search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் குழந்தைகளை எப்படி அணுகுவார்கள்?
    X

    பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் குழந்தைகளை எப்படி அணுகுவார்கள்?

    பெற்றோரின் அருகாமைக்கு ஏங்கும் குழந்தைகளை அடையாளங்கண்டு, அவைகளோடு நெருங்கி பாசப்பிணைப்பை உருவாக்குவதுபோல் நடிப்பார்கள்.
    “நண்பர்கள் வட்டம் இல்லாமல் தனிமையில் விளையாடும் குழந்தைகள், பெற்றோர்களின் அரவணைப்பு முழுமையாக கிடைக்காமல் தனிமையில் வளரும் குழந்தைகள், தனியாக இருக்கும் சிறுவர், சிறுமியர்கள் மீது அவர்கள் தனிக்கவனம் செலுத்துவார்கள். தனியாக விளையாடும் குழந்தையின் ஏக்கத்தை அறிந்து, அதோடு விளையாடி நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

    அந்த நபர்கள் காட்டும் பரிவில் அந்த குழந்தை உருகிப்போய்விடும். பெற்றோரின் அருகாமைக்கு ஏங்கும் குழந்தைகளை அடையாளங்கண்டு, அவைகளோடு நெருங்கி பாசப்பிணைப்பை உருவாக்குவதுபோல் நடிப்பார்கள். இப்படிப்பட்ட நபர்கள் முதலில் ஒரு குழந்தையை அடையாளங்காண்பார்கள். பின்பு அதன் அருகில் சென்று எதேச்சையாக தொடுவது, தோள்மீது கைபோடுவது, கைகளை உரசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். தவறான நோக்கம் எதுவுமின்றி, இயல்பாக இது நடப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள்.

    பெற்றோர்களிடம் குழந்தைகள் எதையெல்லாம் விரும்பி கேட் கிறார்கள்? அதில் எதையெல்லாம் வாங்கி கொடுக்க மறுக் கிறார்கள்? என்பதை தெரிந்து கொண்டு அவைகளை வாங்கிக்கொடுத்து குழந்தைகளை தன்பக்கம் ஈர்க்க முயற்சிப்பார்கள். ‘தான் வாங்கி கொடுப்பதை பெற்றோரிடம் சொல்லாதே. சொன்னால் அவர்கள் உன்னை திட்டுவார்கள்’ என கூறி, ரகசியத்தை பாதுகாக்க கட்டாயப்படுத்துவார்கள். பின்பு தனது பாலியல் வன்முறைகளை மெல்ல மெல்ல பிரயோகிப்பார்கள். அதைப் பற்றியும் பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்பார்கள்.

    ஒருகட்டத்தில் குழந்தைகளை மிரட்டி பணியவைக்கவும் செய்வார்கள். பிஞ்சுகள் இத்தகைய நஞ்சு மனிதர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாக்கவேண்டும். குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானால், அந்த பாதிப்பு அவர்கள் பெரிய பெண்ணாகும்போதும் தொடரும். அதனால் பெற்றோர் இதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களும் பெருமளவு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும்”
    Next Story
    ×