search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அப்பாவின் கண்டிப்புகளால் பிள்ளைகள் எரிச்சல் படக்கூடாது
    X

    அப்பாவின் கண்டிப்புகளால் பிள்ளைகள் எரிச்சல் படக்கூடாது

    அப்பா எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வார்கள் என்று நினைத்து பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை நெகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்.
    மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. பேனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய். ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார் அதை அணை. பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்ன சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்து கொண்டிருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது.

    வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும் என்று எண்ணிக்கொண்டான் மகன். வேலைக்கான நேர்காணலுக்கு கிளம்பினான். கேட்கிற கேள்விக்கு தயங்காமல் பதில் சொல். தெரியவில்லை என்றாலும் தைரியமாக பதிலை எதிர்கொள் என்றும் பஸ் செலவுக்கு பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் காவலாளி யாரும் இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்து விடுவது போல் இருந்தது. அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான். நடைபாதையின் இருபுறமும் அழகு மரச்செடிகள் வரவேற்றன.

    தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே போட்டுவிட்டு போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்கு பாயாமல் நடைபாதையை நனைத்து கொண்டிருந்தது. குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு சென்றான்.

    வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக மாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது. விளக்கை அணைக்காமல் செல்கிறாயே என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பது போல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.

    மாடியில் பெரிய ஹாலில் ஏராளமானோர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தை பார்த்த மகனுக்கு ஒரே திகைப்பு. நமக்கு இங்கு வேலை கிடைக்குமா? என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன். மிதியடியில் வெல்கம் என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.



    யாருமே இல்லாமல் ஏன் அறையில் மின்விசிறி ஓடுகிறது என்ற அப்பாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு மற்ற இளைஞர்கள்களுடன் சென்று அமர்ந்தான். இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது அவனுக்கு தெரியவில்லை.

    கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சான்றிதழ்களை வாங்கி பார்த்த அதிகாரி அதை பிரித்து பார்க்காமல் நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள் என்று கேட்டார். இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா என்று தெரியாமல் குழம்பி நின்றான் மகன். என்ன யோசிக்கிறாய் என்று கேட்டார் அந்த அதிகாரி.

    நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி, பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்துவிட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம். இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய மின்விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.

    அப்பாவின் கண்டிப்புகள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்குமுறையே இன்று வேலை வாங்கி தந்திருக்கிறது என்பதை அறிந்தபோது மகன் நெகிழ்ச்சி அடைந்தார். அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது. வேலை கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன்.

    அப்பாவின் கண்டிப்புகளால் பிள்ளைகள் எரிச்சல் படக்கூடாது. அவர்கள் எது செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வார்கள் என்று நினைத்து பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை நெகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்.
    Next Story
    ×