக்கும் செல்லக்கூடாது.

    * கருவிகளை கையாளும் விதம் பற்றியும், முதல் உதவி முறைகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பது பாதுகாப்பை பலப்படுத்தும். அவசர உதவி எண்களையும் தெரிந்து வைத்திருப்பது புத்திசாலித்தனம்.

    * அன்றாட நிகழ்வுகளில் எச்சரிக்கையாக இருப்பதுபோல, அந்தரங்க விஷயங்கள் மற்றும் பாலியல் பற்றி விழிப்புணர்வு பெற்றிருப்பது பாதுகாப்புக்கு கைகொடுக்கும். உங்கள் உடல், உங்களுக்கான முழு உரிமை கொண்டது. அதை உங்கள் அனுமதியின்றி யாரும் தொட்டுப்பார்க்கவோ, காயப்படுத்தவோ உரிமையில்லை. அந்தரங்க உறுப்பை தொட்டுப் பார்ப்பது, உற்றுப் பார்ப்பது, கட்டிப் பிடிப்பது போன்றவையும் தவறானது. “நான் சொல்லும் விஷயத்தை அம்மாவிடம் சொல்லக்கூடாது, நாம் செய்வதை வீட்டில் சொல்லாதே” என்று ரகசியம் காக்கச் சொல்லியும், மிரட்டி பணிய வைத்தும் சிலர் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தகாத செயல்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி யாராவது தவறாக நடந்து கொண்டால் தைரியமாக சத்தமிட்டு மற்றவர்களின் உதவியை பெறலாம். பெற்றோரிடம் கூறி பாதுகாப்பை ஏற்படுத்தலாம்.

    * மின் சுவிட்ச் போர்டுகள், வயர்களிலும் விளையாடக்கூடாது. அயர்ன்பாக்ஸ், ஹீட்டர் உள்ளிட்ட எலக்ட்ரிக் கருவிகளை கையால் தொட்டுப் பார்க்கக்கூடாது. மின்சாதனங்கள் அதிக ஆபத்தானவை.

    * சைக்கிள் மற்றும் வாகனங்களில் விளையாடும்போது அதிக வேகம் கூடாது. வேறு வாகனங்கள் குறுக்கே வருகிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். சாலையில் செல்லும்போது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.

    * நீங்கள் சுதந்திரமானவர். பலமானவர். புத்திசாலி. உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. யாரிடமும் ஏமாற மாட்டீர்கள். எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். மனதில் தைரியம் வளர்த்து, எந்த சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலை பெருக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் விழிப்புடன் இருங்கள்... எல்லாவற்றையும் வென்று காட்டுங்கள்!
    Next Story
    ×