search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்வையின் பாதிப்பு
    X

    கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்வையின் பாதிப்பு

    கோடை காலத்தில் குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோடை காலம் முடியும் வரையில் எண்ணெய் தேய்த்து குழந்தைகளை குளிப்பாட்டி வருவது நல்லது.
    கோடை காலத்தில் வெப்ப தாக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ குழந்தைகளை பாதிக்கும். அவர்கள் விளையாடும்போது வெளியேறும் வியர்வையின் அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். நாவறட்சி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். உடல் சோர்வு, தலை வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, அம்மை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தோல் நோய்களும் தோன்றும். வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலை சுத்தப்படுத்தாமல் விட்டுவிட்டால் நமைச்சல் ஏற்படுத்தி அது கொப்பளங்களாக மாறிவிடக்கூடும். குழந்தைகளை தினமும் குளிப்பாட்டுவதோடு நின்றுவிடக்கூடாது. அவ்வப்போது உடலை தண்ணீரால் கழுவி வர வேண்டும்.

    வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவு குறைய தொடங்கி விடும். வியர்வையாக வெளியேறும் நீரை ஈடு செய்ய வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவது கூடாது. அதனுடன் உப்புச்சத்தின் அளவையும் ஈடு செய்ய வேண்டும். அதற்கு தண்ணீருடன் சிறிதளவு உப்பையும் சேர்த்து அருந்த வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்தும் குடித்து வரலாம்.

    அது உடலில் இருந்து வெளியேறிய நீரையும், உப்புச்சத்தையும் ஈடுகட்டும். கோடை காலத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர் களுக்கு வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்போது சோர்வு அதிகம் ஏற்படும். தாகம் எடுத்தாலும் அதனை சொல்ல தெரியாமல் தவிப்பார்கள். அவ்வப்போது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து பருக கொடுக்கலாம்.



    தண்ணீரை நன்கு காய்ச்சி கொடுப்பது நல்லது. குழந்தைகள் காற்றோட்டமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காற்றோட்டம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குழந்தைகளை குளிப்பாட்டி வருவது நல்லது. அதிலும் எண்ணெய்யை காய்ச்சி, ஆறவைத்து உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டி வரலாம். மஞ்சளை அரைத்து உடலில் தேய்த்து வருவதும் தொற்று நோயில் இருந்து காக்கும். குழந்தைகளுக்கு ஏதாவது நோய் பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடல் உஷ்ண பாதிப்பாக நினைத்து சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது டைபாய்டு, ப்ளூகாய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல் களின் அறிகுறியாக இருக்கலாம்.

    குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு வர வேண்டும். கோடைகால நோய்களை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. சமைத்த உணவுகளை சூடாக உடனே சாப்பிட்டு விட வேண்டும். நீண்ட நேரம் கழித்தோ, காலையில் சமைத்த உணவை இரவோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    Next Story
    ×