search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர்களே குழந்தைகளிடம் பழகுவதில் பாகுபாடு காண்பிக்காதீர்கள்
    X

    பெற்றோர்களே குழந்தைகளிடம் பழகுவதில் பாகுபாடு காண்பிக்காதீர்கள்

    குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பதாலோ, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதாலோ மட்டும் பாசமான பெற்றோர்களாகிவிட முடியாது.
    எல்லா பெற்றோர்களுமே பிள்ளைகளிடம் பாசமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பாசத்தை பொழிவதில் அவர்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறை பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. சில பிள்ளைகள் பெற்றோர்களிடமிருந்து அந்நியமாகிவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். ‘எவ்வளவோ பாசத்தை கொட்டினாலும் என் குழந்தை என்னிடம் நெருங்கி பழகுவதில்லை’ என்று குறைப்பட்டுக்கொள்வார்கள்.

    அதற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்க்க வேண்டும். குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பதாலோ, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதாலோ மட்டும் பாசமான பெற்றோர்களாகிவிட முடியாது. பெற்றோர் மட்டும் ஒருதலைப்பட்சமாக அன்பை பொழிவதில் அர்த்தமில்லை. குழந்தைகளிடம் இருந்தும் அன்பை பெற வேண்டும். அவர்கள் தயக்கமின்றி நெருங்கி பழகுவதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

    தங்களுடைய தேவைகள் எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் கருத்துகளை சொல்வதற்கு முன்பாகவே, ‘அது உனக்கு சரிப்பட்டு வராது. நீ செய்யும் காரியம் எனக்கு பிடிக்கவில்லை’ என்று கறாராக பேசி அவர்கள் மனதை நோகடித்துவிடக்கூடாது. அவர்களின் செயல்பாடுகள் தவறானதாக இருந்தால் பக்குவமாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். அவர்கள் உரிமையோடு உங்களுடன் விவாதிக்கும் அளவிற்கு நெருக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.



    அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து திறந்த மனதுடன் பரிசீலனை செய்ய வேண்டும். தன்னுடைய கருத்துக்களுக்கு பெற்றோர் மதிப்பளிக்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகளிடம் உண்டாக வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்ற எண்ணம் அவர்களிடம் தோன்றும். எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேச தொடங்குவார்கள்.

    தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்ற மனோபாவமே அவர்களிடத்தில் பெற்றோருக்குரிய மரியாதையை ஏற்படுத்தி கொடுத்துவிடும். அதன் பிறகு பெற்றோர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து அதன்படி நடக்க தொடங்கி விடுவார்கள். பெற்றோர்களும் தமது வயதுக்கு இணையானவர்களுடன்தான் சரிசமமாக பழகவேண்டும், குழந்தைகளிடம் அப்படி பழக வேண்டியதில்லை என்று நினைப்பது தவறு.

    எந்த வயதினரிடமும் அன்புடன் பழகுவதற்கு பாகுபாடு காண்பிக்கக்கூடாது. சிறுவயதில் இருந்தே குழந்தைகளிடம் மனம் விட்டு விவாதிப்பதை பழக்கமாக்கிக்கொண்டால் அவர்கள் சரியான முடிவு எடுப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிடும். அவர்கள் தவறான முடிவுகள் எடுப்பது தவிர்க்கப்பட்டு விடும். எதுவாக இருந்தாலும் நன்கு ஆலோசித்து சுயமாக இறுதி முடிவு எடுக்கும் பக்குவம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
    Next Story
    ×