search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
    X
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் நாளை ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது

    மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் கொட்டாரத்தில் இருந்து நாளை ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும் சபரிமலையில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

    முக்கிய நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    மகர விளக்கு பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் பந்தளம் கொட்டாரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டகங்கள், நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்படுகிறது. இதையொட்டி வழிநெடுகிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    பந்தளத்தில் தொடங்கும் இந்த ஊர்வலம் சுவாமி ஐயப்பனின் பாரம்பரிய பெருவழிப்பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைபயணமாக பம்பையை சென்றடைகிறது.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பக்தர்கள் புடை சூழ, சரண கோஷம் முழங்க 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி அளவில் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதைக்காண ஏராளமான பக்தர்கள் திரண்டு இருப்பார்கள். அதன் பின்னர் மகர ஜோதி தரிசனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சபரிமலையில் நடைபெறும் மற்றொரு முக்கிய வழிபாட்டினை, “பம்பை விருந்து-பம்பை விளக்கு” என்று அழைக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் கொண்டு வரும் அரிசி மற்றும் பொருட்களை கொண்டு பம்பை நதிக்கரையில் சமையல் செய்து, சாமிக்கு படைத்து, பஜனை பாடல்கள் பாடி வழிபடுவார்கள். பின்னர் பக்தர்களுக்கு உணவை வழங்குவது பம்பை விருந்தின் சிறப்பு அம்சமாகும்.

    இதே போல் மாலை நேரத்தில் மூங்கில்களால் வடிவமைக்கப்பட்ட 2 அடி உயர சிறிய தேரை பலூன்களால் அலங்கரித்து, அதில் மெழுகுவர்த்திகளை ஏற்றுவார்கள். சுவாமி ஐயப்பன் மன்னருக்கு காட்சி தந்த பம்பை நதியில், அந்த சிறிய தேரை மிதக்க விட்டு மகிழ்வார்கள். இதுவே பம்பை விளக்கு வழிபாடாகும். இந்த ஆண்டுக்குரிய பம்பை விருந்து, பம்பை விளக்கு வழிபாடானது நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
    Next Story
    ×