search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொங்கலோ... பொங்கல்
    X

    பொங்கலோ... பொங்கல்

    தமிழர்களின் திருநாளாக, உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக, இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாடுவோம்.

    தைப்பொங்கல்

    தை மாதத்தின் பிறப்பை அறுவடை திருநாளாக, பொங்கல் தினமாக உலக தமிழினம் கொண்டாடி வருகிறது. பொங்கல் என்பதற்கு “பொங்கிப் பெருகி வருவது” என்று பொருள். தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் பொங்கல் பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் மூன்று முக்கிய அம்சங்கள், கரும்பு, ஜல்லிக்கட்டு, இனிப்பு பொங்கல்தான்.

    இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது. கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின்போதுதான் மவுசு அதிகம். தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது. பொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி, 2-ம் நாள் பொங்கலிடும் நாள், 3-வது நாள் மாட்டுப் பொங்கல்.


    பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழைய பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். “அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    2-வது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். பானை பொங்கி வரும்போது குலவையிட்டும், “பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக” என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும். நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.

    3-வது நாள் விழா மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூசி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் படைக்கப்படும்.

    ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. ஆன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டு பொங்கலின்போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு ஆகியவை ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றவை. இதில் அலங்காநல்லூர் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு களமாகும்.

    இதுதவிர 4-வது நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்குமிடங்களுக்கும் இந்த நாளில் மக்கள் போவது வழக்கம்.

    தமிழர்களின் திருநாளாக, உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக, இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாடுவோம்.
    Next Story
    ×