search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    வளர்பருவம்:

    இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

    ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

     வைட்டமின் சி:

    குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.

     இரும்புச்சத்து:

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.

    வைட்டமின் டி:

    குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.

     புரதம்:

    வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.

    ஆரோக்கியமான கொழுப்பு:

    சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

    • மூளையில் உள்ள முக்கியமான பகுதி `ஹிப்போகாம்பஸ்’.
    • சில பயிற்சிகளாலும் மூளையின் செயல்பாடுகளை தூண்டலாம்.
     நினைவாற்றல் மற்றும் மூளைத்திறனை அதிகரிக்கும் பயிற்சி முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

    மூளையின் செயல்திறனை மேம்படுத்த, பல்வேறு நுட்பங்கள் உள்ளன. இதனை முறையாக வழக்கமான முறையில் செயல்படுத்தினால் அறிவுத்திறனை முன்னேறச் செய்யலாம்.

     `மூளைத்திறன் குறையாமல் இருக்கவும், மேம்படவும் வாழ்நாள் முழுவதும் எதையாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்' என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இத்தகைய கற்கும் பயிற்சி மூலம் நமது நியாபகசக்தி அதிகரிக்கும். மேலும் குறிப்பிட்ட பயிற்சிகளினால், மூளையில் புதிய செல்கள் உருவாகும். இதனால் அறிவுத்திறன் மேம்படும், மூளை நரம்பியல் மண்டலத்தில் உள்ள `நியூரான்கள்' ஆரோக்கியமாக இருக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மூளையில் உள்ள முக்கியமான பகுதி `ஹிப்போகாம்பஸ்'. தமிழில் இதை `மூளை பின்புற மேடு' என்பார்கள். இதுதான் நமது ஞாபகசக்தி மற்றும் கற்கும் திறனை மேம்படுத்தும் பகுதியாகும். நாம் எப்போது கற்பதை நிறுத்த ஆரம்பிக்கின்றோமோ, அப்போது மூளையின் இந்த பகுதிகள் சுருங்க ஆரம்பித்துவிடுகின்றன.

    சில பயிற்சிகளாலும் மூளையின் செயல்பாடுகளை தூண்டலாம். அத்தகைய பயிற்சிகளில் ஒன்று `நிமானிக்'. இந்த பெயர் நமக்கு புதிதாக இருந்தாலும், நமக்கு பழக்கமானதுதான். இருகைகளின் விரல் இணைப்பு எலும்பு பகுதியின் ஏற்ற இறக்கங்களை கொண்டு 12 மாதத்திற்கான நாட்களை கணக்கிடுவது போன்ற சுலப பயிற்சி இது. அதேபோல ஒரு வாக்கியத்தை அடிப்படையாக கொண்டு சிக்கலான விஷயங்களை நினைவுப்படுத்தும் பயிற்சி இது.

     இதுபோல `நிமானிக்' முறையின் இன்னொரு பயிற்சி `அக்ராஸ்டிக்'. அகர வரிசைப்படுத்தும் முறையில் எழுத்துக்களின் வரிசைகளை நினைவில் வைத்துக்கொண்டு ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் முறைப்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு... 'My veryEducated Mother Just Served Us Noodles' என்ற வாக்கியத்தை கூறலாம். இந்த வாக்கிய வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை நினைவில் கொண்டு, சூரிய குடும்பத்தின் கோள்களை (Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune.) வரிசைப் படுத்தும் நினைவு பயிற்சி இது.

    இந்த நினைவூட்டும் பயிற்சி மூளையில் தகவல்களை பதிவு செய்யவும், பதிவு செய்துள்ள தகவல்களை மீட்டு எடுக்கவும் உதவுகிறது. மிகக் கடினமான விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள இந்த பயிற்சி உதவுகிறது. நாம் படித்தது, கேட்டது போன்றவற்றை மறந்துபோகாமல் நியாபகத்தில் வைக்க எளியமுறையில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் படங்கள், வாக்கியங்கள் மற்றும் சில சாதாரண வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

    அடுத்தது, `மைண்ட் பேலஸ் மெமரி' என்ற பயிற்சி. இது மிகவும் சக்தி வாய்ந்த பயிற்சி. இதில் மூளையின் செயல்திறனை, வார்த்தைகள் மற்றும் படங்களைக் கொண்டு இணைப்பு ஏற்படுத்தி, நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்வதாகும். இப்பயிற்சியின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்றுமொழி வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

     மூளைக்கு சில புதிய அனுபவ ஆற்றல்களைக் கொடுப்பதினாலும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். `நியூரோபிக் காக்னடிவ் டிரைய்னிங்' என்னும் நரம்பியல் அறிவாற்றல் பயிற்சியில் மூளையைப் பயன்படுத்தி செய்யும் பயிற்சி முறைகள் உள்ளன. இதில் நமது உடல் மற்றும் உணர்வுகள் மூலம் மூளையின் பயன்பாடு மேம்படுத்தப்படுகிறது. உதாரணமாக, வலதுகைப் பழக்கம் உள்ளவர் தனது இடதுகையால் செயல்களைச் செய்யப் பழகவேண்டும். இதனால் மூளையின் பல பகுதிகள் இணைந்து தூண்டப்படும். இது நமது நரம்பணுக்களை வலிமையாக்கி அவை வயதாகாமல் இருக்க எதிர்ப்புசக்தியைத் தரும்.

    புதிர்கள், குறுக்கெழுத்துப்போட்டி, வரிசைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மூளையின் திறனை அதிகரிக்கும். மூளை சார்ந்த விளையாட்டுகள் மூலம் மூளையின் நிர்வாக செயல்பாடு, வேலை நினைவாற்றல், செயலாற்றும் வேகம் போன்றவை அதிகரிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    கணினிகள் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்கள் நம்முடைய பல வேலைகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்து விட்டன. இவை நமது மூளையின் செயல்பாடுகளை குறைத்து மனிதனை சோம்பேறி ஆக்கிவிட்டன. எனவே, நமது மூளைக்கு சவால் விடும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கணிதம் சார்ந்த மற்றும் மதிப்பீடு தரக்கூடிய பயிற்சி களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். எந்த நிலையிலும் உடலையும், மூளையையும் சோம்பேறி ஆக்கிவிடக்கூடாது. இதுபோன்ற பயிற்சிகள் மூலம் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    ஒரே நேரத்தில் இரு கைகளையும் இருவேறு வேலைகளில் ஈடுபடுத்துவது மூளைக்கு சிறப்பான பயிற்சியாக அமையும். ஒரே சமயத்தில் ஒரு கையில் சதுரம் வரையவும், மற்றொரு கையில் முக்கோணம் வரையவும் உங்கள் குழந்தைக்கு பயிற்சி கொடுத்தால், அது குழந்தையின் வலது-இடது மூளையை ஒரே நேரத்தில் இயக்கும் பயிற்சியாக அமையும். கூடவே, மூளையின் செயல்திறனும் அதிகரிக்கும்.

    ஊட்டச்சத்து

    குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச்சத்து அவசியம். சிறு வயதில் இருந்தே சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுப்பது அவர்களது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பாக்கெட்டுகள், பதப்படுத்திய உணவுகள், துரித உணவுகள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். கடல் உணவு, கீரைகள், நட்ஸ் மற்றும் விதைகள், முழு தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். குறிப்பாக அக்ரூட் பருப்புகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

    ஒமேகா கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் மூளையின் ஆரோக்கியம் பலப்படுத்தப்படும். மூளையின் எடையில் 8 சதவீதம் ஒமேகா கொழுப்பு அமிலம் இருப்பதாகவும், இந்த கொழுப்பு அமிலம் மூளையின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் பாதுகாப்பதில் திறன் வாய்ந்ததாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    • இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
    • வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம்.

    இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்...?

    இடதுகை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

    இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

    வலதுகை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடதுகை பழக்கமுள்ளவர்கள்தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில்கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.

    அதேபோல வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

    அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள்தான்.

    இடதுகை பழக்கம் உள்ளவர்களது மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குகிறார்கள். இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வைத் திறன் இருக்கிறது.

     இடது கை பழக்கம் உண்டாவது ஏன்?

    ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவர் இடது கை பழக்கம் உடையவர் என தீர்மானிக்கப்படுவதாகவும், அது நம் உயிரியலில் கலந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தகவல் கூறிகிறது. நாம் அதிகமாக பயன்படுத்தும் கைகளுக்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நம் முதுகுத்தண்டில் உள்ள சில தனித்துவமிக்க மரபணு செயல்பாடுதான் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    இதற்கு முன்பு வரை, மூளையின் எந்த பக்கம் அதிக செயல்பாட்டோடு இருக்கிறதோ, அதை பொறுத்துதான் ஒரு நபர் வலது கை பழக்கம் உள்ளவரா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா என்பது தீர்மானிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது வந்துள்ள ஆய்வின் முடிவு இந்த கருத்தை தகர்த்துள்ளது. கர்ப்பமடைந்து 8 முதல் 12 வாரத்திற்கு இடைபட்ட காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு முதுகுத்தண்டு வளர ஆரம்பிக்கும். இந்த ஆய்விற்காக கருவில் உள்ள குழந்தைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆய்வாளர்கள்.

    நமது அசைசவுகளை மூளை கட்டுப்படுத்துவதற்கு முன்பே இந்த நடவடிக்கைகள் தொடங்கிவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. நமது முதுகுத்தண்டில் உள்ள பகுதிகளே நம்முடைய கைகள், கால்கள் மற்றும் பாதங்களுக்கு சிக்னல் கொடுக்கிறது. நாம் வலது கையில் எழுதப் போகிறோமா அல்லது இடது கையிலா என்பதை இந்த செயல்பாடுதான் தீர்மானிக்கிறது.

    தாயின் கருவிற்குள் குழந்தை இருக்கும் போதே, வெளிப்புற காரணிகளின் தூண்டுதல் இதற்கு காரணமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். நொதிகள் எப்படி இயங்க வேண்டும் என மாற்றக்கூடிய ஏதோவொரு விஷயம் குழந்தையை சுற்றி இருப்பதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நொதிகளின் செயல்பாட்டையே மரபணுக்களும் பின்பற்ற தொடங்குகிறது.

    முதுகுத்தண்டில் தனித்துவமான மரபணு செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். எதிர்காலத்தில் ஒரு குழந்தை இடது கை பழக்கமா அல்லது வலது கை பழக்கமா என்பதை இவைதான் தீர்மாணிக்கிறது.

    மேலும், கருவில் உள்ள குழந்தை பெருவிரலை வாயில் வைத்து சப்பும் பழக்கத்திற்கும், அக்குழந்தை இடது கை அல்லது வலது கை பழக்கம் உடையதா என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதற்காக கருவில் இருக்கும் 274 குழந்தைகளை ஆய்வு செய்த போது, 13-வது வாரத்தில் 90 சதவீதம் கருவில் உள்ள குழந்தைகள் தங்களது வலது கை பெரு விரலை வாயில் வைக்கின்றன.

    அதேசமயத்தில் வெறும் 10 சதவீதம் கருக்களே தங்களது இடது கை விரலை வாயில் வைக்கின்றன. இதே குழந்தைகள் பிறந்ததும், கருவில் இருக்கும் போது வலது கையை பயன்படுத்திய 60 குழந்தைகள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடது கையை பயன்படுத்திய 15 குழந்தைகளில் ஐந்து பேர் தற்போது வலது கை பழக்கம் உடையவர்களாகவும் பத்து பேர் இடது கை பழக்கம் உடையவர்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    • மூளை வளர்ச்சியை தூண்ட சில விளையாட்டுகள் உதவும்.
    • விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் விளையாட்டுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவத்தோடு பிறக்கிறார்கள். சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும்.

    அந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவது, சுயக்கட்டுப்பாட்டை கற்பிப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்ப்பது, தகவல் தொடர்பை மேம்படுத்த உதவி செய்வது போன்ற செயல்பாடுகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

    அதன்மூலம் குழந்தைகள் எதையும் அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்து பார்ப்பார்கள். அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்திக் கொள்வார்கள். இதற்கு மூளை வளர்ச்சியை தூண்டும் சில விளையாட்டுகள் உதவும்.

     புதிர் விளையாட்டுகள்:

    பலதரப்பட்ட வயதினரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகள், பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களின் கவனத்தை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இவ்வகை விளையாட்டுகள் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் பகுத்தறிவும், சிக்கல்களை அணுகும் தன்மையும் மேம்படும்.

     வியூக விளையாட்டுகள்:

    பகடைக்காய், ஏணியும் பாம்பும் போன்ற வியூக விளையாட்டுகள், குழந்தைகளுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கின்றன. இத்தகைய விளையாட்டுகள் மூலம் அவர்கள் திட்டங்களை உருவாக்கவும், அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள முடியும். வியூக விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் மாதிரியாக திகழ்பவையாகும்.

     சுடோகு:

    எண் புதிர் விளையாட்டான சுடோகு, குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும். எண்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம் சாத்தியக்கூறுகளை எடை போடுவதற்கும், அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சுடோகுவின் மூலம் கணிதம் மற்றும் எண்ணியல் சார்ந்த அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

     வார்த்தை விளையாட்டுகள்:

    குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் தேடல்கள் என பல வகையான வார்த்தை விளையாட்டுகள் உள்ளன. இவை குழந்தைகளின் மொழித்திறனையும், மொழியியல் நுண்ணறிவையும் மேம்படுத்தும். இவ்வகை விளையாட்டுகளின் மூலம் பல்வேறு புதிய சொற்களை தெரிந்துகொள்ள முடியும்.

     சதுரங்கம்:

    உலக அளவில் மூளை வளர்ச்சியைத்தூண்டும் விளையாட்டுகளின் பட்டியலில், இது முதன்மை இடத்தில் உள்ளது. இருவர் மட்டுமே பங்குபெறும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் விழிப்புணர்வோடு திட்டமிட்டு விளையாடுவது முக்கியமானது. இதில் எதிரிகளின் நகர்வுகளை கணிக்க வேண்டும்.

    நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிரியின் அசைவு என்னவாக இருக்கும் என்பதை கணித்து சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

     இசை:

    சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்வேறு வகையான இசைகளை அறிமுகப்படுத்துங்கள். இசைக்கு, நினைவாற்றலை வளமாக்கும் ஆற்றல் உண்டு. அதேபோல, ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள். இந்த பயிற்சிகூட கற்றல் திறனை மேம்படுத்தவும், படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறவும் உதவும். தெய்வீக பாடல்களை அவ்வப்போது வீட்டில் ஒலிக்க செய்து அதனை குழந்தை கேட்குமாறு செய்யலாம்.

     5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு...

    ஒன்றரை வயது தொடங்கி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பில்டிங் பிளாக் விளையாட்டுகள் சிறப்பானதாக இருக்கும். அதேபோல, செம்மையான இயக்க திறன்களை (பைன் மோட்டார் ஸ்கில்ஸ்) வளர்க்க, வண்ணம் தீட்டுதல், வண்ணங்களை கண்டறிதல் போன்ற பயிற்சிகள் கை கொடுக்கும்.

    வட்டம், சதுரம் போன்ற எல்லைகளுக்குள் வண்ணம் தீட்ட பழகுவதால், புத்திக்கூர்மை அதிகமாகும். மேலும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுத வைப்பது, ஒரே நேரத்தில் இரு கைகளுக்கும் இருவேறு வேலை கொடுப்பது போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடுத்தலாம். இது அவர்களது வலது-இடது மூளைகளை தூண்டி, அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற உதவும்.

    • சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது.
    • சிறுவர்கள் அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள்.

    இப்போதெல்லாம் பாடசாலையில் பயிலும் மாணவ-மாணவிகளும், உயர்கல்வி கற்கும் மாணவ-மாணவிகளும் திடீரென்று அவர்களது நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படுவதால் அவர்களுடைய பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள்.

     போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் இணையதள வசதி மற்றும் இணைய சூழல் அதிகரித்துவிட்ட தருணத்தில் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டல் அதிகரித்திருப்பதால் இது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மனநிலையை பாதிக்கிறது என்றும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றோர்களும், இளம் சிறுவர், சிறுமிகளும் பெறவில்லை என்றும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய சூழலில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் அவசியம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. இணைய வழி தொழில்நுட்பத்தால் உலகம் சிறியதாகி விட்டாலும், பல புதிய வடிவிலான மனநல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இணையதள வசதி அதிகரித்துவிட்டதாலும், பிறந்து மூன்று மாதமான பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரின் கைகளிலும் செல்ஃபோன் எனப்படும் கைபேசி இருப்பதாலும் இத்தகைய உளவியல் பிரச்சினைகள் அதிகரித்திருக்கிறது.

    பாடசாலையில் பயிலும் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலையில் இருந்து இல்லம் திரும்பியவுடன் சீரூடையைக் கூட களையாமல் உடனடியாக செல்ஃபோனை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, இணையத்தில் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்குகிறார்கள் அல்லது ஏதேனும் ஒரு இணையதள பக்கத்தை அல்லது சமூக வலைத்தள பக்கத்தை இயக்கி தன்னைப் பற்றிய பிம்பத்தையும், தன்னை பற்றி மற்றவர்களின் விமர்சனத்தையும் ஆர்வத்துடன் காணத் தொடங்குகிறார்கள்.

    தற்போது சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது. இணைய வழி மிரட்டல் என்பது மற்றவர்களை துன்புறுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டு, அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது.

    சைபர் புல்லிங் என்பது தற்போதைய சூழலில் பொதுவானதாகிவிட்டது. யாரையும் எந்த ஒரு சூழலையும் துணிவுடன் கையாண்டு அவர்களை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். இதனுடைய தீவிரத் தன்மை தெரியாமல் ஏதோ ஒரு உந்துதலில் இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதனால் எதிர்மறை விமர்சனத்துக்கு உள்ளாகும்

    நபர்கள் மனதளவில் சீர்குலைந்து சோர்வடைகிறார்கள். குறிப்பாக, உருவ கேலி, கடுமையான வார்த்தைகளுடன் கூடிய விமர்சனத்தை குறிப்பிடலாம்.

    தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, இது தவறு என்றாலும், இளம் தலைமுறையினர் பலரும் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். முதலில் சைபர் புல்லிங் என்பதன் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது முற்றிலும் மற்றவர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது பக்கவிளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும், இது ஒருவரின் உள நலத்தையும், மன அமைதியையும் சிதைக்கிறது. அவர்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இதனால் சமூகத்துடனும் மற்றவர்களுடனும் இயல்பாக பழகுவதில் தடையும் இடைவெளியும் உண்டாகிறது. இது அவர்களின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி, அவர்களை முற்றிலும் முடக்குகிறது.

    எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களின் அன்றாட பழக்கவழக்க நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடான நடவடிக்கைகளை துல்லியமாக அவதானித்து, அவர்களிடம் இது தொடர்பாக எச்சரிக்கைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    மேலும், உங்கள் பிள்ளைகள் இணைய வழி பயன்பாட்டை மேற்கொள்ளும்போது அவரைப் பற்றிய சுய விபரங்களையும், தனிப்பட்ட பிரத்தியேக தகவல்களையும் ஆன்லைனில் பகிரக்கூடாது என கற்பிக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு உங்கள் வீட்டு முகவரி, உங்களது செல்ஃபோன் எண் போன்றவற்றை பதிவிடக்கூடாது. இது இணையவழி மிரட்டல்காரர்களுக்கு வழிவகுத்துவிடும்.

    பிறகு உங்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட விஷயங்களை பற்றியும் தனிப்பட்ட விடயங்களை பற்றியும் இணையவழியில் விவாதிக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், இவை கூட இணையவழி மிரட்டல்காரர்களுக்கு ஆயுதமாக மாறக்கூடும்.

    அதே தருணத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் உங்களுடைய கடவுச்சொல்லையும் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட கணக்கு விபரங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

    அதனைத் தொடர்ந்து இணையத்தில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்தும், கருத்துகள் குறித்தும் எவை நல்லவை? எவை தவறானவை? எவை தவறான உள்நோக்கத்தை கொண்டவை? என்று விஷயத்தையும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

    • இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன.
    • தொடுகை கல்வியை சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. எந்த வயது குழந்தைகளையும் பலாத்காரம் செய்து, அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்க, பலர் சமூகத்தில் சுற்றித் திரிகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. எனவே, இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக, பாலியல் கல்வியை குறிப்பாக, தொடுகை கல்வியை நாம் சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பாலர் வகுப்பு என்கிற போது, சுமார் ஏழு, எட்டு வயதில் இருந்தே நாம் இவற்றை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம். தெளிவாக சொல்வதானால், ஒரு பிள்ளைக்கு எப்போது சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்போது இருந்தே பாலியல் கல்வியை சொல்லிக்கொடுக்கலாம்.

    பாலியல் கல்வி என்பது அறுவறுக்க தக்கதல்ல... உடல் உறுப்புகளை இனங்காட்டுவது, உறுப்புகளின் முக்கியத்துவங்களை பற்றி எடுத்துரைப்பது, தொடுகை பற்றி கற்பிப்பது முதலிய அம்சங்கள் இதில் உள்ளன.

    நாம் கற்பிக்கும் பாலியல் கல்வியை குழந்தைகளால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியுமா, அதற்கு அவர்களின் மனநிலை பக்குவப்பட்டிருக்குமா என்கிற சந்தேகங்கள் பலர் மத்தியில் காணப்படுகின்றன.

    தொடுகை பற்றி அறியாத, கேள்விப்படாத ஒரு குழந்தையை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனில், தனக்கு நேர்வது தவறு என்பதை அந்த குழந்தையால் உணர முடியாது. எனவே குழந்தைகளுக்கு புரியும் அளவுக்கு நாம் தொடுகை குறித்து கற்பிக்க வேண்டும்.

    சில குழந்தைகளுக்கு வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி காணப்பட்டாலும், மனதளவில், குழந்தைத்தனம் மிக்கவர்களாகவே இருப்பர். அந்த குழந்தைகள் நாம் சொல்லும் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாகவே கருதுவார்கள். அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள மாட்டார்கள்.

    ஆகவே, பெற்றோர் அல்லது ஆசிரியர் சொல்வதை கேட்டு, புரிந்துகொள்ளும் இயல்புநிலைக்கு குழந்தைகள் வரவேண்டும். அப்போது தான், நாம் சொல்லும் எதையும் குழந்தைகளால் சிந்தித்து செயல்பட முடியும்.

    மேலும், இன்றைய புள்ளிவிவரப்படி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிறுவர்களில் அதிகமானோர் மனநலம் குன்றியவர்களும், மாற்றுத் திறனாளிகளுமே என்பது தெரியவந்துள்ளது. புத்தி சுவாதீனம் உள்ள குழந்தைகளுக்கே பாலியல் கல்வியை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கிறதென்றால், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அதை எப்படி நம்மால் சொல்லிக்கொடுக்க முடியும்? இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.

    ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் கல்வி முக்கியம்

    பாலியல் கல்வி, குறிப்பாக தொடுகை என்பது அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒன்றாகும். பொதுவாக, அனைவருமே பாலியல் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகின்றபோது பெண் பிள்ளைகளின் மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    சிறுவர் உலகத்தில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கும் பாலியல் கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கும் தொடுகை பற்றி கற்பிக்கவேண்டியது அவசியமாகின்றது. ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு, தொடுகை பற்றி கற்பிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு முறையான தொடுதல் எது?, முறையற்ற தொடுதல் எது...? என்பது பற்றி சொல்லிக்கொடுத்தால் தான் அவர்களுக்கு நேரும் ஆபத்துக்களை தடுக்க முடியும்.

    • சில விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • குழந்தைகளின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.

    கார் வைத்திருப்போர் குழந்தைகளுக்கான இருக்கையை தொடர்ந்து உபயோகிக்க நேர்ந்தால் இருக்கை சரிவர பொருத்தப்பட்டு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இவ்விதம் பொருத்தவில்லை எனில் குழந்தைகளின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக முதுகுத்தண்டுவடம் பாதிப்பு சிறு குழந்தையாக இருக்கும்போதே ஏற்படுவதற்கு கார்களின் இருக்கை முக்கியக் காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

    அதிலும் சில குழந்தைகளுக்கு மிகவும் மோசமான உடல் பாதிப்பு ஏற்பட காரணமாகிறது. குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையில் இருந்து தாயையும் சேயையும் வீட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவர். ஆனால் இந்த விஷயத்தில் அறிவுப்பூர்வமாக சில விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக காரின் இருக்கைகள் மிகவும் கடினமானவையாக உள்ளன.

    இந்த குறையை சரிசெய்ய தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகளை வைத்து எடுத்துச் செல்வதற்கான இருக்கையை காரில் பொருத்தித்தர ரோபோ எந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை கன கச்சிதமாக எவ்வித மனிதத் தவறும் இன்றி பொருத்துகின்றன. இதன் மூலம் குழந்தைக்கு எவ்வித உடல் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    இந்தியாவில் உள்ள கார்களில் குழந்தைகளுக்கான இருக்கைகளை சரிவரப் பொருத்தும் நுட்பம் பெரும்பாலான நிறுவனங்களில் வரவில்லை. ஆனால், விரைவில் வரலாம். இருந்தாலும், இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

     குழந்தைகளுக்கான இருக்கை என்பது கை குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமாக, கூடுதலாக வழங்கப்படும் இருக்கை ஆகும். கூடுதல் குஷின்களுடன் வழங்கப்படும் இந்த பிரத்யேக இருக்கை அமைப்பானது முன் இருக்கையின் பின்னால் பின் இருக்கைக்கு நேரெதிராக வழங்கப்படுகிறது.

    விபத்து ஏற்பட்டாலும், சாலை பயணம் முழுவதும் உங்கள் குழந்தை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை இது உறுதி செய்கிறது. இந்த இருக்கைகள் சீட்பெல்ட்களை பயன்படுத்தி இருக்கையில் கட்டப்படுகின்றன. குழந்தைகள் இருக்கைகள் விற்பனைக்கு கிடைகிறது. வேண்டுபவர்கள் தங்களது காருக்கு ஏற்ப வாங்கி பொருத்தி கொள்ளலாம். தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தை இருக்கைக்கையை பொருத்தி கொள்வதற்கான கொக்கியை வழங்குகிறது.

     அதுமட்டுமின்றி, குழந்தைகள் இருக்கைகள் பொருத்தப்படும் முன்பும், அதற்கு பின்னரும் இருக்கைகளுக்கு மத்திய பகுதி எந்தவொரு காரிலும் விபத்தின்போது குறைவாகவே பாதிப்பை சந்திப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. புள்ளிவிவரப்படி, இத்தகைய இருக்கைகள் விபத்துகளின்போது சுமார் 54 சதவீதம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான அபாயங்களை குறைப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
    • தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

    இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

     மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

     1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.

    2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.

    3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.

    4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.

    5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

     6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.

    7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.

    8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

     இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.

    பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.

    • படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
    • குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும்.

    இது தேர்வுக்கான காலகட்டம். மற்ற சமயங்களை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருசில பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்ற வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறன் மேம்படுவதோடு வாழ்நாள் மூலம் கற்றல் மீதான நாட்டத்தை மெருகூட்ட செய்யலாம். அதற்கான வழிமுறைகள்...

    தேர்வு சமயங்களை தவிர்த்து தினமும் குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்த அனுமதிக்கக்கூடாது. `இது படிப்புக்கான நேரம்' என்பது மனதில் ஆழமாக பதிய வேண்டும். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து படிப்பதன் மூலம் கற்றலை வலுப்படுத்தும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்வார்கள்.

     அமைதியான இடம்

    கவனச்சிதறல்கள் மாணவர்களை தடம் புரளச் செய்யும். எனவே இடையூறு ஏதும் இல்லாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய அமைதியான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அமைதியான சூழல் கவனத்தை ஒன்றிணைக்கும் திறனை வலுப்படுத்தும். புரிதலை மேம்படுத்தும்.

    கற்றல் நுட்பங்கள்

    எந்த பாடத்தையும் மனப்பாடம் செய்து படிக்கக்கூடாது. ஒரு பாடத்தை படிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை குறிப்பெடுக்க பழக வேண்டும். பின்பு அந்த குறிப்புகளில் முக்கியமானவற்றை மட்டும் சுருக்கி எழுத வேண்டும்.

    அதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆசிரியரிடமோ, சக மாணவர்களிடமோ கேள்வி எழுப்பி தெளிவு பெற வேண்டும். இத்தகைய செயல்முறை கற்றல் நுட்பங்களை பின்பற்றுவது பாடம் மீது ஆழமான புரிதலை ஏற்படுத்தும். சிந்தனை திறனை வளர்க்கும். திறம்பட தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும்.

    சிறிது நேர ஓய்வு

    தினமும் குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காக ஒதுக்கி, தொடர்ந்து படிக்கும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். படிப்புக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மீண்டும் படிப்பை தொடர்வது மன ரீதியாக புத்துணர்ச்சி பெற உதவும். படிப்பின் மீது முழு கவனத்தையும் திருப்புவதற்கு வித்திடும்.

    ஊட்டச்சத்து உணவு

    நாள் முழுவதும் இடை இடையே போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும். படிப்புக்கு இடையே சத்தான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக அமைய வேண்டும். அவை மூளைக்கு ஊட்டமளித்து அதன் செயல்திறனை மேம்படுத்த உதவும். அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும்.

    போதுமான தூக்கம்

    நினைவகத்தை ஒருங்கிணைப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. மாணவர்கள் தினமும் போதுமான நேரம் தூங்கி எழ வேண்டும். நன்கு ஓய்வு எடுக்கும் மனம் கற்றல் விஷயங்களை மறக்காமல் நினைவில் தக்கவைத்துக்கொள்ளும்.

    பாராட்டு

    நேர்மறை எண்ணங்கள் ஊக்கத்தையும், விடாமுயற்சியையும் உருவாக்கும். எனவே பிள்ளைகளின் முயற்சிகளை அங்கீகரித்து கொண்டாடுங்கள். அவர்கள் படிப்பில் அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை சாதனையாக கருதி பாராட்டுங்கள்.

    யாரும் நிர்பந்திக்காமலேயே சுயமாக படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தெடுக்க அது உதவும். அவர்களாகவே குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்கு ஒதுக்கி விடுவார்கள். நன்றாக படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.

     பாடங்களை பிரித்தல்

    முழு ஆண்டுத்தேர்வுக்கு பாடப்புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பகுதிகளாக படித்து முடிப்பதை பெரிய பணியாக உணரலாம். அதில் கடினமான பகுதிகளை படிப்பது சிரமமானதாக, சவாலானதாக சில மாணவர்களுக்கு அமையலாம். ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து, அதில் எளிமையான பகுதிகளை முதலில் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    கடினமான பகுதிகளை அதிகாலை வேளையில் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படி தரம் பிரிப்பதன் மூலம் விருப்பமான பாடங்களை விரைவாக படித்து முடித்துவிட முடியும். அதனால் படிப்பது பெரும் சுமையாக தோன்றாது. இந்த அணுகுமுறை மன அழுத்தத்தையும் தவிர்க்க உதவும். தினமும் படிக்க தொடங்குவதற்கு முன்பு ஏற்கனவே படித்த பகுதிகளை மீண்டும் ஒருமுறை வாசிப்பது நினைவில் ஆழமாக பதிய உதவும். தேர்வை எளிமையாக எழுதுவதற்கு வழிவகுக்கும்.

    • இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட `என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், `லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர்.

    இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, `பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது.

    இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அச்சமின்றி தங்களை வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள்.
    • குழந்தைகளின் மகிழ்ச்சியிலும் வெற்றிகளிலும் கலந்து கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தையுடன் ஒரு வலுவான, வெளிப்படையான உறவை உருவாக்குவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களுக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பதும் அவசியம். எனவே உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த நண்பராக இருப்பது எப்படி.? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    உங்கள் குழந்தை உங்களிடம் அச்சமின்றி தங்களை வெளிப்படுத்தக்கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள். அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுங்கள், அவர்களின் மகிழ்ச்சியிலும் வெற்றிகளிலும் கலந்து கொள்ளுங்கள். ஆனால் சில நேரங்களில் வேலை உள்ளிட்ட பல காரணங்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளி உருவாகலாம்.

    ஆரம்பத்தில், உங்கள் குழந்தையின் கருத்துக்கள், உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளை பற்றி கூறும்போது முன் கூட்டியே நீ இப்படித்தான் செய்திருப்பாய் என்று கருத்து சொல்லாமல், அவர்கள் கூறுவதை கவனமாக கேளுங்கள்.

     பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை உறுதிசெய்ய வேண்டும். இது குழந்தை பெற்றோர் இடையே சிறந்த தொடர்பை வளர்க்கிறது, பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை அனுமதிக்கிறது.

    அன்பாகவும் அனுதாபமாகவும் இருப்பது நேர்மையான உரையாடலை ஊக்குவிக்கும். உங்கள் குழந்தைக்கு நம்பகமானவராக இருப்பதன் மூலமும், தொடர்ந்து உதவி வழங்குவதன் மூலமும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் பாதுகாவலராக இருக்க முயற்சியுங்கள், அவர்களுக்கு தேவைப்படும்போது உங்கள் ஆதரவையும் அக்கறையையும் தயங்காமல் காட்டுங்கள்.

    உண்மையான ஆர்வத்துடன் உங்கள் குழந்தையின் பொழுதுபோக்கு மற்றும் விருப்பமான செயல்களில் அவர்களுடன் ஈடுபடுங்கள். இது உங்கள் பிணைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் உணர்வுகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு தெரிவிக்கும். தேவைப்படும் போது வழிகாட்டுதலை வழங்கும் போது அவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு நம்பகமான நபராக குழந்தைகளுக்கு அவர்களின் உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும், நம்பிக்கை மற்றும் உணர்ச்சி நுண்ணறிவை வளர்ப்பதற்கும் ஒரு இடத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தை தவறு செய்தால், உடனடியாக ஆலோசனை வழங்காமல், அவர்கள் தரப்பு கருத்தை கூறும் போது பெற்றோர் கவனமாக கேட்க வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஒன்றாக இருக்கும் போது தரமான நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சிரித்துப் பேசி, கதைகளை பகிர்வதன் மூலம் நீடித்த நினைவுகளை உருவாக்குங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பராக இருப்பது என்பது அவர்களைப் பற்றி அறிந்திருப்பது, அவர்களின் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த ஒரு முயற்சியை மேற்கொள்வதையும் குறிக்கிறது. இது உறுதியான பெற்றோர்-குழந்தை உறவை உருவாக்குவதுடன், இந்த நட்பை வளர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆதரவாகவும் நம்பகமானதாகவும் இருக்கும் உறவுக்கான அடித்தளத்தையும் நீங்கள் அமைக்க முடியும்.

    உங்கள் குழந்தையின் சிறு முயற்சிகளை பாராட்டுவது, அவர்களின் வளர்ச்சி மனப்பான்மையை வளர்க்கிறது, விடாமுயற்சி மற்றும் வெற்றி மற்றும் தோல்விக்கான ஆரோக்கியமான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது. குழந்தைகள், குழந்தைகள் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் நடத்தைக்கு உடனடி எதிர்வினைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

    அதே நேரத்தில் உங்கள் குழந்தைக்கான உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை வழங்குங்கள். இது நெகிழ்ச்சியான மற்றும் செழிப்பான பெற்றோர்-குழந்தை உறவுக்கு அடித்தளமாக அமைகின்றன என்பதில் சந்தேகமில்லை.

    • குழந்தைகள் முதல் பருவ வயது குழந்தைகள் வரை காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர்.
    • காய்கறிகளில் சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

    பலவித வண்ணங்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பற்றிய விளம்பரங்களை நிமிடத்திற்கு ஒரு தரம் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளின் கைவண்ணத்தில் சிறு குழந்தைகள் முதல் பதின் பருவ குழந்தைகள் வரை சத்தான காய்கறிகள் சாப்பிட மறுக்கின்றனர். இது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாகவே இருக்கிறது. இதில் இத்தனை சத்துக்கள் இருக்கிறது என்று சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை.

    சத்து இல்லாத பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கும் குப்பை உணவுகளை உண்டு அந்த ருசிக்கு அடிமையான பின்பு காய்கறிகள் மற்றும் பழங்களின் சுவை பிள்ளைகளுக்கு பிடிக்காமலேயே போய் விடுகிறது. ஆனால், அதற்காக அப்படியே அவர்களை விட்டுவிட முடியாது. உறுதியான உடலுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் அவசியம். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

     1. முதலில் பிள்ளைகளை சாப்பிட வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். தனக்கு பசி இல்லை என்று சொன்ன பின்பு அவர்களை வற்புறுத்த வேண்டாம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    2. சாப்பிடும்போது, முக்கியமாக டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டோ அல்லது செல்போனை பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை முதலில் இருந்தே ஊக்கப்படுத்தக் கூடாது. தட்டை பார்த்து சாப்பிடும்போதுதான் உணவின் சுவை தெரியும்.

    3. இரண்டு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு தனி தட்டு கொடுத்து குடும்பத்தினருடன் சேர்த்து அமர வைத்து உணவு தர வேண்டும். அப்பா, அம்மா மற்றும் பெரியவர்களின் தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் காய்கறிகளை பார்த்து குழந்தையும் சாப்பிட ஆரம்பிக்கும்.

     4. சில காய்களின் சுவைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காது. காய்களின் வண்ணங்கள் மற்றும் அவை செய்திருக்கும் முறையை பார்த்தாலே அவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். கேரட், பீட்ரூட் போன்ற இனிப்பான காய்கறிகள் மற்றும் சுவையான உருளைக்கிழங்கு போன்றவற்றை சுலபமாக பிள்ளைகள் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான முறையில் அது இருக்க வேண்டும்.

    5. தட்டில் காய்களை பரிமாறும்போது நிறைய அளவு வைக்காமல் கொஞ்சமாக முதலில் வைக்க வேண்டும். அவற்றை சாப்பிட்டு முடித்த பின்பு அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

    6. சில அம்மாக்கள், 'நீ இந்த காய் சாப்பிட்டா சாக்லேட் தருகிறேன். பாப்கார்ன் தரேன். பிஸ்கட் தரேன்' என்று அவர்களை தவறான வழியில் ஊக்குவிப்பார்கள். கடமைக்கு அந்த காய்கறிகளை விழுங்கி விட்டு நொறுக்கு தீனிக்கு ஆசைப்பட்டு குழந்தைகள் நிற்கும். அந்த காய்களை பிடிக்காமல் போய்விடும்.

    7. சரியான நேரத்திற்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த நொறுக்கு தீனியும் குளிர்பானங்களும் கொடுக்கக் கூடாது. சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.

    8. காய்கறிகள் கூட்டு போன்றவற்றை பரிமாறும்போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டு விட்டு காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.

    9. காய்கறி வாங்க கடைகள் அல்லது மார்க்கெட்டுக்கு செல்லும்போது உடன் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களையே காய்கறிகளை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். காய்கறிகளை கண்களால் பார்க்கும்போது குழந்தைகளுக்கு அவற்றின் மீது ஒரு ஈர்ப்பு, விருப்பம் உருவாகலாம்.

    10. ஏழெட்டு வயது குழந்தை என்றால் அதை காய்கறிகள் நறுக்கும்போது உதவிக்கு அழைக்கலாம். மேல் தோல் சீவி விட்டு சிறிது சிறிதாக நறுக்கச் சொல்லி ஊக்கம் தரலாம்.

    11. கதை சொல்வது போல அதில் உள்ள சத்துக்களை பற்றி எடுத்துச் சொல்லலாம். கேரட் சாப்பிட்டால் நல்லா கண்ணு தெரியும். உன் முகம் பளபளப்பாகும். கீரை சாப்பிட்டால் மூளை நல்லா வேலை செய்யும், முடி வளரும் என்பது போல சொல்லலாம்.

    12. காய்கறிகள் செய்யும்போது இரண்டு விதமான காய்கள் செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு காய் பிடிக்காவிட்டால் கூட, இன்னொன்றை சாப்பிடச் சொல்லி சொல்லலாம்.

    13. காய்கறிகள் சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர காய்கறிகளை அவர்கள் உண்ணும் உணவில் சேர்த்து விட வேண்டும். பீட்ரூட், கேரட், கீரை பொரியல்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவற்றை சாதத்தில் கலந்து கொடுக்கலாம். தோசை ஊற்றும்போது பீட்ரூட் பொரியலையோ கேரட் பொரியலையோ தூவி தோசை செய்து கொடுக்கலாம். பார்க்க வண்ணமயமாக இருக்கும். சுவையாகவும் இருக்கும். அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.

    14. வெரைட்டியாக காய்களை செய்து கொடுக்கலாம். காய்களை சூப்பில் போட்டுத் தரலாம். சப்பாத்தி ரோலில் காய்களை வேகவைத்துக் கொடுக்கலாம்.

    ×