search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்களே வெற்றிக்காக உழையுங்கள்
    X

    மாணவர்களே வெற்றிக்காக உழையுங்கள்

    இது வரை எழுதி முடித்த தேர்வுகள் குறித்து மாணவ-மாணவிகள் கவலை கொள்ளாமல், அடுத்து எழுதப்போகிற தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
    தேர்வுக்காலம் மாணவர்களின் தவக்காலம் ஆகும். தற்போது பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் தவிரதமிழ், ஆங்கிலம், வணிகவியல், மனையியல், புவியியல், வேதியியல், கணக்குப் பதிவியல், கணினி அறிவியல், உயிர் வேதியியல், இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், சிறப்பு தமிழ் ஆகிய தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

    ஆனாலும் இயற்பியல், கணிதம், உயிரியல், தொழிற்கல்வி ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

    அந்த வகையில் இந்த மாதம் கடைசி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே இது வரை எழுதி முடித்த தேர்வுகள் குறித்து மாணவ-மாணவிகள் கவலை கொள்ளாமல், அடுத்து எழுதப்போகிற தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கிய பாடங்களில் எடுக்கிற மதிப்பெண்கள் தான் உயர் கல்வியில் சேர்வதற்கு உதவும். எனவே மாணவ- மாணவிகள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டும்.

    தேர்வு தொடங்கிய போது இருந்த அதே வேகம் மற்றும் ஆர்வத்துடன் இனிவரும் தேர்வுகளை எழுத வேண்டும். தேர்வு களுக்கு இடையில் உள்ள விடுமுறை நாட்களை பாடங் களை முழுமையாக மறுவாசிப்பு செய்யவும், எழுதி பார்க்கவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தங்களுக்கு சரியாக படிக்க வராது என்று பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். அதோடு நன்றாக படிக்க வரும் பாடங்களில் கூடுதல் மதிப்பெண் எடுக்கும் நோக்கத்திலும் செயல்பட வேண்டும்.



    தேர்வுகள் முடிய இன்னும் சில நாட்களே உள் ளன. அதுவரை தங்களின் பொழுதுபோக்குகளை மாணவ-மாணவிகள் ஒதுக்கி வைத்து விட வேண்டும். தேர்வுகளை எழுதுவது தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சொல்லி தந்த கூறுகளின் படி ஆழமாக படிக்க வேண்டும். அதே நேரத்தில் எதிர்பாராத, படிக்காத கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படும் போது பதற்றம் அடையக் கூடாது. அது தேர்வு எழுதும் மனநிலையை பாதிக்க செய்து விடும். எனவே அடுத்தடுத்த கேள்விகளை நன்கு படித்து, அதற்குரிய பதிலை சரியாகவும், உரிய அளவிலும் எழுத தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தன்னால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு தேர்வையும் சிறப்பாக எழுதவேண்டும். ஒரு தேர்வு முடிந்த உடன் அடுத்த தேர்வுக்கு தயாராகி விட வேண்டும். எழுதி முடித்த தேர்வில் செய்த தவறுகளை நினைத்து வருந்துவதில் எந்த பலனும் இல்லை.

    சரியாக குறி பார்க்காமல் வில்லில் இருந்து விடப்படும் அம்பு நினைத்த பலனை தராது. அதுபோல் இலக்கு இன்றி தேர்வுகளை எதிர்கொண்டால் உரிய பலன் கிடைக்காது. எனவே தேர்வை நல்ல முறையில் எழுதி, அதிக மதிப்பெண் பெறுவது என்ற குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு, அதை நிறைவேற்றும் உறுதியோடு தேர்வு எழுத வேண்டும். அந்த வகையில், அதிக மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி படிப்பு என்கிற அம்பை, கடின உழைப்பு என்ற வில்லில் இருந்து சரியாக விடுகிற போது தான் வெற்றியை பெற முடியும்.

    Next Story
    ×