search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்..
    X

    இரண்டாவது குழந்தையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்..

    இரண்டாவது குழந்தையின் வரவால், பெற்ற தாய்கூட முதல் குழந்தையிடம் இருந்து சற்று விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அது இரண்டாவது குழந்தையை பாதிப்பதற்கு முன்பு பெற்றோர் சுதாரித்துக்கொள்ளவேண்டும்.
    தாய் இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பது, அந்த குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் அவர்களது எதிர்பார்ப்பைப் போல முதல் குழந்தைக்கு மாற்றாக ஆண்வாரிசுக்கு துணையாக பெண் குழந்தையோ, பெண் குழந்தைக்கு துணையாக ஆண் குழந்தையோ பிறந்தால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    குடும்பம் முழுமை பெற்றதாக மனதுக்குள் மத்தாப்பு பூக்கும். ஆனால் இரண்டாவது குழந்தையின் வரவு, முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. குடும்பத்திற்கு முதல் வாரிசாக வந்து, அனைவரின் அன்பிலும் நனைந்தவர்கள், இரண்டாவது குழந்தையின் வரவால், புறக்கணிக்கப்பட்டால் நிச்சயம் ஏங்கிப்போவார்கள். அவர்களின் நடவடிக்கையில் மாற்றத்தை காண நேர்ந்தால் பெற்றோர் கவனமாக செயல்பட வேண்டும்.

    இரண்டாவது குழந்தையின் வரவால், பெற்ற தாய்கூட முதல் குழந்தையிடம் இருந்து சற்று விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அது இரண்டாவது குழந்தையை பாதிப்பதற்கு முன்பு பெற்றோர் சுதாரித்துக்கொள்ளவேண்டும்.

    அதுவரை எல்லோரது கவனத்தையும் ஈர்த்து, அன்பு மழையில் நனைந்தது முதல் குழந்தையே. திடீரென்று அந்த கவனிப்புகள் எல்லாம் அப்படியே குறைந்து, இரண்டாவது குழந்தைக்கு முன்னுரிமை கிடைப்பதை கவனிக்கும் மூத்த குழந்தை, மனதளவில் ரொம்பவே பாதிக்கப்படும். மன அழுத்தத்திற்கு உள்ளாகும். சில குழந்தைகள் சோர்வாகவும், இன்னும் சிலர் கோப முகமாகவும் மாறிப்போக வாய்ப்பிருக்கிறது. கத்துவது, அழுவது, சேட்டை செய்வது என அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் திடீரென்று அப்படி மாறிப்போவதற்கு காரணம், மற்றவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியே.

    மேலும் சில குழந்தைகள் வளர்ச்சியில் பின்தங்கிப்போகும் வாய்ப்பு உண்டு. டம்ளரில் பால் குடித்துப் பழகிய அவர்கள், சிறு குழந்தையாக இருந்தால்தான் கவனிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் புட்டிப்பால் குடிக்கும் பழக்கத்திற்கு மாறுவார்கள். இதுபோல பேச்சிலும், நடவடிக்கையிலும் சில பின்ன டைவுகளை காணலாம்.

    வேண்டுமென்றே அந்தக் குழந்தைகள் செய்யும் இதுபோன்ற சேட்டைகள் பெற்றோரையும், சுற்றி இருப்பவர்களையும் கோபம் கொள்ளச் செய்யலாம். ஆனால் ‘அது திமிர் குணம்’ என்று அவர்களை கண்டித்துக் கொண்டிருந்தால் தவறு உங்கள் பக்கம்தான். பெற்றோரை தன்பால் ஈர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை பெற்றோர் உணர்ந்து தங்கள் கோபத்தைக் குறைத்து, முதல் குழந்தை மீது வழக்கம்போல் அன்பு செலுத்த முன்வரவேண்டும்.



    ‘பெற்றோரை பொறுத்தவரையில், அவர்கள் தங்கள் முதல் குழந்தை பக்குவமானவர்களாக ஆகிவிட்டார்கள். எதையும் புரிந்து கொள்வார்கள் என்று தவறாக கணித்துவிடுகிறார்கள். இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டாலும், முதலில் பிறந்ததும் அதுபோன்றதொரு குழந்தைதான் என்பதை பெற்றோர் மனதில்வைத்துக்கொள்ள வேண்டும்’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

    குழந்தைகள் உலகத்தைப் பொறுத்தவரையில் இந்த திடீர்மாற்றங்கள் பெரிய தடுமாற்றத்தை உருவாக்கும். சவாலான இந்த சூழலை சமாளிக்கத் தெரியாமல் முதல் குழந்தைகள் கவலைகளுடன் சவலைகளாக மாறிப்போகலாம். இதுபோன்ற மாற்றங்களை அறிந்தால் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?...

    “உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அதற்கு இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும். கர்ப் பிணியான தாயின் வயிறு பெரிதாகிக்கொண்டே வருவதுகூட முதல் குழந்தைக்கு வித்தியாசமாகத் தெரியும்.

    தாயின் மேடான வயிற்றைத் தொட்டுப் பார்க்கவும், வயிற்றில் தட்டவும் அதற்குத் தோன்றலாம். அல்லது பயத்தையும் உருவாக்கலாம். அப்போதே முதல் குழந்தைக்கு உண்மையை புரியவைத்து, பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்துவதுடன், தன் சகோதரனை (அல்லது சகோதரியை) வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய வேண்டும்” என்கிறார்கள் மகப்பேறு மற்றும் உளவியல் நிபுணர்கள். ‘அதற்கு சரியான தருணம் தாய் கர்ப்பமாக இருக்கும் 4-வது மாதம்’ என்கிறார்கள்.

    “நான்காவது மாதத்தில் தாய்க்கு வயிறு பெரிதாகத் தொடங்கும். அப்போதே முதல் குழந்தையிடம், உன்னுடன் விளையாட ஒரு தம்பி (அல்லது தங்கை) தயாராகி வருகிறது என்று சொல்லவேண்டும். அப்போதிருந்தே அவர்கள் தன் உடன்பிறப்பை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இப்படி கர்ப்பத்திலிருந்தே மூத்த குழந்தையை சகோதர பாசத்திற்குப் பழக்கினால், அவைகள் இயல்பாகிவிடும்.



    பிறக்கப் போகும் தம்பி - பாப்பா உன்னுடன் விளையாட ஓடி வரும். நீ சொன்னதையெல்லாம் கேட்கும், நீதான் அவனை-அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும், என்றெல்லாம் கூறி முதல் குழந்தையிடம் ஆவலைத்தூண்ட வேண்டும்” என்று விளக்கம் தருகிறார்கள்.

    இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே முதல் குழந்தையிடம் முன்புபோல் அக்கறை காட்ட முடியாமல் போக வாய்ப்புகள் அதிகம் என்பதால் தாயின் கர்ப்பகாலகட்டமே முதல் குழந்தைக்கு புரியவைக்க சரியான தருணம். அப்போதே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கலாம். அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம். புதுவரவை மகிழ்வுடன் ஏற்கும் மனப்பக்குவத்துக்கு அவர்களும் தயாரானால்தான், தனிமை உணர்வில் தள்ளப்படமாட்டார்கள்.

    இரண்டாவது குழந்தைக்கு பொருட்கள் ஏதாவது வாங்கச்சென்றால், மூத்த குழந்தையையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். பாப்பாவுக்கு எந்த உடையை தேர்வு செய்யலாம், எந்த பொம்மையை வாங்கலாம் என்பது பற்றி மூத்த குழந்தையிடமும் ஆலோசனை கேளுங்கள். பாப்பாவுக்கு இது நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறும் கருத்துகளுக்கு முன்னுரிமை தாருங்கள். அவர்கள் எடுத்துக் கொடுக்கும் பொம்மைகளிலும் சிலவற்றை தேர்வுசெய்து இரண்டாவது குழந்தைக்கு விளையாடக் கொடுங்கள். அது இரு குழந்தைகளையுமே மகிழ்ச்சிப்படுத்தும்.

    ‘பாப்பாவை நானும் தூக்கிவைத்துக்கொள்கிறேன்’ என்று மூத்த குழந்தை கேட்டால், அவர்களின் மடியில் பாதுகாப்பாக உட்காரவைக்க அனுமதியுங்கள். ‘உன்னால் வைத்துக்கொள்ள முடியாது. உன்னிடம் தரமாட்டேன்’ என்றெல்லாம் கூறி, புறக்கணித்துவிடாதீர்கள். மாறாக ‘தம்பி பாப்பாவுடன் விளையாடவும், கவனமாகப் பார்த்துக்கொள்ளவும் உரிமை உள்ளவன் நீதான். நீ சமர்த்தாக நடந்து கொண்டு பாப்பாவை அழாமல் பார்த்துக் கொண்டால்தான் அவளும் உன்னைப்போல் சமர்த்தாக வளர்வாள்” என்று ஊக்கம் கொடுங்கள்.

    அதுமட்டுமல்லாமல் அந்த சூழலை சமாளிக்க கணவரையும் தாய்மார்கள் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பிறக்க இருக்கும் 2 மாதங்களுக்கு முன்பே முதல் குழந்தையை குளிப்பாட்டவும், உணவு ஊட்டவும், தூங்க வைக்கவும் கணவரை பழக்கப்படுத்தச் சொல்லலாம். அப்படி தந்தை தன்னுடன் நேரத்தை செலவிட்டால், முதல் குழந்தைக்கு தனக்கும் போதிய முக்கியத்துவம் கிடைக்கிறது என்ற எண்ணம் உருவாகும்.
    Next Story
    ×