search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தீபாவளியும் குழந்தைகள் பாதுகாப்பும்
    X

    தீபாவளியும் குழந்தைகள் பாதுகாப்பும்

    தீபாவளி கொண்டாட்டத்தில் போது குழந்தைகளின் பாதுகாப்பின் மேல் எப்போதும் பெரியவர்களுக்கு ஒரு கண் இருக்க வேண்டும் என்பதும் அவசிமானது.
    கொண்டாட்டம், குதூகலம், கலாட்டா என்று தீபாவளியை குழந்தைகளுடன் பெரியவர்களும் சேர்ந்து கொண்டாடுவது சந்தோஷமே. ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பின் மேல் எப்போதும் பெரியவர்களுக்கு ஒரு கண் இருக்க வேண்டும் என்பதும் அவசியமே.

    பட்டாசு வெடிக்கும் போது கவனிக்க வேண்டியவை :

    நல்ல ப்ராண்ட் பட்டாசுகளையே பார்த்து வாங்க வேண்டும். சின்ன குழந்தைகள் இருந்தால் அவர்களின் கைகளில் கிடைக்காதபடி பாதுகாப்பாய் பட்டாசுகளை, வெடிக்கும் வரை, வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது காட்டன் ஆடைகளையே குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும். காலில் கண்டிப்பாக செருப்பு அணியச் செய்ய வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை கண்காணித்துக்கொண்டேயிருக்க வேண்டும். நல்ல விசாலமான, வெளியிடங்களிலேயே பட்டாசுகளை வெடிக்கச்செய்ய வேண்டும். ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் மற்றும் மண்ணை தீப்பிடித்தால் உபயோகிக்க என்று வைத்திருக்க வேண்டும்.

    தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்யலாம் :

    தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக சுத்தமான தண்ணீரில் காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். லேசாக தண்ணீரை ஒற்றி எடுத்துவிட்டு தீக்காயத்திற்கான க்ரீமை மேலே தடவி விடவேண்டும். தீக்காயத்தின் மேல கொப்புளம் ஏற்பட்டால் அதை உடைக்காமல் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். காயம் ஆற ஆற அந்த கொப்புளத்தின் உள் இருக்கும் நீர் வற்றி, மேல் தோல் உதிர்ந்து விடும்.

    பட்டாசு புகையினால் கண் எரிச்சல் :

    பட்டாசின் சிறு துணுக்குகள் கண்களில் படுவதோ, பட்டாசு புகையினால் கண் சிவந்து விடுதல், கண்ணில் நீர் வடிதல், எரிச்சல் போன்றவை ஏற்படலாம். கண்களை உடனடியாக சுத்தமான நீரினால் நன்கு கழுவ வேண்டும். கண்களில் எரிச்சல் போக்கக்கூடிய சொட்டு மருந்தை போடவேண்டும். உறுத்தலோ, நீர் வடிதலோ தொடர்ந்து இருந்தால், கண் மருத்துவரிடம் உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.

    வெடிச்சத்தத்திலிருந்து பாதுகாப்பு :

    பிறந்த குழந்தை முதல் ஓராண்டிற்குள் இருக்கும் குழந்தைகள் வரை வெடிச்சத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும். கீழே படுக்காமல் அழுதுக்கொண்டே இருப்பது, தூக்கியே வைத்திருக்கச்சொல்வது, சாப்பிட மறுப்பது போன்ற அறிகுறிகளை அக்குழந்தைகள் வெளிப்படுத்தும். பெரியவர்களும் குறிப்பாக வயதானவர்களிடம் எரிச்சல், பதட்டம், தலைவலி போன்ற பிரச்சனைகள் இதனால் தோன்றலாம். எனவே வெடிச்சத்தம் கேட்கும் இடத்திலிருந்து இவர்களை அப்புறப்படுத்துவது நல்லது.

    சுவாசக்கோளாறுகளும் ஏற்படலாம் :

    வீசிங் உள்ள குழந்தைகளுக்கு தீபாவளி நேரத்தில் பட்டாசு புகையினால் இப்பிரச்சினை அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. இதைத்தவிர குழந்தைகளுக்கு இருமல், ஜலதோஷம் போன்றவையும் தோன்றலாம். ஒவ்வாமை உள்ள குழந்தைகளை பட்டாசு புகை அதிகம் உள்ள இடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது அவசியம். வீசிங்கிற்கான இன்ஹேலர் உபயோகிப்பதாய் இருந்தால் அதில் மருந்து உள்ளதா என்பதை முன்கூட்டி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வயிற்று உபாதைகளில் இருந்து பாதுகாக்க :

    அதிகமான இனிப்புகள், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது, விளையாட்டு சுவாரசியத்தில் சாப்பிடாமல் இருப்பது, வெளியிடங்களில் சாப்பிடுவது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு பத்து உபாதைகள் ஏற்படலாம். வயிற்று வலி, உப்புசப், வயிற்றுப்போக்கு, வாந்தி, நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் இதனால் ஏற்படலாம்.

    சுக்கு, இஞ்சி காபி, சீரகம் மற்றும் சோம்பு கஷாயம், தீபாவளி லேகியம் போன்றவைகளை முன்கூட்டியே குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது, நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை கொடுப்பதும் அவசியம். வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 1 ஸ்பூன் சர்க்கரையும் 1 சிட்டிகை உப்பும் கலந்த கரைசலை உடனடியாக கொடுக்க வேண்டும். முன்கூட்டியே உங்கள் குழந்தையை பரிசோதிக்கும் மருத்துவரிடம் உணவு நச்சு, வயிற்றுபோக்கு மற்றும் வாந்திக்கான முதலுதவி மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்வதும் நல்லது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் இனிமையான தீபாவளி குழந்தைகள் மட்டுமின்றி நமக்கும் வெகுவாக தித்திக்கும்.
    Next Story
    ×